புதன், 10 மே, 2017

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு: நிரூபித்த ஆம் ஆத்மி!

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு: நிரூபித்த ஆம் ஆத்மி!
மின்னம்பலம் : வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு முறைகேடு நடக்கும் என்பதை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவர் டெல்லி சட்டமன்றத்தில் மாதிரியாக செய்து காட்டினார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டி வந்தன. இதற்காக 16 கட்சிகள் ஒன்றிணைந்து தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுவும் அளித்துள்ளன. மேலும் ஆம் ஆத்மி இந்தக் குற்றசாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வந்தது.
இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் சவுரவா பரத்வாஜ் என்பவர், சோதனை மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு எப்படி நடக்கும் என்பதை விளக்கிக் காட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கம் அர்த்தமற்றதாக உள்ளது. எதன் அடிப்படையில் இந்த எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற முடியாது என்று கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. நான் கடந்த பத்து வருடங்களாக கணினி பொறியாளனாக இருந்து வருகிறேன். பல நிறுவனங்களின் வேலை பார்த்து இருக்கிறேன். வாக்குப்பதிவு எந்திரத்தின் 'மதர்போர்டை' மாற்றி அமைப்பதற்கு எனக்கு 90 நொடிகள்தான் தேவைப்பட்டது” என்று தெரிவித்தார். பின்னர், அவர் கொண்டு வந்த மாதிரி எந்திரத்தில் உள்ள ரகசிய குறியீட்டை அழுத்தினார். அதில் எந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்பதை எந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்பதையும் விளக்கினார். ஆம் ஆத்மியின் இந்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து, தாங்கள் பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரமும், ஆம் ஆத்மி பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரமும் வெவ்வேறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: