ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

காதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை!

காதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை!
சேலம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணமாக அவரது குடும்பத்தினர் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(50) என்பவர் தனது மனைவி ராணியின்(45) சொந்த ஊரான தாண்டானூரில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மோகனா (21), ஆர்த்தி(19) ஆகிய மகள்களும், நவீன்குமர் (15) என்ற மகனும் இருந்தனர். இவரது மூத்த மகள் மோகனா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காகப் பயிற்சி வகுப்பிற்குச் சென்று வந்தார். ஆர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நவீன்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மோகனாவுக்கும் பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

எனவே, மோகனா வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன் தினம் ஆகஸ்ட்-4 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்கள் உயிருக்கு அஞ்சி காரிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தியும் அவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கள் விருப்பத்தையும் மீறி திருமணம் செய்து கொண்டதால் மன உளைச்சலில் இருந்த அவரது குடும்பத்தினர் இன்று ஆகஸ்ட்-6 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்று காலை நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது ராஜேந்திரன், அவரது மனைவி, இளைய மகள், மகன் ஆகிய நான்கு பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணத்தால் குடும்பத்தில் இருந்த நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜேந்திரனுக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இதில் மாயகிருஷ்ணன்,மாயகண்ணன் ஆகிய இருவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது இவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரிடையே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவுள்ளது மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: