திங்கள், 11 ஜனவரி, 2016

தூமை ...விதைகளை கேவலப்படுத்தும் கலாசார காவலர்கள்


thoomai.wordpress.com 1.   ‘தூமைவெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்களுக்கு அதற்கான வேறு இடங்களைத் தேடிச் செல்ல உரிமை உண்டு.

2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். பார்ப்பன சாதியில், மற்றும் இந்துமதத்தைக் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களிடையிலும் மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின்  இருக்க வேண்டும். மற்றவர்  தொடலாகாது. குழந்தைகள்  நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள்  பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். “தீட்டு” கழிய இந்த ஏற்பாடு. தீட்டு!
3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் ‘கொண்டாடப்படுவது’ சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. தமிழகத்தில் “தூய்மைக்குடிக்கி” என்ற சொல் ஒரு வசைச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாயின் கருவிலுள்ளபோது தூமையைக் குடித்தவன் என்ற பொருளில் இது எவ்வாறு வசைச் சொல்லாக முடியும்?
இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு.
தர்மினி-மோனிகா

கருத்துகள் இல்லை: