திங்கள், 25 செப்டம்பர், 2017

தினகரன் : ஜெயலலிதா விடியோ உள்ளன! அவர் எடைகுறைந்து நைட்டியுடன் இருந்ததால் வெளியிடவில்லை . கமிஷனிடம் கொடுப்போம்!

ஜெ சிகிச்சை வீடியோ: தினகரன்மின்னம்பலம் :ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை சசிகலா எடுத்து அதை அவரிடம் காண்பிக்கும் வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளன. ஜெயலலிதா எடை குறைந்து நைட்டியுடன் இருந்ததால் அந்தக் காட்சிகளை வெளியிடவில்லை. ஆனால் விசாரணை ஆணையம் விசாரித்தால் அதை ஒப்படைப்போம் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவைப் பார்த்ததாகப் பொய் கூறினோம் என்றும், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென வலியுறுத்திவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் இன்று(செப்டம்பர் 25) அடையாரிலுள்ள தினகரன் இல்லத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் ஆலோசனை மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் அப்பல்லோ நிர்வாகத்திடம்தான் இருக்கும். ஆனால் எங்களிடம் உள்ளது வீடியோ காட்சிகள். சசிகலாவே எடுத்த வீடியோ உள்ளது. அப்பல்லோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். அதை சசிகலா படம்பிடித்து ஜெயலலிதாவிடமே காண்பித்த காட்சிகள் உள்ளன. எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருந்தபோது வெளியிட்டதுபோல அந்தக் காட்சிகளை வெளியிடுமாறு சிலர் எங்களிடம் கேட்டனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குறை கூறுபவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க இந்த காட்சிகளை பயன்படுத்த வேண்டும் என்பதை சசிகலா நிராகரித்துவிட்டார். ஆனால் நீதிவிசாரணை நடத்தப்படும் நேரத்தில் இந்த காட்சிகளை ஒப்படைக்கலாம் என்று எனக்கு அனுமதி தந்துள்ளார்.
அந்தக் காட்சிகளைத் தற்போது வெளியிட்டால், அது போர்ஜரி என்றும், தினகரன் ஏன் இத்தனை நாட்கள் அதை வெளியிடவில்லை என்றும் விவாதம் நடத்துவார்கள்.எனவே எங்கே கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுக்க தயாராக உள்ளேன்.
விசாரணை ஆணையம் விசாரித்தால் முதலில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நபர் அமைதிப்படை பன்னீர்செல்வம்தான். ஏனெனில் அவர்தான் முதல்வராக இருந்தார். எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, பன்னீர் நடத்திய தர்மயுத்தம் எல்லாம் வெறும் பதவிக்காக மட்டுமே என்றும் தெரிந்துவிட்டது. எனவேதான் இந்த ஆட்சியை ஒழித்துக் கட்டுங்கள் என்றும், துரோகிகளின் ஆட்சி இருக்கக் கூடாது, இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றும் பலர் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி வேண்டாம், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியையே பயன்படுத்தலாம். சிபிஐ, இண்டர்போல் என அனைவரும் அமைச்சர்களை விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும். எடப்பாடியுடன் இருப்பவர்கள் எல்லாம், ஆட்சி அவரிடம் உள்ளது என்பதற்காகவே அங்கே இருக்கிறார்கள். நான் குடகு சென்று வருவதற்குள் ஜெயலலிதா மரணம் பற்றி பிரச்னை கிளம்பியுள்ளது. அதாவது சரியான தேதி பார்த்து மருத்துவமனையில் அனுமதித்ததாகக் கூறுகிறார்கள். இது திட்டமிட்ட சதி. இதை இன்றைய இளைஞர்களே வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் முறியடிப்பார்கள்.
ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஒரு மாதகாலம் தாமதப்படுத்தியுள்ளார். இதனால் தமிழகத்தில் மத்திய அரசுக்கு மோசமான பெயர் வந்துள்ளது. உண்மையிலேயே தைரியசாலியாக இருந்தால் சசிகலா கொடுத்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி மெஜாரிட்டியை நிரூபித்தால் நாங்கள் அவரைத் தலைவர் என்று ஒப்புக்கொள்கிறோம்" என்று தினகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: