வியாழன், 5 பிப்ரவரி, 2015

அரவிந்தர் ஆசிரமம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புகிறது?


புதுவை அரவிந்தர் ஆசிரம விடுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத், சாந்தி தேவி தம்பதியரின் மகள்கள் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் வசித்து வந்தனர்.
ஆசிரம நிர்வாகத்தின் மீது சகோதரிகள் புகார் கூறுவதை தொடர்ந்து விடுதியை காலி செய்யுமாறு ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் சகோதரிகள் விடுதியை காலி செய்ய மறுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து ஐகோர்ட்டு ஆசிரமத்தை விட்டு சகோதரிகளை வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது.
காலக்கெடு முடிந்த பிறகும் சகோதரிகள் விடுதியை காலி செய்யாமல் விடுதியில் தங்கி இருந்தனர். இதனால் போலீசார் உதவியோடு 5 சகோதரிகளும் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் மனம் உடைந்த ஆசிரம சகோதரிகள் தங்களது பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சகோதரிகளின் தாயார் சாந்திதேவி மற்றும் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர்.

தந்தை பிரசாத், நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் மட்டும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது ஹேமலதாவை அந்த பகுதியை சேர்ந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். தற்போது சகோதரிகள் 3 பேரும் தந்தை பிரசாத் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரம சகோதரிகள் நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:–
நாங்களும் இறந்துபோன எங்களின் சகோதரிகள், தாயார் ஆகியோரும் அரவிந்தர் மற்றும் அன்னையின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயது முதல் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். கடந்த 2001–ம் ஆண்டு ஜெயஸ்ரீ ஆசிரம உணவு கூடத்தில் தாக்கப்பட்டார். அன்று முதல் எங்களுக்கு பிரச்சினை தொடங்கியது. எங்களை ஆசிரமத்தில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்தது. இதனை கோர்ட்டு மூலம் தடுத்து நிறுத்தினோம்.
தற்போது சிவில் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எங்கள் மீதான பாலியல் தொல்லை குறித்து மத்திய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தோம். இந்த புகாரின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. கடந்த 14 ஆண்டு காலமாக ஆசிரம நிர்வாகத்தால் கடும் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டோம். நாங்கள் பண பலம், ஆள்பலம், அதிகார பலம் இல்லாதவர்கள். இதனால் எங்கள் கடமைகளை செய்ய முடியாமல் தடுக்கப்பட்டோம்.
ஆசிரம ஊழல்வாதிகள் எங்களின் இரு சகோதரிகள் மற்றும் தாயாரின் இறப்புக்கு காரணமானவர்கள். ஒருவரை கொலை செய்வதற்கும், அவரை இறக்க அனுமதிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. பலவீனமானவர்களை பாதுகாக்க ஆசிரம நிர்வாகம் தவறிவிட்டது.
அது மட்டுமல்லாமல் எங்கள் மீது உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மாதந்தோறும் ரூ. 29 ஆயிரம் எங்களுக்கு செலவழிப்பதாக நிர்வாகிகள் கூறுவது பொய். அவர்கள் எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானவை.
நிர்வாகத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆசிரம வாசிகளுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை தடை செய்து விடுவது வழக்கம். எங்களை விடுதியில் இருந்து மட்டும்தான் கோர்ட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மற்ற உரிமைகளில் கோர்ட்டு தலையிடவில்லை.
நாங்கள் இப்போதும் ஆசிரம வாசிகள்தான். தற்கொலை சம்பவத்திற்கு காரணமானவர்களையும், ஊழல் ஆசிரம நிர்வாகிகளையும் சட்ட ரீதியாக சந்திப்போம். புதுவை அரசு ஆசிரம அறங்காவலர்களை உருவாக்க வேண்டும்.
அதுவரை இடைக்கால கமிட்டி அமைக்க வேண்டும். எங்களுக்கு புதுவை அரசு எந்த இழப்பீடும் செய்யவில்லை. மத்திய உள்துறை அமைச்சரையும், புதுவை முதல்–அமைச்சரையும் விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: