புதன், 4 பிப்ரவரி, 2015

கண்ணீர் விட்டு அழுது அழுது ஒட்டு கேட்ட கிரண் பேடி

டெல்லி: தேர்தல் பிரச்சாரம் என்றாலே ஒருவருக்கொருவர் வசை பாடுவதும், குற்றம்சாட்டுவதும் சூடுபறக்கும். ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் கொடுத்த ஆதரவைப் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தினார். டெல்லி சட்டசபைக்கு வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ளதால் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி கிருஷ்ணநகர் தொகுதியில் இன்று கிரண் பேடி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார். "போலி நிறுவனங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்றுள்ளது. இதில் அக்கட்சியும் அதன் தலைவர்களும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்" என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், "என் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கைதாக தயார்" என கூறியிருந்தார். இவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய கிரண் பேடி, "எப்படியாவது தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அர்விந்த் கெஜ்ரிவால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுகிறார்" என்று கூறினார்.
முதல் முறையாக தேர்தல் களம் காணும் அவருக்கு வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்தனர். கூடியிருந்த மக்கள் கிரண்பேடிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தனர். சிலரோ பிரசாரத்தில் களைப்படைந்த கிரண் பேடிக்கு பிளாஸ்குகளில் டீ கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தனர்.

இதனைக் கண்ட கிரண் பேடி நெகிழ்ச்சியடைந்தார். அவரது கண்களில் கண்ணீல் மல்கியது. அவரால் சிலநிமிடங்கள் பேச முடியவில்லை. பின்னர் கைக்குட்டை கொண்டு தனது கண்ணீரை துடைத்தபடி பேசினார்.

இரும்புப் பெண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கிரண் பேடி பிரசாரத்தில் கண் கலங்கியது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம் ஓட்டுக்காக கிரண்பேடி கண் கலங்கினார் என்று எதிர்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: