திங்கள், 25 செப்டம்பர், 2017

கீழடி வரலாற்றை மண்போட்டு மூட .. மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகின்றன!

கீழடி அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் செயலில் மத்திய மாநில அரசுகள் கைகோர்த்துச் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
“மூன்று கட்டங்களாக நடைபெற்றுவந்த கீழடி ஆராய்ச்சியில் தமிழ்மொழி, தமிழர் கலாச்சாரம் தொடர்புடைய ஆதாரபூர்வமான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகள், மத்தியில் உள்ள பாஜக அரசு புகுத்த நினைக்கும் காவிக் கொள்கைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அந்த அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது” என்று ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
“மிகச் சிறந்த முறையில் அகழாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை வேறு மாநிலத்திற்குக் கொண்டுசெல்ல முயற்சித்தார்கள்.

அப்போதே அமைச்சர் மங்கேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதி, ‘அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது’, என்று வேண்டுகோள் விடுத்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர், ‘அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாது’ என்று உறுதியளித்தார்.
ஆனால் மத்திய அமைச்சரின் உறுதிமொழியை மீறி, இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராமன், ‘மூன்றாவது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் வேறு எந்தப் பொருட்களும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்படும்’ என்று கூறியிருப்பதும், ‘அப்படி நிறுத்தப்படுவதற்கு அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை’ என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்திருப்பதும் வியப்பாக இருக்கிறது.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான மிக முக்கியமான அகழ்வாராய்ச்சியில் மத்திய - மாநில அரசுகள் கைகோர்த்து அந்தப் பணிகளுக்குத் தடை ஏற்படுத்த எப்படியெல்லாம் முற்படுகின்றன என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அகழாய்வுப் பணிகளுக்குப் போதிய நிதி ஒதுக்காமல், தொல்லியல் துறை அதிகாரியை திடீரென இடமாற்றம் செய்து, புதிதாகப் பொறுப்பேற்ற அதிகாரி மூலம், ‘முந்தைய அகழாய்வில் கிடைத்த பொருட்களின் தொடர்ச்சி கிடைக்கவில்லை’ என்று ஒரு பேட்டியைக் கொடுக்கவைத்து, அகழாய்வுப் பணிகளை முற்றிலும் சீர்குலைக்கவே பாஜக அரசு விரும்புகிறது.
2200 ஆண்டுகளுக்கும் முன்பான தமிழர்களின் பண்டைய நாகரிகம், கட்டிடக் கலைகள் போன்ற அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட ஒரு அகழாய்வுப் பணியில், இவ்வளவு குழப்பங்களை மத்திய தொல்லியல் துறை ஏதோ தன்னிச்சையாகச் செய்கிறது என்பதை நம்ப நான் தயாராக இல்லை. கீழடி அகழாய்வின் மூன்றாவது கட்டப் பணிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல், தொடர்ந்து நடத்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என ஸ்டாலின் கூறியுள்ளார்  மின்னம்பால்ம்

கருத்துகள் இல்லை: