வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தரமணி . ஆண் - பெண் பற்றிய பேசு பொருளில் உள்ள ஒரு விஷயம்

சிறப்புப் பேட்டி: தமிழ் சினிமாவின் மறுபக்கம்! (பகுதி 1)மின்னம்பலம் :சிறப்புப் பேட்டி: தமிழ் சினிமாவின் மறுபக்கம்! (பகுதி 1)
‘தரமணி’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 11) ரிலீஸாகிறது. படம் எப்படிப்பட்டதென்பதைப் பற்றிப் படமே பேசும் என்பதால், இத்தனை சர்ச்சைகளைத் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் சதீஷ்குமாரைச் சந்தித்தோம். வழக்கமான கேள்விகளைத் தவிர்த்து, ‘சினிமா எந்த நிலையில் இருக்கிறது? அதன் எதிர்காலம் என்ன?’ என்ற மறுபக்கத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தோம்.
தமிழ் சினிமாவில் படம் எடுக்க இரண்டு வழிகள் இருக்கு. ஒன்று, வெற்றி பெறும் குதிரையின்மீது பந்தயம் கட்டுறது. இல்லைன்னா, ஒரு குதிரையை வளர்த்து அதை வெற்றிபெறச் செய்வது. இதில் தரமணி எந்த வகையான படம்?
நீங்க சொன்னதுல இரண்டாவது ஆப்ஷன்தான் ‘தரமணி’ படம். வளர்த்து வெற்றிபெற வைக்கலாம்னு நம்பிக்கையோட செய்த ஒரு படம். அதனுடைய சக்சஸ் ரேட் ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் தெரிஞ்சுக்கிட்டே இருந்தது. இது ஆண் - பெண் பற்றிய கரன்ட் டிரென்ட்ல உள்ள ஒரு விஷயம். இது ஐ.டி. ஃபீல்டுல வேலை செய்பவர்களைப் பற்றிய படமான்னு கேட்டா, முழுமையா அதுதான்னு சொல்ல முடியாது. அப்ப இது ஒரு லவ் ஸ்டோரியான்னு கேட்டீங்கன்னா, அதுக்குள்ளவும் இந்தப் படம் அடங்காது. இப்படி எந்த வரையறைக்குள்ளவும் தன்னை நிறுத்திக்காம, ஆண்கள் எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. பெண்கள் எப்படி எப்படி வாழ்ந்துக்கிட்டிருக்காங்க அப்படிங்குற சமூகத்தைப் பற்றிய கதைதான் இது.
தரமணி மாதிரியான ஏரியாவில் தொடங்குற கதை. அதனால தரமணி பெயரையே வெச்சிடலாம்னு முடிவு செய்தோம். ராம், தேசிய விருது வாங்கியதற்குப் பிறகு ‘தரமணி’ படத்தை எடுத்தோம். எந்த ஆர்ட்டிஸ்டைக் கேட்டிருந்தாலும் கால்ஷீட் கொடுத்திருப்பாங்க. ஆனால், இது ஹீரோயினை அடிப்படையாகக் கொண்ட கதை. ஹீரோயினே ஹீரோவைக் கண்ட்ரோல் பண்ணிடுவாங்க. ஆனால், இதை பெரிய ஹீரோக்கள் செய்ய மாட்டாங்க. அதனால கதையை முக்கியமா நினைக்கும் ஹீரோவான வசந்த்தை நடிக்க வெச்சோம். என்னைப் பொறுத்தவரைக்கும் கண்டிப்பா தரமணி வெற்றிபெறும்.

எந்தக் காட்சியையும் கட் பண்ணாம A சர்டிஃபிகேட் வாங்கிய தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்குப் படத்தின் பிசினஸ் முக்கியமில்லையா?
அப்படி சொல்லிட முடியாது. நான் இந்தப் படத்துல போடுற காசை எடுத்தாதான், இந்த இண்டஸ்ட்ரில அடுத்தடுத்து படங்கள் பண்ண முடியும். நாம சர்வீஸ் பண்றதுக்காக வரல. பிசினஸ் பண்றோம். ஆனா, அந்த பிசினஸைப் பொறுப்புணர்வோட பண்றோம். நான் பாக்குறது என்னன்னா, நான் பண்ற படங்கள் எதிர்காலத்துல ஒரு லைப்ரரி (நூலகம்) மாதிரி இருக்கணும். சிறந்த லைப்ரரின்னு சொல்ற மாதிரியான படங்களா இருக்கணும். அதே சமயத்தில லாபம் கிடைக்கணும்னு பண்ற தொழில்தான் இது.
லாபமே கிடைக்கலைன்னாலும் பண்ணுவேன்னு சொல்றது முட்டாள்தனம். ஆனால், அந்த பிசினஸிலும் சில கொள்கைகள் வெச்சிருக்கோம். இது இப்படித்தான் பண்ணணும்னு. அதனாலதான் நான் பண்ண படங்கள் எல்லாமே தொட்டுப்பாக்க முடியாத இடத்துல இருக்கு. ‘ஆரண்ய காண்டம்’ படம் எப்படிப்பட்டதுன்னு மக்களுக்குத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படம் ஜெயிக்கும்னு படம் பார்க்கும்போதே எனக்குத் தெரிஞ்சுது. அதன் பிறகுதான் அந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து வரத் தொடங்கின. இந்தப் படங்கள் எனக்கு பெயரும் கொடுத்திருக்கு, அதேசமயம் ஹிட் அடிச்சிருக்கு. இன்னிக்கு என் லைப்ரரில இந்த மாதிரியான படங்கள்தான் இருக்கு.

சென்சார் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? படைப்பாளிகளுக்கும், சென்சார் அதிகாரிகளுக்குமிடையே ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?
சென்சாருக்கு நிலையான வரைமுறைகள் தேவை. ஒவ்வொரு படத்துக்கும் சென்சார் தேவைங்குறதுல எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஒரு படத்தை தியேட்டர்ல பார்க்கப் போகும் மக்களுக்கு இது இப்படிப்பட்ட படம்னு சொல்லவேண்டிய கடமை அவங்களுக்கு இருக்கு. இதை நாங்க மதிக்கிறோம். ஆனா, அதே நேரத்துல ஒரு படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுது. நான் பண்ணியிருக்கும் படமெல்லாம் பொறுப்புணர்ச்சியோட பண்ணிருக்கேன். ஆபாசம் இருக்காது; டபுள் மீனிங் வசனங்கள் இருக்காது. இப்படி இருக்க, நாங்க எடுத்தப் படத்தை முழுசா கொண்டு போய் சேர்த்தால்தான் நாங்க சொல்லவந்தது முழுசா ரீச் ஆகும். ஆனா, இவங்கப் படத்துக்கு மேல இருக்க டாப்பிங்ஸ் எல்லாத்தையும் எடுக்க சொல்றாங்க. அப்பறம் டயலாக்கை வேற மாத்துங்கன்னு சொல்றாங்க. இதை மாத்திடுங்க. இதை மியூட் பண்ணிடுங்க என்கிறாங்க. இதை கொஞ்சம் டிரிம் பண்ணி ஷார்ட் பண்ணிடலாம்னு சொல்றாங்க. என்னோட ஒரே கேள்வி என்னன்னா, இப்படியெல்லாம் பண்றதுக்கு பதிலா ஒரு படம் எடுக்குறதுக்கு முன்னாடி கவர்ன்மெண்ட் கிட்ட ஸ்கிரிப்ட் புக் கொண்டுபோய் கொடுத்துட்டு இதைப் பண்ணலாம், பண்ணக் கூடாதுன்னு கேட்டுட்டு வந்து படம் எடுக்கலாம்ல? இது சுதந்திரத்தையே அடியோட பிடுங்கிப் போடுற விஷயம்தான்.
மியூட் பண்றதுகூட பெரிய விஷயம் இல்லை. டிரிம் பண்ணுங்கன்னு அசால்ட்டா சொல்லிடுறாங்க. அவங்க கண்ணுக்கு அது வெறும் 30 நொடிக் காட்சியா தெரியலாம். ஆனால், அந்த 30 நொடிக்கு நான் செலவு பண்ண பணம் எங்கே? அந்த 30 நொடிக் காட்சியை நான் இரண்டு நாள் ஷூட்டிங் எடுத்திருப்பேன். அந்தப் பணம் என்ன ஆகுறது? அதற்காக கொடுத்திருக்க யோசனை, உழைப்பு எல்லாமே வீண் தானா? சரி, அப்படியே இருந்தாலும் ஒரு ஒழுங்குமுறை இருக்கணும். காலால அடிச்சு மிதிச்சா U/A அல்லது A சர்டிஃபிகேட். அப்படி இல்லைன்னா அந்த சீனை கட் பண்ணணும்னு சொன்னா, எனக்கும் அதுதான் இருக்கணும். வேற எந்த ஹீரோ படமா இருந்தாலும் அதுதான் இருக்கணும். அந்தப் பெரிய நடிகர் படத்துல இருக்க அந்த மாதிரி காட்சிக்கு U சர்டிஃபிகேட். எனக்கு மட்டும் U/A சர்டிஃபிகேட்டுன்னா நான் எப்படி ஏத்துக்குவேன். இதுல, வேறு எந்த படத்துடனும் ஒப்பிடக் கூடாதுன்னு சொல்லிடுறாங்க. அப்ப வேற படத்துக்கு வேற மாதிரி இருக்குன்னுதானே அர்த்தம். ஏன் எல்லாப் படத்துக்கும் ஒரே மாதிரி சர்டிஃபிகேட் கொடுக்க முடியல? இது சர்வாதிகாரப் போக்கு இல்லாம வேற எதுக்குள்ள வரும்னு சொல்லுங்க.
நியாயமா பார்த்தால் யூடியூப், வாட்ஸ் அப் இதுக்கெல்லாம்தான் சென்சார் தேவை. இவையெல்லாமே மக்களின் வீட்டுக்குள்ள நேரா போகுது. தியேட்டருக்கு மக்களாகத்தான் வர்றாங்க. இவங்க இப்படி பண்ணதாலதான், நான் சென்சார்ல அனுமதிக்காத காட்சியெல்லாம் யூடியூப்ல போட்டேன். எனக்கு நோட்டீஸ் அனுப்பினாங்க. சார் யூடியூப்ல நீங்க ஏதாவது ரெஸ்ட்ரிக்ஷன் வெச்சிருக்கீங்களா? நான் மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஆண் ராவாக மது குடித்தால் U, பெண் ராவாக மது குடித்தால் A சர்டிஃபிகேட் அப்படின்னு மத்தவங்களுக்குத் தெரியவைக்கிறேன். இனிமேல் படம் எடுக்குறவங்களுக்கு, பெண் மது குடிக்கிறா மாதிரி காட்சி வைக்காதீங்க. அப்படி வெச்சா A சர்டிஃபிகேட் கிடைக்கும்னு நான் சொல்லிட்டா, திரும்பத் திரும்ப சென்சாருக்கும் அதை கட் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது. தயாரிப்பாளர்களின் பணமும் மிச்சமாகும். Fk Youன்னு ஒரு வார்த்தை. அதற்கு பதிலா Fish Youன்னு சொல்லுங்கன்னு சொல்லியிருக்கோம். இனி எடுக்கும் படங்கள்ல, ரெக்கார்ட் செய்து, மியூட் செய்யும் வேலை மிச்சமாகுமில்லையா... ஒரு முத்தக் காட்சி இருக்கு. 2 நொடிக்கு அந்தக் காட்சி வருது. இப்படி வந்து, அப்படி போற காட்சி அது. அந்தக் காட்சியை ஷார்ட் பண்ணுங்கன்னு சொல்றாங்க. ரெண்டு நொடியை எப்படி ஷார்ட் பண்றதுன்னு நானும் ராமும் குழம்பிப்போய் உக்காந்தோம். இப்படித்தான் நடக்குது.
(உரையாடல் 1 மணி அப்டேட்டில் தொடரும்)
பேட்டி: சிவா

கருத்துகள் இல்லை: