வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் ராகுல் தலையிட்டதை ஒப்புக்கொண்டு விட்டார்: பா.ஜனதா

ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் தலையிட்டதாக ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டு விட்டார் என்று பா.ஜனதா கூறி உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜனதாதான், ஜெயந்தி நடராஜனை காங்கிரசுக்கு எதிராக பேச வைத்ததாக ராகுல் காந்தி கூறுவது தவறு. ஜெயந்தி நடராஜன், தடம் மாறாத காங்கிரஸ் தலைவர். டெல்லி சட்டசபை தேர்தலில், எதையாவது செய்து காலூன்ற வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி இப்படி பேசி உள்ளார். ஜெயந்தி நடராஜனின் அமைச்சக செயல்பாடுகளில் தலையிட்டதாக ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டுள்ளார். ஏழைகள் மற்றும் ஆதிவாசிகளின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுமாறு ஜெயந்தி நடராஜனிடம் அவர் கூறியிருந்தால், ஜெயந்தி நடராஜன், மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்று ‘பிக்கி’ (எப்.ஐ.சி.சி.ஐ.) கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘நாளை முதல் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உங்களுக்கு பிரச்சினை இருக்காது’ என்று கார்ப்பரேட் அதிபர்களிடம் ஏன் கூறினார்?


மேலும், சுற்றுச்சூழல் அமைச்சக பொறுப்பை வீரப்ப மொய்லியிடம் கொடுத்ததுடன், அவர் மூலமாக, 15 நாட்களில் 70 கோப்புகளுக்கு அனுமதி அளிக்கச் செய்தது ஏன்?

எனவே, ராகுல் காந்தியின் பேச்சும், செயல்பாடும் முரண்பாடாக உள்ளது. அவர் குழப்பத்தில், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவர் பேசுவது அவருக்கே தெரியவில்லை.

இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார் maalaimalar.com

கருத்துகள் இல்லை: