வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து

thetimestamil :கும்பகோணம் பள்ளி தீவிபத்து உயர்நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 2004 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் கொடூர தீயிக்கு பலியானது. 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இவ்விபத்து குறித்து உச்சநீதி மன்றம், தலையீடு செய்திட வேண்டிய நிலையும் ஏற்பட்டு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியது. தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம்வழக்கை விசாரித்து கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளில் 11 பேரை விடுவித்தும், 10 பேருக்கு தண்டனையும் வழங்கி தீர்பளித்தது. 11 பேரை விடுவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தண்டனை பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசின் மேல்முறையீட்டை ரத்து செய்ததுடன், தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 94 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்களது மழலைச் செல்வங்களை இழந்து, தங்களுக்கு நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யோடு இருந்தவர்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
கீழ வெண்மணி கிராமத்தில் கடந்த 1968 ல் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அனைவரையும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கிய போது ஏற்பட்ட அதிர்ச்சி தான், தற்போதும் ஏற்படுகின்றது.
உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: