செவ்வாய், 6 மே, 2014

எல்லாவற்றையும் நாங்கள் வெளிப்படையாகச் சொன்னால் ஜெய்ராம் ரமேஷ் தாங்கிக் கொள்ள முடியாது: டி.ஆர்.பாலு

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், திமுக நன்றி மறந்து செயல் படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் திமுகவினர் மோசமான நிர்வாகத்தையே அளித்தனர். மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு பேரழிவு சக்தி என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.  அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் திமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த கூட்டணி உருவாகியபோது, ஜெய்ராம் ரமேஷ் முக்கிய பங்கு வகிக்கவில்லை. அவர் முக்கியத்துவம் இல்லாமல்தான் இருந்தார். இப்போது திமுகவை அநாவசியமாக விமர்சித்துள்ளார். என்னையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரசுக்கு திமுக செய்ததையும்,  திமுகவுக்கு காங்கிரஸ் செய்ததையும் சீர் தூக்கிப் பார்த்தால் நன்றி மறந்தது திமுக அல்ல. காங்கிரஸ்தான் என்பது புலனாகும். மத்திய அமைச்சரவை பதவியில் நான் ஆக்கப்பூர்வமாகத்தான் செயல்பட்டுள்ளேன். அழிவுப்பூர்வமாகச் செயல்படவில்லை. ஜெய்ராம் ரமேஷ் வாய்க்கு வந்தபடி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் நாங்கள் வெளிப்படையாகச் சொன்னால் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது’’ என்றார் அவர். nakkheeran.in

கருத்துகள் இல்லை: