செவ்வாய், 9 மே, 2017

தமிழக கல்வி மீது காவிகளின் படையெடுப்பு ... இந்தியை புறக்கணித்த தமிழகம்தான் உயர்ந்து நிற்கிறது .. குஜராத் அல்ல!

இப்போது தான் செய்தித்தாள்களைப் பார்த்தேன். நீட் எழுதச் சென்ற மாணவர்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வெளியிடப்பட்டிருக்கும் படங்களைப் பார்த்தால் நம் மாணவர்கள் மீதான அடக்குமுறை எத்தனை கொடூரமாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. வடநாட்டில் நடக்கும் தேர்வுகள் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வளவு ஏன்? ரயிலில் வடநாட்டுக்கு பயணம் செய்தால் கூட தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டால் எந்தப் பயணியும் விதிமுறைகளை மதிக்காமல் ரிசர்வ்டு பெட்டிக்குள் நுழைந்து உட்கார்ந்து கொள்வார்கள். ரயில் விதிகள் கூட முறையாக பின்பற்றப்படுவது தமிழகத்தில் தான். ஆனால், தமிழ்நாட்டில் கல்வி தரமில்லை என்ற காரணம் சொல்லி ஒரு பெரிய சர்வாதிகாரமே நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்த்தப்படும் அத்தனை அநியாயங்களும் 'தகுதி, திறமையை உயர்த்துகிறோம்' என்ற பெயரிலேயே நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டைவிட குஜராத் மாடல் தான் உயர்ந்தது, அதனால் இந்தியா முழுவதும் குஜராத் மாதிரி வளர மோடிக்கு ஆதரவு தாருங்கள் என்று சொன்னபோது - இல்லை இல்லை தமிழ்நாட்டு மாடல் தான் மிகச்சிறந்தது என்று திமுகவும் அதிமுகவும் ஒன்றாக உறுதியாக முழங்கின. விளைவு, மோடி அலை இங்கே நுழையவில்லை. குஜராத் மாடல் தரத்தில் உயர்ந்தது என்ற வாதம் இங்கே பல்லிளித்தது. ஒவ்வொரு முறையும் 'தகுதி, திறமை' என்ற கருத்து எழும்போதெல்லாம் நம் மக்களில் சிலரும் அதற்கு மயங்கிவிடுகிறார்கள். இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்றும் அதைப் படித்துவிட்டால் அகமதாபாத்திலே வேலை கிடைக்கும் என்றும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும் அந்த இந்தியைப் புறக்கணித்துவிட்டு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலங்களில் முதன்மையானதாக தமிழ்நாடு விளங்குகிறதே! இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் தான் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கின்றன. தகுதியை வளர்க்கிறோம் திறமையை மேம்படுத்துகிறோம் என்று மாணவர்களின் சட்டையை வெட்டியிருக்கிறார்கள், மாணவிகளின் தோடுகளை அகற்றியிருக்கிறார்கள்..ஒன்றை நிச்சயமாக சொல்ல முடியும்..அடக்குமுறைகளை எதிர்த்து நின்ற 2000 ஆண்டுகால வரலாறு தமிழ் மண்ணிற்கு உண்டு. திருக்குறள் கூட அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த கலகக்குரல் தான். அடிக்க அடிக்க தான் பந்து மேலே எழும்பும்..இன்னும் அடியுங்கள். Ezhil arasan  

கருத்துகள் இல்லை: