வெள்ளி, 21 டிசம்பர், 2012

சட்டத்திருத்தம் வருகிறது கற்பழிப்புக் குற்றங்களுக்கு மரணதண்டனை?

கற்பழிப்புக் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் வரும் 27 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெறுகின்றது.டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சனை நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் எதிரொலித்தது.தனால் கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்கள் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுபற்றி விவாதித்து அரசுக்கு சட்ட ரீதியான அறிக்கை மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக உள்துறை விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் வருகிற 27 ஆம் தேதி கூடுகிறது என்று அக்குழுவின் தலைவர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக கூறுகையில், மாணவி கற்பழிப்பு பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தபோது அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி வருத்தம் தெரிவித்தனர். இதபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் துரிதமான நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான சட்டம் அவசியம்.


சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இதுபோன்ற பாலியல் வழக்குகளின் விசாரணை அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் இத்தகைய குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

இந்த கருத்துக்கள் அனைத்தும் நிலைக்குழு கூட்டத்தில் விவாதித்து அரசுக்கு எங்கள் பரிந்துரைகளை அளிப்போம் என்று வெங்கய்ய நாயிடு கருத்துத் தெரிவித்தார்.

டெல்லி போலீஸ் கமிஷனர், உள்துறை செயலாளர் ஆகியோர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: