வியாழன், 5 பிப்ரவரி, 2015

நேரு, ராஜிவ், இந்திரா பெயரிலான திட்டங்கள் வல்லபாய் படேல், வாஜ்பாய் பெயர்களை சூட்ட முடிவு

ராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா
* ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரைமைப்பு திட்டம்
* ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டம்
*இந்திரா அவாஸ் யோஜனா
*இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்
*ராஜிவ் காந்தி குழந்தைகள் காப்பக திட்டம்
*ஜவஹர்லால் நேரு ரோஜ்கர் யோஜனா
*ராஜிவ் காந்தி ஷ்ராமிக் கல்யாண் யோஜனா
*இந்திரா விகாஸ் பத்திரம்
* இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம்
* ராஜிவ் ரத்னா அவாஸ் யோஜனா
புதுடில்லி: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை, பா.ஜ., தலைவர்களின் பெயர்களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தே.ஜ., கூட்டணி அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம், அடல் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் என்ற பெயரில் மாற்றப்படவுள்ளது.


முந்தைய, காங்., ஆட்சி காலத்தில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு, காங்., மூத்த தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் பெயர்கள் பெரும்பாலான திட்டங்களுக்கு சூட்டப்பட்டன.

3 தலைவர்களின் பெயரில்:

ஜவஹர்லால் நேரு கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம், ராஜிவ்காந்தி தேசிய குடிநீர் திட்டம், இந்திரா அவாஸ் யோஜனா, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், ஜவஹர்லால் நேரு ரோஜ்கர் யோஜனா என, முழுக்க முழுக்க, இந்த மூன்று தலைவர்களின் பெயர்களிலேயே, பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தேசப்பிதாவான மகாத்மா காந்தி பெயரில் ஒரே ஒரு திட்டமே செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்கும், திட்டங்களுக்கு புது வடிவம் கொடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்து, எட்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 12 திட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களுக்கு மூடு விழாவும் நடத்தப்பட்டது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு, தன்னுடைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு புது வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

நகர்ப்புறங்களில் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த திட்டம், இனிமேல், முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான வாஜ்பாய் பெயரில், 'அடல் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்' என செயல்படுத்தப்பட உள்ளது. பழைய திட்டத்தில், நகரங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை அகற்றுதல், குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் செயல்படுத்தப்பட்டன.

செயல்படவில்லை:

போதிய நிதி இல்லாததால், இந்த திட்டம், இரண்டு ஆண்டுகளாக செயல்படவில்லை. தற்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகளுடன், நகரங்களை டிஜிட்டல் மயமாக்குதல், 'வை-பை' வசதியை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளும் கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, இந்த திட்டத்துக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெயர் மாறும் திட்டங்கள்



* ராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா
* ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரைமைப்பு திட்டம்
* ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டம்
*இந்திரா அவாஸ் யோஜனா
*இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்
*ராஜிவ் காந்தி குழந்தைகள் காப்பக திட்டம்
*ஜவஹர்லால் நேரு ரோஜ்கர் யோஜனா
*ராஜிவ் காந்தி ஷ்ராமிக் கல்யாண் யோஜனா
*இந்திரா விகாஸ் பத்திரம்
* இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம்
* ராஜிவ் ரத்னா அவாஸ் யோஜனா

இவற்றில், 'ராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா' திட்டத்துக்கு, ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபத்யாயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜிவ் அவாஸ் யோஜனா திட்டத்துக்கு சர்தார் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜன சங்க நிறுவனரான ஷ்யாம பிரசாத் முகர்ஜி பெயரிலும் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மற்ற திட்டங்களின் பெயர்களும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சர்வம் நேரு குடும்பம் மயம்!


* நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்களில், மத்திய அரசு சார்பில், 12 திட்டங்களும், மாநில அரசுகள் சார்பில், 52 திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
* 20 விளையாட்டு போட்டிகளுக்கு, இந்த மூன்று தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
* நாட்டின் பல்வேறு பகுதிகளில், 98 கல்வி நிறுவனங்கள், இந்த மூன்று தலைவர்களின் பெயர்களில் செயல்படுகின்றன.
* இந்த மூன்று தலைவர்களின் பெயர்களில், 51 விருதுகள் வழங்கப்படுகின்றன.
* 74 முக்கியமான கட்டடங்கள், சாலைகளுக்கும் இந்த தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
* 39 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் இவர்களின் பெயர்களில் செயல்படுகின்றன.
* ஐந்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களும் இவர்களின் பெயர்கள்தான் சூட்டப்பட்டுள்ளன. தினமலர்.com

கருத்துகள் இல்லை: