திங்கள், 24 பிப்ரவரி, 2014

பார்ப்பன – பனியாக்களின் பிடியில் இந்தியா

ஏறக்குறைய திவாலாகி விட்டிருந்த இந்த நாடு புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாகத் “தேசபக்த வேடதாரிகள்” பிரமையூட்டுகிறார்கள். தம்மைத் தாமே அறிவாளிகளாகக் கருதும் நடுத்தர வர்க்க அப்பாவிகளும் அதை நம்பி அந்தக் கூட்டு ஒப்பாரியில் கலந்து கொள்கிறார்கள்.இந்தியா 2020-இல் வல்லரசாகி விடும் என்று அரசவைக் கோமாளி அப்துல் கலாம், தான் பதவியில் இருந்தபோது ஒரு ஆரூடம் சொன்னார். ஆமாம், ஆமாம் வல்லரசாகிவிடும் என்று எல்லாரும் கூட்டுப் பாடல் இசைத்தார்கள். அதுவே தேசியப் பாடலாகியது. “வல்லரசு” என்ற சொல்லுக்கு வேறுவேறு பொருள் விளக்கம் சொன்னார்கள். அமெரிக்கா பொருளாதார வல்லரசு என்றால், இந்தியா ஆன்மீக வல்லரசு! இப்படிச் சொல்லியே நாட்டை ஏய்த்து வந்தவர்கள் இல்லையா? நாமும் அணுகுண்டு வெடிச்சுட்டோம்ல, இனி இந்தியா ஒரு இராணுவ வல்லரசுதான் என்றார்கள். அப்புறம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் இப்போதைக்கு உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு; விரைவிலேயே முதலிடத்தைப் பிடித்து விடுவோம் என்று கூவினார்கள்.

இப்படித் “தேசபக்த வேடதாரிகள்” பெருமை பாராட்டிக் கொண்டிருந்தபோதே “தேசியப் பொருளாதாரம்” தலைகுப்புற விழத் தொடங்கி விட்டது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. உற்பத்திப் பொருட்களின் தொழில் வளர்ச்சி விகிதமும் ஏற்றுமதியும் சரிந்து கொண்டே போகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் கும்பலையே “கதிகலங்கடித்து” வருகிறது. இந்த உண்மையை, ஆட்சியை விட்டு நிச்சயம் துரத்தப்படுவோம் என்ற நிலையில் ஒப்புக்கொண்டு கையைத் தூக்கி விட்டார்கள்.
லட்சுமி மிட்டல்
லட்சுமி மிட்டல்
ஆனாலும், “இந்திய தேசத்தின் பெருமை”யைத் தூக்கி நிறுத்தக் கூடிய சில விவரங்கள் தேசபக்தர்களின் கைவசம் உள்ளன. அவை : பிரேசில், ருசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ் BRICS நாடுகள்)ஆகிய உலகின் “வேகமாக வளரும்” பொருளாதாரங்களின் சங்கத்திலேயே சூப்பர் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார ரீதியில் இருள் சூழ்ந்துள்ள போதிலும், இந்தியா தனது அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர்களின் (UHNW) எண்ணிக்கையில் பிரிக்ஸ் நாடுகளிலேயே கடந்த ஓராண்டில் சாதனை படைக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டது. அதாவது, மொத்தம் 7,850 சூப்பர் பணக்காரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். (அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர் என்பவர் 3 கோடி டாலருக்கு மேல் சொத்துள்ளவர்கள் என கணக்கில் கொள்ளப்பட்டவர்கள்) இவர்களின் மொத்த நிகர செல்வ மதிப்பு 93,500 கோடி டாலர்கள்.
மேலும், அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர்களின் (UHNW) வரிசையில் மிக உயர்ந்த எண்ணிக்கையாக, 1,250 பெண்களைக்கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இவர்களின் மொத்தச் செல்வ மதிப்பு 9,500 கோடி டாலராகும்.
நூறு கோடிடாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் எண்ணிக்கையில் 103 பேரைப் பெற்று, ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது. பிரான்ஸ், சௌதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் ஆகியவற்றை விட அதிக எண்ணிக்கையிலான கோடீசுவரர்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கோடீசுவரர்களைக் கொண்ட நியூயார்க், ஹாங்காங், மாஸ்கோ, இலண்டன் ஆகிய மாநகரங்களை அடுத்து ஐந்தாவது இடத்தில் மும்பை உள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
நூறு கோடி டாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் மேலிருந்து ஆறாவது இடத்தில் லட்சுமி மிட்டல், ஒன்பதாவது இடத்தில் முகேஷ் அம்பானி, 36-வது இடத்தில் அசிம் பிரேம்ஜி, 42-வது இடத்தில் ரூயா சகோதரர்கள், 56-வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால், 81-வது இடத்தில் அதானி, 97-வது இடத்தில் ஆதித்தியா பிர்லா ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் தேர்தல்களில் அடுத்தடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த விவரங்களை வைத்து “இந்திய தேச பக்தர்களின்” காதில் பூச்சுற்றலாம். மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக்சிங் கும்பல் இந்த வகை வளர்ச்சியைத்தான் தமது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டு கால சாதனையெனப் பீற்றிக்கொள்கிறது.
மோடிக்கு வாக்களிக்கக் கோரும் “குஜராத் மாடல் வளர்ச்சி” எத்தகையதாக இருக்கும் என்பதை மேற்கண்ட விவரங்களை பின்வரும் வேறொரு கோணத்தில் பகுத்துப் பார்த்தாலே விளங்கிவிடும்.
நூறு கோடி டாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள 103 இந்தியர்களில் மிகமிகப் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் இராஜஸ்தானைச் சேர்ந்த பனியா சாதியைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே முதலிரண்டு பெரும் சூப்பர் பணக்காரர்களான லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி ஆகியோர் பனியா. மூன்றாம் இடத்திலுள்ள அசீம் பிரேம்ஜி முசுலீமாக மாறிய பனியா. நான்காவதிலிருந்து ஒன்பதாவது வரையுள்ள பெரும் சூப்பர் பணக்காரர்கள் பனியாக்கள். பத்தாவது இடத்தில் உள்ளவர் பார்சி.
சாவித்திரி ஜிண்டால்
சாவித்திரி ஜிண்டால்
இந்தியாவின் உயர்ந்த 55 சூப்பர் பணக்காரர்களில் 29 பேர், குஜராத் (13) மற்றும் இராஜஸ்தானை(16)ச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதமானவர்களேயான இந்தப் பனியாக்கள்தாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியாள்கிறார்கள்.
இந்திய மக்கள் தொகையில் ஆறு சதவீதமான இந்த பனியா, பார்ப்பன, பார்சி முதலிய சாதி-சமூகப் பிரிவினர்கள்தாம் நாட்டின் இன்றைய பெரும் தொழிற்கழகங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார், அரசு- பொதுத்துறை மட்டுமல்ல; தேசங்கடந்த பல தொழில்,சேவை, வங்கி நிறுவனங்கள் கூட பார்ப்பன, பனியா கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. மும்பய் பங்குச் சந்தையான சென்செக்ஸின் முதல் முப்பது இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்கள் பார்ப்பன, பனியா கும்பலால் கட்டுப்படுத்தப் படுபவை.
ஏ.சி.சி.- (சுமித்பானர்ஜி), பி.எச்.இ.எல். (ரவிகுமார் கிருஷ்ணசாமி), ஐ.சி.ஐ.சி.ஐ. (கே.வி. காமத்), இந்துஸ்தான் யுனிலீவர் (நிதின் பரஞ்பே), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (யோகேஸ் கவுர்), எல்.அண்டு டி. (ஏ.எம். நாயக்), ஓ.என்.ஜி.சி. (ஆர்.எஸ்.சர்மா), எஸ்.பி.ஐ. (அருந்ததி பட்டாச்சார்யா), பஞ்சாப் நேஷனல் வங்கி (கே.சி. சக்ரவர்த்தி), பரோடா வங்கி (எம்.டி.மல்லையா) ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் நிர்வகிக்கின்றனர்.
பாரதி ஏர்டெல் (சுனில் மிட்டல்), கிராஸிம் மற்றும் ஹின்டால்கோ (குமாரமங்கலம் பிர்லா), எச்.டி.எப்.சி. (தீபக் பரேக்), ரிலையன்ஸ் (முகேஷ் மற்றும் அனில் அம்பானி), ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் (அனில் அகர்வால்), சன் பார்மா (திலீப் சாங்வி) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.
அதானி
அதானி
இன்ஃபோசிஸ் (நாராயண மூர்த்தி), டி.சி.எஸ். (சுப்ரமணியன் ராமதுரை) ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் நிர்வகிக்கின்றனர்.
விப்ரோவை லூகானா என்ற பனியா சாதியிலிருந்து ஷியா பரிவு இஸ்லாமியராக மதம் மாறிய அசிம் பிரேம்ஜி நிர்வகிக்கிறார்.
இந்தியாவின் பெரிய வானூர்தி நிறுவனங்களில்…
கிங்பிஷர் (விஜ மல்லையா) ஒரு பார்ப்பனருக்கும், ஜெட் ஏர்வேஸ் (நரேஷ் கோயல்) ஒரு பனியாவுக்கும் சொந்தமானது .
இந்திய செல்பேசி சேவை நிறுவனங்களில்…
ரிலையன்ஸ் (அம்பானி), ஏர்டெல் (மிட்டல்), வோடாபோன் (எஸ்ஸார் -ரூயா), ஐடியா (பிர்லா), ஸ்பைஸ் (மோடி) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.
பி.எஸ்.என்.எல்.-ஐ (குல்தீப் கோயல்) ஒரு பனியாவும் டாடாவின் டி.டி.எம்.எல். -ஐ (கே.ஏ.சவுக்கர்) ஒரு பார்ப்பனரும் நடத்துகிறார்கள்.
பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கிரிக்கெட்டையும் பார்ப்பன-பனியா கும்பல் கட்டுப்படுத்துகிறது.
சசி ரூயா
சசி ரூயா
தி இந்து (கஸ்தூரி ஐயங்கார் குடும்பம்), இந்துஸ்தான் டைம்ஸ் (பிர்லா), இந்தியன் எக்ஸ்பிரஸ் (கோயங்கா) ஆகியன பார்ப்பன-பனியாக்களுக்குச் சொந்தமானவை.
இந்தி நாளிதழ்களில்…
தைனிக் ஜாக்ரான் (குப்தா), தைனிக் பாஸ்கர் பனியாக்களுக்கும், திவ்ய பாஸ்கர், குஜராத் சமாச்சார் (ஷா) ஆகி யன அகர்வால்களுக்கும், (சமணருக்கு)சொந்தமானவை.
லோக்மத் (தார்தா) என்ற மிகப் பெரிய மராத்திய நாளிதழும், ராஜஸ்தான் பத்திரிக்கா (கோத்தாரி), நவபாரத் டைம்ஸ் பத்திரிகையும் சமணர்களுக்குச் சொந்தமானவை.
இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில்…
எஸ்ஸார் (ரூயா), ஆர்செலார் மிட்டல் (லட்சுமி மிட்டல்),இஸ்பட் (மிட்டல்), ஜின்டால், சன் ஸ்டீல் (சிங்கால்) ஆகியன பனியாக்களுக்குச் சொந்தமானவை .
விசா ஸ்டீல் (அகர்வால்), லாடு ஸ்டீல் (குப்தா) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.
அரசுத் துறை நிறுவனமான செயிலை (எஸ்.கே.ரூங்டா) நடத்துபவர் ஒரு பனியா.
பணக்காரர்கள்இந்திய சிமெண்ட் நிறுவனங்களில்…
ஜே.கே. சிமெண்ட்ஸ் (சிங்கானியா), அம்புஜா சிமெண்ட்ஸ் (நியோடியா மற்றும் சேக்சாரியா), டால்மியா சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட்ஸ் (பிர்லா) ஆகிய நிறுவனங்கள் பனியாக்களுக்குச் சொந்தமானவை.
மோட்டார் தொழிலில்…
இந்துஸ்தான் மோட்டார்ஸ் (பிர்லா), பஜாஜ் ஆட்டோ (பஜாஜ்) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.
இந்த நாட்டில் சமூக நீதி, மண்டல் கமிசன் கொள்கைகள் – இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து பலஆண்டுகளாகியும் பனியா, பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த வெகு சிலரே மேற்கண்ட நிலையை எட்ட முடிகிறது. முதன்மையாகத் தமது சாதி-சமூகத் தொடர்புகளை வைத்து அரசு மற்றும் அரசியலில் இலஞ்ச-ஊழல்களையும் அதிகார முறைகேடுளையும் கிரிமினல் குற்றங்களையும் செய்துதான் இந்த நிலையை எட்டியிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரும் இதற்காகத் தண்டிக்கப்படவில்லை. முதலில், அரசுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றினார்கள். தொழில்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் முதலீடு உதவி, வரிவிலக்கு, அரசு ஒப்பந்தங்கள் என்று அரசு நிதியையும், இலவச நீர், நிலம், மின்சாரம் எனவும் பல இலட்சம் கோடிகளையும் பறித்தார்கள். இப்போது ஏராளமான இயற்கை வளங்களைச் சூறையாடுகிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் திவாலாகும் நிலையிலும், கோடிகோடியான மக்கள் ஓட்டாண்டிகளாகும் நிலையிலும் குறிப்பிட்ட சிறு சாதியினர் உலகின் அதி சூப்பர் பணக்காரர்களாகும் இரகசியம் இதுதான்.
- கதிர்

கருத்துகள் இல்லை: