வியாழன், 19 அக்டோபர், 2017

தீபாவளி வெடிகளால் மிரளும் குழந்தைகள்: குருவி, நாய், பூனை, மாடு, ஆடுகள் எல்லாம் உங்கள் குழந்தைகள்தான்

நந்தன் ஸ்ரீதரன் : அறிவு தெளிந்தபின் தீபாவளியை கொண்டாடுவதே இல்லை.. எந்த பண்டிகைகளையும்தான். தீபாவளிக்குப் போடும் வெடிகள் மீது பெரும் கோபம் வேறு இருப்பதால் தீபாவளி நெருங்கும்போதே எப்படா இந்தப் பண்டிகை கடக்கும் என்று தோன்றத் துவங்கிவிடும். இத்தனைக்கும் ஒரு தீபாவளி அமாவாசை அன்று பிறந்தவன் நான்.
ஆயினும் இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்.. அம்மா எங்க வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்தாள். கூடவே அப்பாவும்தான்..
பக்க வாத பாதிப்புக்குப் பிறகு தத்தித் தத்தி நடை பழகுகிறாள். அவளுக்கு நானும் மீனாளும் உதவிகள் செய்வது என் குழந்தைப் பருவத்தில் அவள் செய்த உதவிகளை பதில் செய்வது போல இருக்கிறது.
அப்பா நாய்களுக்கு கொஞ்சம் பயப்படுவார். அம்மா அப்படி இல்லை.. எங்கள் செல்லங்கள் எல்லாம் அவளுக்கும் செல்லம்.. அனால் பாதிப்பு இன்னும் முழுதாக நீங்க வில்லை என்பதால் இவர்களது ரவுசுகளோடு மல்லுக்கட்ட அவளால் முடிவதில்லை..

அதிலும் டேனி டோடோ அம்மா மீது பாய்ந்து நக்கிதான் அன்பைத் தெரிவிப்பார்கள். நிற்கவே கஷ்டப் படுபவள் இது மாதிரி இருபது கிலோ அன்புகளை தாங்க முடிவதில்லை..
வெள்ளச்சி பெற்ற ஏழு குட்டிகளும் அம்மாவுக்கு பெரிய சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொன்றாக எடுத்துத் தந்தால் அன்போடு வருடிக் கொடுக்கிறாள். அவள் மடியேறிவிட்டால் யாரும் இறங்க மாட்டேன் என்கிறார்கள். அதிலும் டெடி என்று நாங்கள் பெயரிட்டிருக்கிற குட்டி அம்மாவின் தோளில் ஏறி விட்டால் அவள் கழுத்தை நக்குகிறான்...
அவர்களை வருடிக் கொடுப்பது அவளது வலது கைக்கு பெரிய மருத்துவம் என்பது எனது நம்பிக்கை அதனாலேயே தினமும் குட்டிகளை அவளிடம் கொடுப்பேன். அவளும் தனது வலது கையால் அவர்களை வருடிக் கொடுப்பாள்.
இத்துனூண்டு இருக்கிறார்கள். அம்மாவை இன்று காரேற்றப் போகிறபோது ஙய்யா ஙய்யா என்று பின்னாலேயே ஓட ஆரம்பித்து விட்டார்கள். அம்மா புன்னகையுடன் காரேறிச் சென்றாள்.
படத்தில் டெடி அம்மாவின் தோளில் வசதியாக படுத்திருக்கிறான். அம்மா பிள்ளையை அணைப்பது போல அணைத்திருக்கிறாள்..

கருத்துகள் இல்லை: