வெள்ளி, 21 டிசம்பர், 2012

தினமலர் நாளிதழ் புறக்கணித்த செய்தி

சென்னை:""தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், எங்களின் செய்திகளை சுவர்களில், கரித்துண்டுகளை வைத்து எழுதுவோம்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
வடசென்னை, தங்கசாலையில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் கருணாநிதி பேசியதாவது:டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், அப்பகுதி, கருணாநிதியின் தொகுதி எனவும், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது உண்மை தான்; நான் அதை மறுக்கவில்லை.அதைத் தடுக்க வேண்டியதற்கான செங்கோல், என்னிடம் இல்லை. செங்கோல், கொடுங்கோலாக மாறி, வேறு ஒருவர் கையில் உள்ளது. திருவாரூர் தொகுதியை சுற்றியுள்ள மயிலாடுதுறை மற்றும் சிவகாசி உள்ளிட்ட இடங்களில், ஏழு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.dinamalar.com/
அவர்களுடைய குடும்பத்தாருக்காக, தி.மு.க., சார்பில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், 3.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன். இது வெறும் பேச்சு தான் என்றும் சிலர் எழுதுவர். எனவே, அதை இங்கேயே, திருவாரூர் மாவட்ட செயலர் கலைவாணனிடம் தருகிறேன். அதை உரியவர்களிடம் அவர் சேர்ப்பித்து எனக்கு ரசீது தருவார்.அண்மையில், தி.மு.க., சார்பில் மின்வெட்டை கண்டித்து தமிழகத்தில், 500 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அது குறித்த செய்தியை, தினமலர் உள்ளிட்ட சில நாளிதழ்கள் புறக்கணித்து விட்டன.

அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி செய்திகளை போல, தி.மு.க., கட்சி செய்திகளையும் அவர்கள் வெளியிட வேண்டும்.செய்தி வெளியிடவில்லை என்பதற்காக நாங்கள் கதற மாட்டோம். அவ்வாறு வெளியிடா விட்டால் கவலையில்லை; எங்களுக்கு சுவர்கள் இருக்கின்றன; கரித்துண்டு இருக்கிறது. பத்திரிகை மட்டுமே எங்களுக்கு மூல பலம் இல்லை. மூளை பலம் இருக்கிறது. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து எங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்.இவ்விழாவிற்கு திரண்டுள்ள கூட்டம், வருகிற தேர்தலுக்கான முன்னோட்டம். இருண்ட தமிழகத்தை காக்க, தி.மு.க., எழுச்சி பெற அனைவரும் திரள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் வளர்ச்சி, பா.ஜ.,தளர்ச்சி: கருணாநிதி கருத்து "குஜராத், இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்; காங்கிரஸ் வளர்வதையும், பா.ஜ., தளர்வதையும் எடுத்துக் காட்டுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

குஜராத், இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.,வும், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றது குறித்து, நேற்று அறிவாலயத்திற்கு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, கருணாநிதி, ""இந்த இரு மாநில முடிவுகள்; காங்கிரஸ் வளர்வதையும், பா.ஜ., தளர்வதையும் எடுத்துக் காட்டுகிறது,'' என்றார்.

கருத்துகள் இல்லை: