வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இரோம் ஷர்மிளா : என் திருமணத்தை தடுப்பது ஏன் ?

இரோம் ஷர்மிளாவின் திருமணம் வரும் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெறவுள்ளதாக நேற்று (ஆகஸ்ட், 9) அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2௦௦௦ ஆம்ஆண்டு முதல் 2௦16 ஆம் ஆண்டு வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. சில மாதங்களுக்கு முன்பு தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அதைத் தொடர்ந்து, மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றார். அங்கு தங்கிய அவர் தமக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை. தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை மணக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், திருமணத்துக்குப் பிறகு கொடைக்கானலில் தங்கி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடப் போவதாகக் கூறி இருந்தார். இதனால் இவர்கள் திருமணத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் ராஜேசிடம் மனு அளித்தார்.

கடந்த வாரம் இந்து மக்கள் கட்சி இரோம் ஷர்மிளா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில், இடது பக்கம் என்ற அமைப்பின் சார்பாக நடைபெற்ற மனித உரிமை தொடர்பான கருத்தரங்கில் இரோம் ஷர்மிளா நேற்று (ஆகஸ்ட்,9) பங்கேற்றார். அப்போது அவர்,’ திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய திருமணத்திற்கான மூன்று சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளனர். என் திருமணம் கொடைக்கானலில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும். கொடைக்கானலிலேயே தங்கி தொடர்ந்து மனித உரிமைக்காகப் போராடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை இந்தியா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். கக்கூஸ் ஆவணப்படத்தில் இந்த நடைமுறை இருப்பதைச் சுட்டிக்காட்டிய திவ்யபாரதி மீது நடவடிக்கைகள் எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து தனது ஆதரவு இருக்கும். தமிழகம் மற்றும் இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: