வெள்ளி, 9 மே, 2014

கலைஞர் டிவி சரத்குமார்: மாறன் சகோதரர்கள் தாக்கி எனது காலில் முறிவு ஏற்பட்டது.

கலைஞர் டிவிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற ரூ. 200 கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனை அந் நிறுவனத்தின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது என்று கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்தார்.
அதன் விவரம்: "2007-ஆம் ஆண்டு டிசம்பரில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கலைஞர் டிவி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாக இயக்குநராகச் சேர்ந்தேன். இந் நிலையில், 2008-ஆம் ஆண்டில் மீண்டும் மாறன் சகோதரர்கள், கருணாநிதி குடும்பத்தாருடன் சேர்ந்தனர். அப்போது, என்னை மாறன் சகோதரர்கள் உடல் ரீதியாகத் தாக்கினர். அதில் எனது காலில் முறிவு ஏற்பட்டது.
தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியின் 60 சதவீத பங்குதாரர். அவரது அறிவுரையின்படியே நான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினேன். தயாளு அம்மாள் சார்பில் அவரது கருத்துகளைத்தான் கலைஞர் டிவி நிர்வாக குழு கூட்டங்களில் முன்மொழிந்தேன். நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

சிபிஐ குற்றம்சாட்டியுள்ள ரூ. 200 கோடி தொடர்பான கலைஞர் டிவி நிதிப் பரிவர்த்தனை எனது கவனத்துக்கு உள்பட்டே நடைபெற்றது. அது சட்டப்பூர்வமான பரிவர்த்தனை. நான் அறிந்தவரை அப் பரிவர்த்தனையில் முறைகேடு எதுவும் கிடையாது. முறைப்படி வங்கிகள் மூலம்தான் பணம் கொடுக்கல் வாங்கலும் நடைபெற்றது. வரம்புக்கு உள்பட்டே நான் செயல்பட்டேன்.
அவை அனைத்தும் தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது. அதில் மறைக்க எதுவும் கிடையாது' என்றார் சரத்குமார்.
இந்த வழக்கில் இவர்களையும் சேர்த்து, இதுவரை மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசா, சித்தார்த் பெஹுரா, சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மீதமுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் வரும் நாள்களில் பதிவு செய்யப்படவுள்ளது.
"நெருக்குதலால் என் மீது பொய் வழக்கு' கனிமொழி வாக்குமூலம்: "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் என் மீது பல்வேறு நெருக்குதல் காரணமாக சிபிஐ பொய் வழக்கு போட்டு சாட்சிகளை சேர்த்துள்ளது' என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வாக்குமூலம் பதிவு செய்தார்.
இதையொட்டி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் கனிமொழி வியாழக்கிழமை ஆஜரானார். அப்போது, சிபிஐ நீதிபதி அவரிடம் ஏற்கெனவே அளித்திருந்த 1,700 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை அவர் தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:
"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவியின் பங்குதாரராக இருந்த நான், அந் நிறுவனத்தின் தொடக்க காலத்தில் (2007 ஜூன் 6 முதல் 2007 ஜூன் 20வரை) இரு வாரங்களுக்கு மட்டும் அதன் இயக்குநராக இருந்தேன்.
அதைத் தவிர எனக்கும் அந் நிறுவனத்துக்கும் இடையே எத்தொடர்பும் கிடையாது.
அதன் அன்றாட நடவடிக்கையும் எனக்குத் தெரியாது. இந்த வழக்கில் எனக்கு எதிராக சில சாட்சிகளை வெவ்வேறு நெருக்குதல் காரணமாக சிபிஐ சேர்த்துள்ளது.
2007-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி கலைஞர் டிவி இயக்குநர் பதவியை நான் ராஜிநாமா செய்துவிட்டேன். அதன் பிறகு அந் நிறுவனத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும் நான் தலையிட்டதில்லை, கலந்துகொண்டதும் கிடையாது.
அதன் பிறகு 18 மாதங்கள் கழித்துதான் சிபிஐ குற்றம்சாட்டியுள்ள கலைஞர் டிவி நிதிப் பரிவர்த்தனை நடந்துள்ளது. அப் பரிவர்த்தனை நடைபெற்ற 2008-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நான் கலைஞர் டிவியுடன் எந்த வகையிலும் தொடர்பில் இருந்தது கிடையாது. எந்த இயக்குநர் கூட்டத்திலும் நான் பங்கேற்றதில்லை. எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திட்டதில்லை.
இருந்தபோதும், என்னை இந்த வழக்கில் சிபிஐ குற்றவாளியாக சேர்த்துள்ளது. இதன் பின்னணியில் வெவ்வேறு நெருக்கடி இருக்கலாம் என சந்தேகிக்கிறன்' என்று வாக்குமூலத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை: