ஞாயிறு, 15 அக்டோபர், 2017

கௌரி லங்கேஷ் வழக்கு விசாரணை முறையான முடிவை எட்டாது.. பத்திரிகையாளர் சிவசுந்தர்!

thetimestamil : லங்கேஷ் பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராகவும் ,கௌரி லங்கேஷூடன் இணைந்து பணி ஆற்றியவருமான சிவசுந்தர்  பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 8ஆம் தேதி பேசினார். தமிழ்நாடு பண்பாட்டு பேரவையும் , சென்னை பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பத்திரிகையாளர் சிவசுந்தர்
2014 மே மாதம் முதல் 2017 மே மாதம் வரை ( மோடி பிரதமரானதிலிருந்து ) 154 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷை கொன்ற  கொலையாளிகள் தண்டிக்கப்படலாம்.ஆனால்  இந்தக் கொலைகளை பின்னிருந்து இயக்கிய சூத்திரதாரிகள் கண்டுபிடுக்கப்படபோவதில்லை.எனது கவலையெல்லாம் அடுத்ததாக யார் கொல்லப்பட போகிறார்கள் என்பதுதான்.
கௌரி லங்கேஷூற்கு ” அன்னா பொலிட்கோவஸ்கியா ” விருது வழங்கப்பட இருக்கிறது. இது ரஷ்ய நாட்டு பத்திரிக்கையாளரின் நினைவாக 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் உயரிய விருதாகும்.

அவர் இறந்த மறுநாளே ஏறக்குறைய எல்லா தாலுக்காக்களிலும்  கர்நாடகத்தில் இந்த படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர் இறந்த மறுவாரம் 25000 பேர் கலந்து கொண்ட மிகப்பெரிய ஊர்வலம பெங்களூருவில்  நடைபெற்றது.
அவர் களத்திற்கு வந்த காலத்தில் இந்துத்துவா சக்திகள் மேலோங்கி இருந்தன. இடதுசாரி சக்திகள் பலவீனமாக இருந்த காலம். ஆனாலும் அவர் கடினமான பாதையைத்தான் தேர்ந்து எடுத்தார.ஒரு வேளை வணிக பத்திரிகையில் தொடர்ந்து இருந்திருந்தால் நல்ல வளமான வாழ்வில் இருந்திருப்பார்.
பத்திரிக்கையாளர்கள் உண்மையைத்தேட வேண்டும் ; களத்தில் பணி புரிய வேண்டும்; நிலைபாடு எடுக்க வேண்டும் என்று கூறுவார். அப்படித்தான் அவர் 12 ஆண்டுகாலம் பத்திரிக்கையை நடத்தினார்.அவருடைய பத்திரிக்கை  மற்ற பத்திரிக்கைகளுக்கு ” வாராந்திர ஆபத்தாக ” இருந்தது.
அவர் நடத்திய லங்கேஷ் பத்திரிக்கைக்கு விளம்பரம் மூலம் வருமானம் கிடையாது. விற்பனை மூலம்தான் வருமானம். மாதந்தோறும் மாதத்தின் முதல் நாள் பணியாற்றும் ஊழியருக்கு சம்பளம் கொடுத்துவிடுவார்.
சிக்மகளூர் மசூதியை பாதுகாக்க போராட்ட அறைகூவல் விடப்பட்டு இருந்தது. இதனை முறியடிக்கும் முயற்சியில் எஸ்.எம்.கிருஷ்ணா அரசு இருந்தது. ஆனாலும் பர்தா அணிந்து மாறுவேடத்தில் சென்று  காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி சிறை சென்றார். இதுதான அவரது முதல் சிறைஅனுபவம். சிறையிலிருந்துதான் தனது பத்திரிக்கைக்கு அந்த வார செய்தி அனுப்பினார்.
150 அமைப்புகள் இணைந்து ” கர்நாடகா சமூக நல்லிணக்க அமைப்பு ” உருவானதில் முக்கிய பங்காற்றினார். பல்வேறு எண்ணவோட்டங்கள்  உள்ள அமைப்புகளை இணைக்கும் சங்கிலியாக அவர் இருந்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
செய்திப் பதிவு: பீட்டர் துரைராஜ்

கருத்துகள் இல்லை: