செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஜெயலலிதாவால் முடக்கமுயன்று நீதிமன்ற அல்டிமேட்டத்தல் தப்பி பிழைத்த அண்ணா நூலகம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே?: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் கடிதம்
உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதம்: ’’அன்பு - அறிவு - ஆற்றல் ஆகியவற்றின் திருவுருவாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்ப்பெயரை இணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இன்றைய தலைவி ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தைத் தமிழக மக்கள் கொடுத்திருக் கிறார்கள் என்ற ஆணவ எண்ணத்தால், அவர் இந்த ஐந்தாண்டுகளில் அரங்கேற்றியிருக்கும்
அட்டூழியங்கள் ஒன்றா, இரண்டா? எத்த னையோ? அவற்றில் ஒன்று தான் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைத் திட்டமிட்டு அலங் கோலப்படுத்தியது. நல்வாய்ப்பாக, சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டினால் நூலகம் உயிர் பிழைத்திருக்கிறது; எனினும் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையினை மறைப் பதற்கில்லை. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டும்கூட, அதன் உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, தொடர்ந்து அலட்சியம் செய்து வந்ததால், ஜெயலலிதா அரசுக்கு இறுதி எச்சரிக்கை அதாவது “அல்ட்டிமேட்டம்” என்பார்களே, அதைப் போல கடும் இடித்துரை வழங்கியுள்ளது.  அடிமைகூட்டம் அறியுமா அறிவின் பெருமை? நூலகத்தின் மேல் கைவைத்தவர்களை சரித்திரம் எப்படி பார்க்கும்?

அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய வழக்கு 8-1-2016 அன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளி வந்த விசாரணை விபரங்கள், இந்த வழக்கின் பாதையில் அடுத்து எழுந்துள்ள குறிப்பிடத்தக்க மைல்கல் என்றே கூற வேண்டும்.

நீதிமன்ற ஆய்வுக் குழு 8-1-2016 அன்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இதுவரை அடிப் படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. புத்தகங்கள், மின் விளக்குகள், கேமராக்கள் சீரமைப்பு, சுகாதார வசதி ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் சீரமைக்கவில்லை என்றால் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும் அதனை குழந்தைகள் மருத்துவமனையாகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிட மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் நீதிமன்றக் கண்டனங்களாலும், தமிழறிஞர்கள், மாணவர்களின் எதிர்ப்பாலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை வாங்காமலும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிக்காமலும் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோரடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தது. 29.10.2015 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப் பட்டு நூலகம் பராமரிக்கப்படுகிறதா என நீதிமன்ற ஆணையாளர்கள் 29.11.2015 மற்றும் 2.1.2016 ஆகிய நாட்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் 8-1-2016 அன்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 500 கேமராக்கள் ந்பழுதாகியிருக்கின்றன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேதமடைந் திருக்கின்றன. நூலகம் முறையாகப் பராமரிக்கப் படாததால் வாசகர்கள் வாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்” என்று வாதிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படாததால் தமிழக அரசின் தலைமைச் ந்செயலாளர் ஞானதேசிகன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திருமதி சபீதா மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் கண்ணப்பன் ஆகியோர் மீது உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், விளக்கு வசதிகள், மின் தூக்கி வசதி ஆகியவை முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும், ஆன்-லைன் வசதி செய்யப்படவில்லை என்றும், புத்தகங்கள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கருவிகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதில்லை என்றும், கலையரங்கம் உள்ளிட்டவை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், போதுமான பணியாளர்களை நியமிக்கவில்லை என்றும், பணி விதிகள் உருவாக்கப்படவில்லை என்றும் அதனால் நூலகப் பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றும் வில்சன் வாதிட்டார்.
ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப் பட்ட குறைகளையும், மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறிப்புரையையும், மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களின் வாதத்தையும் பதிவு செய்த தலைமை நீதிபதி அவர்கள்; நீதிமன்ற உத்தர வினை முழுமையாகச் செயல்படுத்தி, நூலகத் தினை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு அதற்காகத் தமிழக அரசிற்கு வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தர வினைப் படித்த போது, அண்ணா நூலகத்தைப் பற்றிய பல நிகழ்வுகள் எனது நெஞ்சத்தில் பளிச்சிட்டன. அவற்றை உனக்கு நினைவு படுத்தவே இந்தக்கடிதம்! அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை 15-9-2010 அன்று திறந்து வைத்து நான் உரையாற்றியபோது, “நூலகம் அண்ணா பெயரால் அமைய வேண்டும் என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டதல்ல. கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தின் செயலாக்கம் மட்டும் அல்ல இது.
அண்ணா பெயரால் - தந்தை பெரியார் பெயரால் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் நூலகங்களை வாசக சாலைகளை அமைத்து, தமிழகத்தின் வீதிதோறும், ஊர் தோறும், குக்கிராமம் தோறும் இயக்கத்தி னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண் டுமென்ற வழிமுறையிலே தான் இப்போதும் ஒரு நூலகத்தை அமைப்ப தென்றால், அது அண்ணா பெயரிலே அமைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றி அதை அறி வித்து, இன்றைக்குச் செயல்படுத்தி உங்களுடைய வாழ்த்துக்களை யெல்லாம் பெற்றிருக்கிறோம்” என்று நூலகத்திற்கு அண்ணா பெயரைச் சூட்டியதற்கான அடிப்படையை எடுத்துச் சொன்னேன்.

ஒவ்வொரு வீட்டிலும் புத்தக சாலை வேண்டும் என்று அண்ணா சொன்னாரே, அதைப்போல ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு புத்தக சாலை வேண்டும் என்ற அந்தக் கொள்கையின் அடிப்படையில் இன்றைக்கு இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது; இது அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ள காட்சி என்று நான் விளக்கியதை என்னால் எங்ஙனம் மறந்திட இயலும்? உயர்ந்த எண்ணங்களின் உருவகமாக எழுப்பப்பட்ட அறிவுக் கோயிலாம் அண்ணா நினைவு நூலகத்தை மாற்றப்போவதாக ஜெயலலிதா அறிவித்த போது என்னுள் அலை மோதிய குமுறல்களை எழுத்தால் இயம்பிட இயலாது! தமிழக முதலமைச்சர், ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழர் நலனைப் பற்றிச் சிந்தித்துத் தீட்டப்பட்ட திட்டங்களை யெல்லாம் மாற்றிப் புரட்டிப் போட்டதைத் தொடர்ந்து, என்னால் தொடங்கி வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் மாற்றுவதாக அறிவித்திருந்தார்.

அதைப்பற்றி என்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “இதனை; தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்” என்று தான் சொன்னேன். தன்மானமுள்ள தமிழர்களும், தமிழ் அறிஞர் களும் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுமே கட்சி வித்தியாசம் கருதாமல், ஜெயலலிதாவின் சர்வாதிகார எல்லையைச் சுட்டிக்காட்டும் அந்த முடிவினை அறிந்து துடித்துப் போய் கடுமையாக எதிர்த்தார்கள். ஏடுகள் எல்லாம் ஜெயலலிதா வின் முடிவினைக் கண்டித்துத் தலையங்கங்கள் எழுதின. 4-11-2011 தேதிய “தீக்கதிர்”, “அ.தி.மு.க. அரசு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்ததை அறிந்த எவரும் அதிர்ச்சி அடையாமல் இருந்திருக்க முடியாது.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக செயல்படும் நூலகத்திற்கு நாள்தோறும் எண்ணற்ற மாணவர்களும், ஆராய்ச்சியாளர் களும், கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் வந்து செல்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த நூலகத்தில் பல்துறை புத்தகங்கள் உள்ளன. இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாள் தோறும் இந்த நூலகத் தைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாணவர் நலனில் அக்கறையற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை அ.தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது” என்று “தீக்கதிர்” தலையங்கம் எழுதியது. “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில இதழ், “ஜெயலலிதா தனது அரசியல் எதிராளியான கலைஞரின் திட்டத்தைக் குலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு இருக்காது. பொது மக்கள் உணர்வுக்கு எதிராக அரசியலில் வெற்றி பெற முடியாது. விபரீதமான விளைவுகளை உருவாக்கும் என்பதை அரசு நினைவிலே கொள்வது நல்லது” என்று எழுதியது.

அண்ணா நினைவு நூலகத்தை மாற்றப் போவதாக அரசு அறிவித்தவுடன் அதனை எதிர்த்து தன்மான உணர்ச்சி கொண்ட வழக்கறிஞர்களில் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அதனை உடனடியாக விசாரணைக்காக எடுத்துக் கொண்டு விசாரித் தும் இருக்கிறார்கள். நீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதி அவர்கள் அரசு வழக்கறி ஞரிடம், கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட நூலகத்தை மாற்றுவது ஏன் என்றும், அதற்கு என்ன அவசியம் என்றும், அரசு வழக்கறிஞர் அரசியல்வாதியாக பேசுகிறாரா என்றும் கேட்டதோடு, அண்ணா நினைவு நூலக இடமாற்றத்துக்கு தடை விதித்தார். “அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம் - புத்தகம், பராமரிப்பின்றி முடங்கும் அபாயம் - மக்கள் வரிப் பணம் வீணா போச்சு” என்ற தலைப்பில் “தினமலர்” நாளேடு அண்ணா நூலகம் பற்றி விரிவாக 30-3-2015 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டது. அண்ணா நூலகத்தை முடக்கும் முயற்சி, நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட போதும், நூலகம் உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகிறது. இதுகுறித்து, நூலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூறும்போது,

“நூலகத்தின் நிலை குறித்து, கடந்த நான்காண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் பல மனுக்களை அனுப்பியுள்ளோம். ஆனால், அரசியல் காரணங்களால், இந்த நூலகத்தை முடக்கி வைத்துள்ளனர். எந்த ஓர் அரசு அதிகாரியும், நூலகத்தில் ஆய்வுக்கு வருவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, அரசின் கவனிப்போ இல்லாததால், நூலகம் முடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் இதுவரை 23 பேர் ராஜினாமா செய்து விட்டனர். மற்றவர்களும் வேறு பணிகளைத் தேடுகின்றனர். புத்தகங்கள் வாங்காததால் வாசிக்க வருபவர்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இந்த நூலகம், சர்வதேச அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நாங்கள், தற்போது சாதாரண நூலகங்களில் ஒன்றாக முடங்கிவிடுமோ என்ற வேதனையில் உள்ளோம்” என்று நூலகப் பணியாளர்கள் நொந்து போன தமது உள்ளத்தை வெளிப்படுத்தியதாகத் “தினமலர்” நாளேடு சுட்டிக்காட்டியது.

 “தினமணி” நாளேடு, “அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பின் போது, நூலக வளாகத்திலேயே திருமண வீட்டினர் சமைத்துள்ளனர். இதன் காரணமாக நூலகத்தின் அமைதி கெடுவதோடு, அந்த வளாகமும் மாசடைவதாக நூலக வாசகர்கள் புகார் தெரிவித்தனர்” என்று எழுதியிருந்தது. இந்தச் செய்திகளை நான் ஏடுகளில் படித்தவுடன் வழக்கறிஞர் தம்பி வில்சனை என் வீட்டிற்கு அழைத்து, இந்தப் பிரச்சினையை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அவரும் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று, முறையிட்டதின் பேரில் மேதகு தலைமை நீதிபதி அவர்கள் அண்ணா நூலகத்தை திருமணத்திற்காக வாடகைக்கு விட்டது பற்றி தனது கண்டனத்தைத் தெரிவித்து, இனிமேல் அவ்வாறுசெய்யக்கூடாது என்றும் வேறு ஏதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக முன்பணம் வாங்கியிருந்தால்கூட அதனைத் திரும்ப ஒப்படைத்து விட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெய லலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள்மருத்துவமனை தொடங்கப்போவ தாகவும் அறிவித்தார். அது குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு அப்போதே,“இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்?

மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது” என்று குறிப் பிட்டிருந்தனர். நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வேறு வழியில்லாமல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கழக அரசு தொடங்கிய இடத்திலேயே நடந்து வருகிறது. ஆனால் நூலகத்திற்குச் சென்று படிப்போர் முழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவிற்கு, முறையாக நடத்தாமல், ஏனோதானோவென்று அலட்சிய உணர்வோடும் பிடிவாதத்தோடும் ஜெயலலிதா வின் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால்தான், 8-1-2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதி எச்சரிக்கையாக உத்தரவினைப் பிறப்பித்திருக்கிறது.
அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் கழக ஆட்சியில் நூலகம் ஒன்றை நான் கட்டித் திறந்து வைத்தேன் என்ற அடங்காத அழுக்காறு காரணமாக, ஜெயலலிதா எப்படியெல்லாம் சிறுமை எண்ணத்தோடு அதைச் சீர்குலைத்துச் சிதைத்திடத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார் என்பதையும்; உயர்நீதிமன்றம் மட்டும் தலை யிடாது இருந்திருக்குமானால் அண்ணாவைப் பற்றிய நினைவோடு நாம் கண்ட கனவு எப்படி யெல்லாம் சின்னாபின்னமாகப் போயிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்த்தால்,நெஞ்சு பொறுக்குதில்லையே?’’

கருத்துகள் இல்லை: