செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஆம் ஆத்மி கட்சியுடன் கூடங்குளம் போராட்டக்குழு கூட்டணி: மக்களவை தேர்தலில் போட்டி


கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பிரபலமான அந்த அமைப்பு தற்போது டெல்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஆட்சியை பிடித்து சாதனை படைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்த்து பாராளுமன்ற தேர்தலில் குதிக்கிறது.


இடிந்தகரையில் போராட்டம் நடந்தபோது உதயகுமாரை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனும் இடிந்தகரை வந்து போராட்டக்குழுவினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க 10 கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஆம் ஆத்மி கட்சியும் உறுதி அளித்துள்ளது.
இதையடுத்து அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீனவர்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓட்டுகளை குறி வைத்து கன்னியாகுமரி தொகுதியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும், நெல்லை தொகுதியில் பாதிரியார் ஜேசுராஜூம், தூத்துக்குடியில் அமைப்பின் தலைவர் புஷ்பராயனும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: