செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

குஜராத் ..ராஜ்யசபா தேர்தலில் முறைகேடு: காங்கிரஸ் புகார்

மின்னம்பலம் :பொதுத் தேர்தலை மிஞ்சும் ட்விஸ்டுகளை சந்தித்து வருகிறது குஜராத் ராஜ்யசபா தேர்தல்.
குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இன்று ஆகஸ்டு 8 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
பாஜக சார்பில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பல்வந்த்சிங் ராஜ்புத் மற்றும் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குஜராத் மாநில எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பாஜக-வைச் சேர்ந்த அமித்ஷா, ஸ்மிருதி இராணியும், காங்கிரசைச் சேர்ந்த அகமது பட்டேல் ஆகிய ஆகியோரும் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலையில்... பாஜக தனது மூன்றாவது வேட்பாளராக பல்வ்ந்த்சிங் ராஜ்புத் என்பவரை நிறுத்தி, காங்கிரசின் அகமது பட்டேலை தோற்கடிக்கத் திட்டமிட்டது.

குஜராத் மாநில சட்டசபையில் பாஜக-வுக்கு 121 எம்.எல்.ஏ.-க்களும், காங்கிரசுக்கு 51 எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர். இந்தத் தேர்தலில், ஒரு எம்.பி. வெற்றி பெறுவதற்கு 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி பாஜக-வுக்கு 121 எம்.எல்.ஏ.க்களில் 90 பேர் போக மீதம் 31 பேர் உள்ளனர். காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே அகமது பட்டேல் வெற்றி பெற இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு தேவை. பாஜக-வின் 3-வது வேட்பாளரான பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு 31 ஓட்டுகளே கிடைக்கும். அவர் வெற்றி பெறுவதற்கு மேலும் 14 ஓட்டுகள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில்தான் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவால் 15 கோடி பேரம் பேசப்பட்டார்கள், மிரட்டப்பட்டார்கள் என்று பரபரப்பாகின. இதையடுத்து காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு சொகுசு ஹோட்டலுக்கு சென்று பாதுகாத்து, தேர்தலுக்காக குஜராத்துக்கு தருவித்தது.
இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும்... வாக்கு எண்ணிக்கை சிறிது கால இடைவெளியில் துவங்க வேண்டிய நிலையில்.. 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை துவங்கவே இல்லை.
இதற்குக் காரணம் காங்கிரஸ் தனது 44 எம்.எல்.ஏ.கக்ளில் இருவர் கட்சி மாறி ஓட்டளித்தார்கள் என்றும்... தேர்தல் விதிமுறைகளை மீறி தங்களது பேலட் பேப்பரை அமித் ஷா மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் காண்பித்தனர் என்றும் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டனர். வாக்குப் பதிவில் முறைகேடு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்க காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து... மாலை 5.43 க்கு தேர்தல் ஆணையர் வாக்கு எண்ணும் இடத்துக்கு வந்தார்.
அப்போது அவரிடம் காங்கிரஸ் தரப்பில் இரு எம்.எல்.ஏ.க்கள் மாறி ஓட்டளித்ததாகவும், ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு எம்.எல்.ஏ.வும் பாஜகவுக்கு கிராஸ் ஓட் செய்ததாகவும் முறையிட்டனர்.
இதையடுத்து நிலவிய சர்ச்சையால் இன்று மாலை 6.52 வரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டத்துக்கு தயாராக கட்சித் தொண்டர்கள் கூடிவிட்டனர்.

கருத்துகள் இல்லை: