புதன், 9 ஆகஸ்ட், 2017

ஏரியைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி!

சேலம் கச்சராயன் ஏரியைப் பார்வையிடுவதற்கு ஸ்டாலினுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரியைத் திமுக-வினர் தூர்வாரினர். அந்த ஏரியை ஸ்டாலின் பார்வையிட வருவதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரியைப் பார்வையிட்டு பின்னர் சேலத்தில் நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க கடந்த வாரம் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஏரியைப் பார்வையிடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதையடுத்து, ஏரியை ஸ்டாலின் பார்வையிட போலீஸ் தடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கினார்.

அதன்பேரில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏரியைப் பார்வையிடுவதற்காக, கடந்த வாரம் சென்னையிலிருந்து கோவை சென்று பின் கோவையில் இருந்து சேலம் போகும் வழியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சராயன் பாளையம் ஏரியை திமுக-வினர் தூர்வாரி சீரமைத்தனர். அந்த ஏரியில் அதிமுக-வினர் முறைகேடாக மணல் அள்ளி வந்தனர். இதனால் அந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக, ஸ்டாலின் கடந்த ஜூலை 27ஆம் தேதி கோவை வழியாக சேலம் சென்றபோது, செல்லும் வழியிலேயே போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நீட் தேர்வுக்கு விலக்குகோரி திமுக அறிவித்த மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால் ஸ்டாலின் சேலத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில், மனிதச் சங்கிலி நடக்க இருந்த இடத்துக்கும், ஸ்டாலின் செல்ல இருந்த கச்சராயன்பாளையம் ஏரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதல்வரின் தொகுதிக்கு ஸ்டாலின் செல்லக் கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அவரைத் தடுத்து கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளை திமுக தூர்வார தமிழக அரசு தடைகளோ, இடையூறோ செய்யக் கூடாது. ஸ்டாலின் ஏற்கெனவே மத்திய அரசின் உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். தூர்வாரும் பணிகளைப் பார்வையிடச் செல்லும் அவருக்குத் தமிழக அரசு அதிகாரிகள், போலீஸார் எவ்வித இடையூறும் செய்யக் கூடாது, என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, ‘திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏரியைப் பார்வையிடுவதற்கு தடை விதித்தது ஏன்?’ என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமென்பதால் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சர்ச்சைக்குரிய சேலம் கச்சராயன் ஏரியைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருடன் சேர்ந்து 25 பேர் அந்த ஏரியினைப் பார்வையிடலாம் என்று நீதிபதி துரைசாமி அனுமதி வழங்கினார். ‘ஏரியை ஸ்டாலின் பார்க்கக் கூடாது என்று அரசு சொல்வது சட்ட விரோதம். சட்டம் ஒழுங்கு கெட்டால் அதைப் பாதுகாக்க போலீஸார் இருக்கிறார்கள். ஸ்டாலின் என்ன மணல் திருடவா போகிறார்?’ என்று தமிழக அரசுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: