செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஒடிசாவின் கடைசி வரி குதிரை பலி!

ஒடிசாவின் கடைசி வரி குதிரை பலி!மின்னம்பலம் : ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நந்தன்கனன் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 1960இல் நிறுவப்பட்டு 1979ஆம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. வெள்ளை புலிகள், ஆசிய சிங்கம், மூன்று இந்திய முதலைகள், சங்கால் சிங்கம், நீலகிரி லங்கூர், எறும்புண்ணி, சுட்டி மான், பறவைகள் மற்றும் மீன்கள் ஆகியவை உள்ளன. இந்தப் பூங்காவில் 67 வகையான பாலூட்டிகள், 81 வகையான பறவையினங்கள், 18 வகையான ஊர்வன உள்ளன.

இந்த நிலையில், பூங்காவில் இருந்த ஒரே ஒரு வரி குதிரை நேற்று காலை (செப்டம்பர் 25) இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டரை வயதான வரி குதிரை மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், அதன் உடலில் பல காயங்கள் உள்ளன. எனவே, பிரேத பரிசோதனைக்கு பிறகே வரி குதிரை இறந்ததற்கான காரணம் தெரியவரும். விலங்கு பரிமாற்றம் திட்டத்தின்கீழ் மற்ற பூங்காவில் இருந்து இந்த பூங்காவுக்கு வரி குதிரையைக் கொண்டுவர அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
2015ஆம் ஆண்டு இஸ்ரேலின் டெல் அவிவ் மிருகக்காட்சிச் சாலையில் இருந்து நான்கு வரி குதிரைகள் நந்தன்கனன் விலங்கியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மூன்று வயதான பெண் வரி குதிரை உடல்நலக் குறைவால் இறந்தது. அதே ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இரண்டு வயது பெண் வரி குதிரை இறந்தது. கடந்த மே 30ஆம் தேதி, வயிற்றுத் தொடர்பான நோயினால் இரண்டரை வயது ஆண் வரி குதிரை இறந்தது.
தற்போது, இந்தப் பூங்காவில் பார்வைக்கு வைக்க வரி குதிரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: