சனி, 13 மே, 2017

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி? கடும் எதிர்புக்களையும் பொருட்படுத்தாமல் ...

மரபணு மாற்றுக் கடுகுக்கு விரைவில் அனுமதி!மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்குக் கொண்டுவர, அவற்றைப் பயிரிட அனுமதிக்கக் கோரி, மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் மத்திய அரசு கருத்துக் கேட்டது.
இந்நிலையில் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி செய்ய ஆதரவான அறிக்கைகளை மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC), தயார் செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கையாக அனுப்பிவைத்து ஒப்புதல் கோரியுள்ளது.

இதுகுறித்து GEAC-யின் தலைவர் அமிதா பிரசாத் கூறும்போது, ”இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி செய்ய GEAC முயற்சி மேற்கொண்டு வருகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் பாதுகாப்புக் குறித்து ஆய்வு நடத்தி GEAC-யின் துணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பிரச்னை இறுதிக் கட்டத்தில் உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தேவ் அனுமதி அளிக்கும்பட்சத்தில், விரைவில் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு மரபணு மாற்றுக் கடுகு உற்பத்தி செய்யப்படவுள்ளது.   மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: