திங்கள், 7 ஆகஸ்ட், 2017

இலங்கை துறைமுகம் சீனாவுக்கு 99 வருடகால குத்தகை கைச்சாத்து! காலி அம்பாந்தோட்டை ...

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்வகிப்பதற்காக சீன கம்பனியுடன் செய்து கொண்ட 1.1 பில்லியன் அமெரிக்க டொலருக்கான 99 வருடகால குத்தகை ஒப்பந்தம் கடந்தவார முக்கிய பேசு பொருளாக அமைந்தது.
அம்பாந்தோட்டைத் துறைமுகம். இலங்கையின் தென்பகுதியில் அமைந்த ஆழமான துறைமுகமாக இருந்த போதிலும் இத்துறைமுகத்திற்குக் கப்பல்கள் வருகை பெருமளவில் குறைந்திருந்தது. இத்தனைக்கும் ஆசிய ஐரோப்பிய கப்பல்பாதைக்கு 10 கடல் மைல்கள் தூரத்திற்குள்ளேயே இத்துறைமுகம் அமைந்துள்ளது.
இவ்வருடம் இதுவரை 10 கப்பல்கள் மட்டுமே ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. கடந்த வருடம் முழுவதிலும் 14 கப்பல்கள் மட்டுமே இங்கு தரித்து நின்றன. இதன் காரணமாகத்தான் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீன கம்பனியொன்றுக்கு 99 வருட குத்தகையில் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இந்த குத்தகை ஒப்பந்தத்தின்படி 30 சதவீத உரிமையை இலங்கை அரசாங்கமும் 70 சதவீத உரிமையை சீன வர்த்தக கம்பனியும் பெற்றுக் கொள்ளும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் 193 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வர்த்தக கடன்கள் மூலமே இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. அதனை வருடாந்தம் 9.1 பில்லியன் ரூபா என்ற வீதத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். 2016 ஆம் ஆண்டின் இறுதியிலேயே துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் முடிவுற்றன. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் துறைமுக வேலைகள் நிறைவு பெறாமையால் 46.7 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஒரு வெள்ளை யானைத்திட்டம் என்றே பரவலாகக் கருதப்பட்டு வந்தது. இத்துறைமுகத்தில் தரித்துநின்ற பெரும்பாலான கப்பல்கள் இலங்கைக்கு மோட்டார் கார்களை ஏற்றி வந்தவையாகும். மோட்டார் கார்கள் ஹம்பாந்தோட்டையில்தான் இறக்கப்பட வேண்டுமென்று அரசாங்கம் கூறியிருந்ததற்கேற்ப அங்கு தரித்துச் சென்ற கப்பல்கள் இலங்கையின் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்களை கொழும்புத்துறைமுகத்தில் இறக்காது ஹம்பாந்தோட்டையில் இறக்கிவிட்டுச்சென்றன. ஹம்பாந்தோட்டையில் இறக்க வேண்டுமென்ற உத்தரவு இல்லாதிருந்தால் இந்தக் கப்பல்களும் இங்கு வந்திருக்காது.
கிழக்குப் பிராந்தியத்திற்கும் மேற்குலகத்திற்குமான கப்பற்பாதையில் பயணிக்கும் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வந்து எரிபொருள் நிரப்பிக் கொள்ளும். அதனால் இலங்கைக்கு கணிசமான இலாபம் கிடைக்குமென்று முன்னர் கூறப்பட்டிருந்தது. எனினும் அது அவ்வாறு இடம்பெறவில்லை. ஏனெனில் நவீனகால கப்பல்கள் எரிபொருளுக்காக அப்பாதையில் அடிக்கடி தரித்துச் செல்ல வேண்டியவை அல்ல. நீண்ட தூரத்துக்கான எரிபொருளை அவை போதுமான அளவில் ஓரே தடவையில் நிரப்பிக் கொள்பவை. அதே நேரம் எரிபொருளை நிரப்புவதற்காக கொழும்புத் துறைமுகத்தையே பெரும்பாலான கப்பல்கள் நாடுகின்றன. உலகின் சிறந்த முப்பது துறைமுகங்களில் கொழும்புத் துறைமுகமும் உள்ளடங்குவது இதற்கு முக்கிய காரணமாகும்.
ஹம்பாந்தோட்டைத்துறைமுகத்தை நிர்மாணிக்க பெருமளவு நிதி தேவைப்பட்டது. அதற்கான நிதியை இலங்கை கடனாக சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டது. ஆனால் வர்த்தக ரீதியில் கார்களை ஹம்பாந்தோட்டையில் இறக்குவதால் மட்டும் எந்தவித இலாபமும் இன்றி பெருமளவு நட்டத்திலேயே இத்துறைமுகம் இயங்கியது. 2011 இல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு ஏற்பட்ட நட்டம் 46.7 பில்லியன் ரூபாவாகும்.
செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படையிடமே பொறுப்பளிக்கப்படும். எந்தவொரு வெளிநாட்டுக்கடற்படையும் இத்துறைமுகத்தை ஒரு தளமாக உபயோகப்படுத்த முடியாது என்பதை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீன வர்த்தக செயற்பாடுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் கூறிவந்தன. எனினும் இலங்கை அரசாங்கத்தின் மேற்படி அறிவிப்பின் மூலம் சீனா ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பத இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சைனா மெர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் சீன நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட 99 வருடகால குத்தகை ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் 1.12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது. ஒப்பந்தத்தின்படி சீன அரசாங்கத்திற்கு சொந்தமான துறைமுக செயற்பாட்டாளர் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி, முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டுக்கு பொறுப்பாக இருக்கும். ஒப்பந்தத்தின்படி 70 சதவீத பங்காக அமையும். மேற்படி நடவடிக்கைகளுக்காக மேற்படி சீன துறைமுக செயற்பாட்டாளர் மூன்று கட்டங்களில் துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதன் பிரதான செயற்பாடாக தற்போது உள்ள இறங்குதுறை 3487 மீட்டர் தூரத்திற்கு மீளமைக்கப்படும். இதன் மூலம் பலவித சரக்குகள் இறக்குவதை கையாளக்கூடியதாக இருக்கும்.
சீனவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இதுவரை நட்டத்தில் இயங்கிய ஹம்பாந்தோட்டை துறைமுகம் இனிமேல் இலங்கைக்கு சாதகமாக பயன்தரும் வகையில் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் திட்டமாகவும் அமையும் என சர்வதேச ரீதியில் கணிக்கப்படுகிறது. அதே நேரம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை இது உயர்த்தும் என்று சர்வதேச சந்தைப்படுத்தல் முகவர் நிலையமான மூடீஸ் கூறுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தல விமான நிலையம் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தாமரைத்தடாகம் ஆகியவை கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பாரிய திட்டங்களாகும். இவை நான்கும் சீனாவிடம் இருந்து பெருந்தொகை கடனைப்பெற்று நிர்மாணிக்கப்பட்டவை. இந்த திட்டங்கள் இலங்கையை விட சீனாவுக்கு இலாபம் தரும் நோக்கத்துடன் தான் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் இத் திட்டங்களின் மூலம் இலாபத்தை பெறும் வகையிலான செயற்திட்டங்கள் முறையாக வகுக்கப்படவில்லை. அவ்வாறான திட்டங்கள் கடந்த அரசாங்கத்தினால் முறையாக வகுக்கப்பட்டிருந்தால் அவை இந்நேரம் இலாபம் தரத் தொடங்கியிருக்கும்.
கடந்த அரசாங்கம் ஜனநாயக ரீதியில் மாற்றப்பட்டபோது துறைமுகமும் விமான நிலையமும் செயற்படும் நிலையில்தான் இருந்தன. எனினும் முறையான திட்டம் இல்லாமை காரணமாக அவ்வாறான செயற்பாடுகள் திருப்திகரமாக இருக்கவில்லை. அதே வேளை கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தாமரைத்தடாகம் ஆகியவற்றின் பணிகள் முற்றுப் பெற்றிருக்கவில்லை. எனவே இந்த திட்டங்களை தொடர்வதா இல்லையா என்ற பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. மேலும் செலவு செய்து திட்டங்களை தொடர வேண்டும். அல்லது அவற்றை தொடராமல் கைவிட வேண்டும். தொடர்ந்தால் மேலதிக செலவு. தொடராவிட்டால் ஏற்கனவே செலவிட்ட நிதி வீணாகி விடும். புதிய அரசாங்கம் இது பற்றி நிறைய விவாதித்தது. முறையான திட்டங்கள் வகுத்து சரியான முறையில் நிர்வகித்தால் இத் திட்டங்கள் மூலம் இலாபம் பெறலாம்.வீரகேசரி

கருத்துகள் இல்லை: