ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி ... அமைச்சர் வேலுமணி கண்டனம்!

அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அது உறுதியாக நடக்காது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அதிமுக மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு விடுத்த கெடு முடிந்த நிலையில் தினகரன், அதிரடியாக புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “அதிமுக ஆட்சியை வீழ்த்த நினைத்தால், வீழ்ந்து போவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் இன்று (ஆகஸ்ட் 6) நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அங்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 100 நாள்களில் 2,000 கோப்புகளுக்கு முதலமைச்சரால் கையெழுத்திடப்பட்டுத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியை சிறப்பான முறையில் சமாளித்து வருகிறோம். ஆட்சியைக் கவிழ்த்து, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அது உறுதியாக நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: