செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

பண மதிப்பழிப்பு என்னும் பேரழிவு!.. மன்மோகன் சிங்: :இது ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை!

மின்னம்பலம : கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவது, கள்ள நோட்டுகளை ஒழிப்பது ஆகிய காரணங்களுக்காக மோடி மேற்கொண்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை அதன் இலக்கை அடையத் தவறிவிட்டது என்பதை நாடாளுமன்றக் குழு ஒன்றின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுவரையில் வங்கிகளில் எவ்வளவு கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன, எவ்வளவு கறுப்புப் பணம் வெளிக்கொணரப்பட்டது என்பன குறித்த மிகச் சரியான தவல்களை மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ இதுவரை வெளியிடவில்லை. டெபாசிட் செய்யப்பட்ட நோட்டுகளை இன்னும் எண்ணிக்கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறி வருகிறது. எனில், இந்தப் பண மதிப்பழிப்பு நடவடிக்கை எதற்கு மேற்கொள்ளப்பட்டது? மக்களை, தினசரி தங்களை வேலைகளை விடுத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் நிற்க வைத்தது எதற்கு? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பண மதிப்பழிப்பு அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதுவரையில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மதிப்பிழந்த இந்நோட்டுகளை டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டதால், மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வேலைகளை விடுத்து வங்கிகளின் வாசல்களில் நின்றுகொண்டிருந்தனர். வரிசையில் காத்திருந்ததால் ஏற்பட்ட உடல் பாதிப்பாலும், மன உளைச்சலாலும் சிலர் தங்களது உயிரைவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. கறுப்புப் பணமும் கள்ள நோட்டுகளும் ஒழிக்கப்பட்டுத் தூய்மையான இந்தியா உருவாகும் என்ற ஒரே நம்பிக்கையில் மக்கள் இந்த அனைத்து இடர்ப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தப் பண மதிப்பழிப்பு நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை, அரசின் திட்டம் தோல்வியடைந்ததை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தப் பண மதிப்பழிப்பு அறிவிப்பால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதையும் பல்வேறு பிரிவுகளில் அழிவையே ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இந்த அறிக்கை நமக்கு விளக்குகிறது.
‘உயர் மதிப்பு நோட்டுகளைத் தடை செய்யும் நடவடிக்கை மிகவும் அபத்தமானது. இந்த நடவடிக்கையின் நோக்கம் சிறிதளவுகூட நிறைவேறவில்லை. இதனால் பெரிய அளவில் கறுப்புப் பணம் எதுவும் சிக்கவில்லை. கணக்குக் காட்டப்பட்டுள்ள மொத்தத் தொகையில் ரூ.4,172 கோடி மட்டுமே கறுப்புப் பணமாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது (ஆனால், பிரதமர் மோடி 5 முதல் 7 லட்சம் கோடி கறுப்புப் பணம் சிக்கும் என்று தெரிவித்திருந்தார்). தீவிரவாதிகளுக்குக் கிடைக்கும் நிதியுதவிக்கு இந்த நடவடிக்கையால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு எப்படி பணப்புழக்கம் இருந்ததோ, அதே நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். அதேநேரம், இந்த நடவடிக்கையால் சிறு தொழிற்துறைகள் மற்றும் அமைப்புசாராத்துறைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என அந்த அறிக்கை கூறுகிறது.
முன்கூட்டியே நன்றாகத் திட்டமிடப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்ற பிறகு, பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு வங்கிகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. ஆனால், இவற்றின் வடிவம் வேறு மாதிரியாக இருந்ததால் ஏ.டி.எம்-களில் இவற்றை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டும் அவை மக்களிடம் சென்று சேருவதில் சிக்கல் (கால தாமதம்) ஏற்பட்டது.
மேலும், ரூ.2,000 நோட்டுகளுக்குச் சில்லறை கிடைக்காமல் பணம் இருந்தும் செலவு செய்ய முடியாத நிலையில் மக்கள் இருந்தனர். பின்னர் வெளியிடப்பட்ட ரூ.500 நோட்டுகள் ஓரளவுக்கு நிலைமையைச் சீராக்கின.
பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்டது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். இத்துறை பெரும்பாலும் ரொக்கப் பரிவர்த்தனை சார்ந்தே இயங்குகிறது. அரசின் அதிரடி அறிவிப்பால் பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன.
பண மதிப்பழிப்புத் திட்டம் தோல்வியடைந்துள்ளதால் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் அரசு செய்துவந்த செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போதுமான நிதி வழங்கப்படாததால் கல்வித்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வரிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. பி.எஃப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு 180 பேர் பலியாகியுள்ளனர். பண விநியோகம், போக்குவரத்து, விளம்பரம் மற்றும் ஊழியர்கள் சம்பளம் என ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலவு செய்துள்ளது.
இந்தத் தகவல்களையெல்லாம் நாடாளுமன்றக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராகத் தனது கடைசி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘இந்தியப் பிரதமராக மோடி வருவது மிகப் பெரிய பேரழிவு’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் அவரது வார்த்தைகள் இன்று உண்மையாகியுள்ளன. இந்தப் பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மன்மோகன் சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டபோது அவர், “இது ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை” என்று சுருக்கமாக விளக்கினார்.
பல்வேறு வண்ணமயமான திட்டங்களைப் பிரதமர் மோடி அறிவித்துவந்தாலும் அவரது செயல்படாத மற்றும் தோல்வியடைந்த திட்டங்களை மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது. போதிய வேலைவாய்ப்பை உருவாக்காதது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியின்மை, உள்நாட்டு முதலீடுகளில் சரிவு, அதிகரித்துவரும் சமூகப் பிரச்னைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மோடி அரசுக்கு எதிராக உள்ளன.
பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கும், அதற்கான விளம்பர, நிர்வாகச் செலவுகளுக்கும், அதனால் மக்கள் அடைந்த இன்னல்களுக்கும், பிரிந்து சென்ற உயிர்களுக்கும் இந்தியாவின் மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொள்வாரா?
- செந்தில் குமரன்

கருத்துகள் இல்லை: