வியாழன், 10 ஆகஸ்ட், 2017

திமுக + திருமா நெருக்கம்,,,, தேசிய அளவு கூட்டணிக்கு ஒரு முன்னெடுப்பு?

நாடாளுமன்றத் தேர்தல் வர இன்னும் ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல்களத்தில் நடைபெறும் போராட்டங்கள், கட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை மெல்ல மெல்ல ஒரு மெகா கூட்டணிக்கான ரசவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதிமுக தன்னளவிலேயே மூன்றாக, நான்காக உடைந்து கிடக்கும் நிலையில்... முதலில் அந்த அணிகளுக்கு இடையேயான கூட்டணியே இன்னும் முடிவாகவில்லை. எனவே... வரப்போவது நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ எந்தத் தேர்தலாக இருந்தாலும் மெகா கூட்டணியாக சந்திப்பது என்ற திட்டத்தில் உற்சாகமாக காய் நகர்த்தி வருகிறது திமுக. அந்த வகையில் முரசொலி பவள விழா கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்திருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக கருதப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்... ஸ்டாலின் கட்சியின் பொறுப்புக்கு வந்த நிலையில், ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்ற வகையில் சற்று ஒதுக்கியே வைக்கப்பட்டார்.
இதனால் கடந்த தேர்தலில் திமுக, அதிமுக-வை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணியை வைகோவுடன் இணைந்து கட்டினார் திருமா. சமீப மாதங்களாக திமுக-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான இறுகல் போக்கு சற்று தளர்ந்து நெருங்கி வருவதற்கான சில தகவமைப்புகள் தென்படுகின்றன.
நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக-வோடு ஒரே தளத்தில் செயல்பட முன்வந்துகொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “மாற்றம் வேண்டும் என்று கூறும் திருமாவளவன் எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். அதன்பின் பேசிய திருமாவளவன், “மக்கள் பிரச்னைகளில் திமுக-வோடு இணைந்து செயல்பட தயார்’’ என்றார்.
ஸ்டாலின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராட்டிய திருமாவளவன், விரைவில் விழுப்புரத்தில் தான் நடத்த இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு ஸ்டாலினை அழைப்பதற்காக அறிவாலயத்தில் நேற்று ஆகஸ்டு 9ஆம் தேதி சந்தித்தார்.
திமுக கூட்டணியில் மீண்டும் சிறுத்தைகள் இடம்பெறும் என்பதற்கான அறிகுறிகள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில்... கொங்கு பகுதியில் இதுபற்றிய விவாதம் இப்போது அதிகமாகியுள்ளது.
கொங்கு கட்சிகளில் குறிப்பிடத்தக்க வலிமை கொண்ட ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி இப்போது திமுக அணியில் உள்ளது. தாங்கள் சாதிக்கட்சி இல்லை என்று ஈஸ்வரன் வெளிப்படையாக சொன்னாலும்... திமுக கூட்டணிக்குள் சிறுத்தைகள் வருவது அக்கட்சியினரிடையே சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.
ஈஸ்வரனுக்கு முன்பே திமுக-வை ஆதரித்து திமுக அணிக்கு சென்றவர், ‘நமது கொங்கு முன்னேற்றக் கழகம்’ கட்சியின் தலைவர் காங்கேயம் தங்கவேல். இவர் இப்போது, “திமுக கூட்டணியில் சிறுத்தைகள் மீண்டும் இடம்பெறும் நிலை இருப்பதால்... நாம் நமது முடிவை பற்றி விவாதிக்க வேண்டும். கட்சியினர் விவாதித்து தலைமைக்கு அனுப்பவும்’’ என்று நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருக்கிறார். இதனால் கொ.ம.தே.க. கட்சியினரும் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி காங்கேயம் தங்கவேலிடம் பேசினோம். “நாங்கள் வளர்ந்து வரும் கட்சிதான் என்றாலும்... கொங்கு தளத்தில் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் சாதி, மத தீண்டாமை பார்ப்பது கிடையாது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் மீது கொங்கு பகுதி முழுதும் ஒரு முத்திரை பதிந்து கிடக்கிறது. நாங்கள் ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் எதிரானவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகளுக்குதான் எதிரானவர்கள்.
திமுக வட மாவட்டங்களில் வலுவாக இருக்கிறது. மேற்கு மாவட்டமான கொங்கு பகுதியில்தான் பலவீனமாக இருக்கிறது. எனவே, ஏற்கெனவே வலுவாக இருக்கும் வட மாவட்டங்களில் சிறுத்தைகளைச் சேர்ப்பதால்... திமுக பலவீனமாக இருக்கும் மேற்கு மாவட்டங்களில் மேலும் பலவீனமாகும் நிலை ஏற்படும். இதை திமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்’’ என்கிறார்.
இதே கருத்தை திமுக செயல் தலைவரிடம் திமுக-வின் மேற்கு மாவட்டச் செயலாளர்களே வலியுறுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் கேட்டபோது, “திமுக செயல் தலைவருடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று எங்கள் தலைவரே பேட்டி கொடுத்திருக்கிறார். அதனால் இதுபற்றிய விவாதமே இப்போது எழவில்லை’’ என்கிறார்கள்.
சிறுத்தைகளை மையமாக வைத்து... திமுக-வுக்கும், கொங்கு கட்சிகளுக்கும் இடையே உருவாகியிருக்கும் இந்தச் சலசலப்பை கவனித்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தூதுவர்கள் மூலம் ஒட்டுமொத்த கொங்கு கட்சியினரையும் தனக்கு ஆதரவாக மாற்ற ஒரு நடவடிக்கையை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அட...!
- ராகவேந்திரா ஆரா  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: