புதன், 13 ஜனவரி, 2016

சிம்புவின் அத்தனை அடாவடிகளையும் நியாயபடுத்திவரும் பெற்றோரே குற்றவாளிகள்

வாழ்க்கையில் பலரால் ஏளனம் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தன் விடாமுயற்சியால் தொடர்ந்து போராடி வென்ற டி ஆர், தன் மகனையும் தன்னைப்போல் போராடி பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி தன் சொந்த உழைப்பால் முன்னேற்றம் அடைய வைக்காமல் தனது கடும் உழைப்பால் பெற்ற அமுதத்தை, அது அமுதம் என அவரது மகன் உணர்வதற்கு முன்பே ஸ்பூனால்  ஊட்டி வளர்த்தார். அதன் விளைவே இன்று அவர் தன் மகன் பொருட்டு தமிழகத்து தாய்மார்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலையோ என வருந்த வைக்கிறது. பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை! சமூகத்தில் கவனம் செலுத்துவதற்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பீப் சாங்கிற்கு பொருள் விளக்க அகராதி எழுதுவது  நோக்கம் அல்ல. அது ஆபாசமான பாடலா, இல்லையா? இதற்கு முன் யாரெல்லாம் எழுதினார்கள்? எனும் ஆய்வு செய்வதைவிட, இன்றைய பெற்றோர் சமூகத்திற்கு, பீப் சாங் பிரச்னை ஓர் எச்சரிக்கைப் பாடத்தைப் போதிக்க முனைகிறது. அதுவே இவற்றையெல்லாம் விட முக்கியம் என தோன்றுகிறது.

நடிகர் சிம்புவின் தந்தையார் டி.ராஜேந்தர் சினிமா பின்னணியோ, செல்வந்தர் குடும்பத்திலோ பிறக்கவில்லை. அவரது சொந்த ஊர் சென்னை அல்ல. அன்றைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுநகரமான மயிலாடுதுறைதான். அவரது மாபெரும் வெற்றிக்கு காரணம்.. யாருடைய சிபாரிசோ, செல்வாக்கோ அல்ல. தனது படைப்புத் திறனால் மட்டுமே தன்னுடைய வெற்றியை அடைந்தவர். அவர் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத  தன்னம்பிக்கையால் பின்னாட்களில் திரைத்துறையில்  மாபெரும் உயரங்களைத் தொட்டவர். சினிமாவுக்கு உரிய முகக்கட்டு இல்லாதவர், என அவரைக் பரிகாசித்தவர்கள் அவரது சில்வர் ஜூபிளி படங்களைக் கண்டு  பின்னாளில் வாய் மூடினர்.1980 ஆண்டு, எந்த காந்தக் கவர்ச்சியும், அறிமுகமும் இல்லாமல் முற்றிலும் புதுமுக நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவான படம் "ஒரு தலை ராகம்'.  அப்படத்தின் கதை வசனம் பாடல்களை எழுதி அறிமுகமான டி.ராஜேந்தரே அப்பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார். ’கடவுள் வாழும் கோவிலிலே', ’வாசமில்லா மலரிது', ’நான் ஒரு ராசியில்லா ராஜா', ’இது குழந்தை பாடும் தாலாட்டு', "என் கதை முடியும் நேரமிது', "கூடையிலே கருவாடு' போன்ற அந்தப்படப்பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். காதல் படம் தான் என்றாலும் நாயகன் நாயகி கட்டித் தழுவது போன்றோ,  தொட்டுப் பேசுவது போன்றோ கூட காட்சிகள் இல்லாத படம்.. ஒரு வருடம் ஓடிய தமிழ்ப்படங்களின் வரலாற்றில் "ஒரு தலை ராகமும்' ஒன்று.

1980க்குப் பிறகு டி.ராஜேந்தரின் வெற்றியைப் பார்த்து, சினிமா கனவுகளோடு சென்னை நோக்கி படையெடுத்த சாமானிய குடும்பத்து பிள்ளைகள் ஏராளம்., 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நடந்த ஓர்  நிகழ்வில் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த பலரும் ஒன்றாய் சந்தித்தனர். அதில்.. டி. ஆர் சொன்னார்... ”ஒருதலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னை நடிக்கும்படி இப்ராகிம் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கேரக்டரில் சிகரெட் பிடிக்க வேண்டி இருந்ததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இன்று வரை சிகரெட்டை தொட்டது இல்லை. ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த உஷாவை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தோடு சேர்ந்து வாழ்வது போன்ற உணர்விலேயே எப்போதும் இருக்கிறேன். ’’ என்று நெகிழ்ந்தார். 34 வருடங்களுக்கு பிறகும் கூட போராடி பெற்ற அந்த முதல் பட வாய்ப்பு, அதன் வெற்றியை, அதை இன்றளவும் அனுபவித்து வரும் உணர்வை  அவர் பகிர்ந்தபோது கூட்டத்தினர் மேலும் நெகிழ்ந்தனர்.

இப்படி கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறிய டி. ஆர் தன் மகன்  தொடர்பான பல்வேறு சம்பவங்களில் தொடர்ச்சியாக தன் கம்பீரத்தை இழந்து நிற்கிறார் என்பது வருத்தமே. ஓர் நடிகையின் உதட்டை கடித்து இழுப்பது போல் போஸ்டர்  சர்ச்சை, இணையத்தில்  ஓர் நடிகையோடு சிம்பு இணைந்த சில நெருக்கமான படங்கள் வெளியான போதும் கூட .. டி ஆர் தான் நெடுங்காலமாக கடைப்பிடித்து வரும் சினிமா கற்புக்கு எதிராக தனது மகனின் நிலை இருப்பதைக் கண்டு சினம் கொண்டதாக பதிவு இல்லை. மாறாக தன்னை தாழ்த்தியும் மகனை, தாங்கி பிடிக்கவுமே முனைந்தார். ”சினிமாவுல சிறு கிசுகிசுக் கூட ஆளாகாத எனக்கு என்ன சிலையா வைச்சுட்டாங்க?’’ எனும் தொனியிலேயே அவர் பதில் அமைந்திருந்தது. பிள்ளை பாசத்தில் பெற்றோர் பலரும் சறுக்குவது இயல்பு. அதில் டி.ஆர் தம்பதியரும் விதிவிலக்கல்ல. பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தன் மகனைப் பாதுகாக்கும் வகையில் அறத்திற்கு எதிராக அவர் பேச முனைவதும், சட்டப்படி தன் மகன் மீது குற்றம் இல்லை என வைக்கும் வாதங்கள் வலுவற்றதாகவே இருக்கிறது.  டி ஆர் கூறுகிறார்.” என் மகன் அதேபாடலில் பொண்ணுங்கள தப்பா பேசாத மாமான்னு நல்ல கருத்துக்களையும் அதுல சொல்லுறார். அதெல்லாம் கவனிக்கலையேன்னு’’ வருந்துகிறார். அவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால்... 'விருந்து இலையில் 16 வகை கூட்டு பொறியலோட விருந்து வைச்சோம். அதை யாரும் பெருசா பேச மாட்டேங்கீறிங்க. இலை நடுவில கொஞ்சமா மலம் இருந்ததுதான் குறையா பேசுறீங்க' என அங்கலாய்த்து கூறுவது போல் உள்ளது.


இன்றளவும் சில வணிகக் குடும்பங்களில் ஓர் பழக்கம் இருக்கிறது.  தங்களுக்குப்பிறகு தங்கள் நிறுவனங்களில்  தங்கள் வாரிசுகளை உட்கார வைப்பதற்கு முன்பு அதே தொழிலில் உள்ள வேறு நிறுவனங்களிடம் வேலைக்கு அனுப்புவார்கள். இன்னொரு இடத்தில் வேலையாளாக இருந்து பயிற்சி  பெற்ற பின்னரே அவர்களிடம் தனது பொறுப்புகளை ஒப்படைப்பர். தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டம் தெரியாமல் பிள்ளைகள் பொறுப்பிற்கு வந்துவிடக்கூடாது என அப்படிச் செய்வர். 



வானில் பறக்கும் கழுகுகளிடம் ஓர் பழக்கம் இருக்கிறது....கூட்டில் வைத்து குஞ்சுக்கு உரிய உணவு கொடுத்து பராமரிக்கும் கழுகுகள், சிறகுகள் முளைத்ததும், தன் குஞ்சை கூட்டின் விளிம்பிற்கு தன் பெரிய இறக்கைகளால் அடித்து தள்ளும். உயர மரத்தில் இருந்து முதல் முறையாக அக்குஞ்சு கீழே தெரியும் அகண்ட பூமியையும், மேலே பரந்து விரிந்த  வானத்தையும் கண்டு  மிரளும். 

 இந்த கூடுதான் பாதுகாப்பு என அக்குஞ்சு கருதும் நிலையில், தாய் கழுகு அக்குஞ்சை கூட்டில் இருந்து தள்ளி விடும். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலையும் அக்குஞ்சு உயிர் பிழைக்க இறக்கைகளை அடித்துகொள்ளும். எனினும் முழுமையாக பறக்க இயலாமல் கீழே சரியும். அதை எதிர்பார்த்த தாய்க்கழுகு, தன் குஞ்சை தாங்கி மேலும் உச்சிக்கு சுமந்து சென்று, மீண்டும் கைவிடும். இவ்வாறாக பலமுறை பயிற்சியில்  குஞ்சின் இறக்கைகள் பலம்பெற்று சுயமாய் பறக்கத் தொடங்கும். தாய்க் கழுகு முதன் முதலில் தான் கூட்டில் இருந்து தள்ளப்பட்டபோது ஏற்பட்ட பய உணர்வு என் குஞ்சுக்கு வரக்கூடாது என விட்டிருந்தால் அக்குஞ்சு வாழ முடியாமல் வீழ்ந்திருக்கும். 'நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது' எனும் சித்தாந்த்தால் பாதுகாப்பாய், சுகமாய் வளர்க்கப்படும் பலவீட்டு பிள்ளைகள் பெற்றோருக்கு பெரும் துயரத்தையே பின்னாட்களில் கூலியாகத் தருகின்றனர்.

 சிம்புவால் இதற்குமுன் இப்படியான சிறு சிறு சர்ச்சைகள் எழுந்தபோது கூட அவை சிம்புவால் வெளியிடப்படவில்லை. யாரோ வெளியிட்டு விட்டனர் எனும் பல்லவியே பாடப்பட்டது. இன்று சமூகத்தை எதிர்த்து குமுறும் சிம்புவின் பெற்றோர் தங்கள் வீட்டு அமைதி தொலைந்தது என கதறும் பெற்றோர்; தமிழகத்தை விட்டே  போகிறோம் என பேசும்  பெற்றோர்... தங்களுக்கு நேர்ந்த இத்தனை துயரங்களுக்கும் காரணமாக இந்தச் சமூகமே குற்றவாளி என்பதுபோல் சித்தரிக்கிறார்கள். மாறாக தன் மகனே என்பதை உணர மறுப்பது மற்றொரு வேதனை. வீட்டில் கண்டிக்கப்படாத பிள்ளைகள்  சமூகத்தால் கண்டிக்கப்படும் எனும் வாக்கு எத்தனை நிஜம்! -யாணன்
(நிறுவனர்)
கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்றம்)

கருத்துகள் இல்லை: