ஞாயிறு, 15 அக்டோபர், 2017

சாயக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம்!

சாயக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம்!
மின்னம்பலம் : சாயக்கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் விதிக்கப்படும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை கழிவுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், லாரிகள் மூலம் திண்டுக்கல் துரைக்குளத்தில் கொட்டப்படுவதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறன. அதுவும், பகல் நேரத்தில் சாயக்கழிவுகளை கொட்டினால் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும் என்பதால், நள்ளிரவில் சாயக்கழிவுகள் கொட்டப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இவ்வாறு கொட்டப்படும் சாயக் கழிவுகளால் சவேரியார்பாளையம் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், காற்றின் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை, முதியோர்களுக்கு எளிதில் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று(அக்டோபர் 15) திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், சாயக்கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் விதிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இங்கு டெங்குவால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சாயக்கழிவு கொட்டுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் நேற்று(அக்டோபர் 14) சாயப்பட்டறை கழிவுகளை கொட்ட வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினமும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: