வியாழன், 28 செப்டம்பர், 2017

மாணவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களுக்கு அழைத்துச் செல்ல தடை. உயர்நீதிமன்றம்

அரசு நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அந்த தடை உத்தரவினை உறுதிசெய்து தற்போது தீர்ப்பளித்துள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை அரசு கடந்த ஜூலை முதல் நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்வதாகக் கூறி, அதற்கு தடைவிதிக்கக் கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வதற்கு தடைவிதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினை பரிசீலனை செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவசர அவசரமாக நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மாணவர்களின் நலனுக்காகவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாணவர்களின் பல்வேறு விதமான திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் இந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். எனவே, இந்த பதில்மனுவை ஏற்று ஏற்கனவே வழங்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசுதரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். எலிசபெத் ராணியாக இருந்தாலும், இந்தியப் பிரதமராக இருந்தாலும் யார் கலந்துகொண்டாலும் அந்த நிகழ்ச்சிகளுக்கு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துவிட்ட மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது. எனவே, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்த இடைக்காலத் தடையை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்தின் பார்வையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சுயபெருமை பேசும் நிகழ்ச்சிகளாகவே நடத்தப்படுகின்றன. அதில், மாணவர்களின் தரத்தை உயர்த்துவது மாதிரியான எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. வேண்டுமென்றால், கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுபெறும் மாணவர்களை மட்டும் அவர்களது பெற்றோர்களின் அனுமதியோடு இதுமாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்லலாம். எனவே, இதுகுறித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும், இனி இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த மனுவையும் தமிழக அரசு வழங்கமுடியாதெனவும் கூறி, முன்னர் வழங்கியிருந்த இடைக்காலத்தடை உத்தரவை உறுதிசெய்து தீர்ப்பளித்தனர்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: