புதன், 19 டிசம்பர், 2012

பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

இறந்து போன சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் முழு வரலாறு. ஒரு பாசிஸ்ட் எப்படி தோன்றி யாரால் உதவி செய்யப்பட்டு எதனால் வளர்ந்தார் என்பதை விவரிக்கும் பதிவு. அவசியம் படியுங்கள், பரப்புங்கள்!
பால்-தாக்கரே
சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரே கடந்த நவம்பர் 17 அன்று இயற்கையாக மரணமடைந்துவிட்டார் என்பதற்காக நாம் வருந்தத்தான் வேண்டும். ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவன் தண்டிக்கப்பட்டு, பலமுறை தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படாமல், இயற்கையாக மரணமடைந்திருப்பது வருத்தமானதுதான்.
செத்தவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவனைத் தெவமாக்குவதென்பது இந்துத்துவ மரபு. அந்த வழியில் முதலாளித்துவ ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும் தாக்கரேவுக்காக ஒப்பாரி வைத்து, அவரது சிவசேனா கும்பலின் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களைச் சூடு சோரணையின்றி மூடிமறைத்தன. ஆனால், இப்பயங்கரவாத கும்பலின் இரத்தவெறி பிடித்த வரலாறை நாட்டு மக்கள் ஒருக்காலும் மறக்கவே முடியாது.
1960-களில் இந்தியாவில் நிலவிய அரசியல் – பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆளும் காங்கிரசு கட்சியின் மீது மக்களிடம் அதிருப்தி பெருகிய நேரத்தில், மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன், மும்பையில் மார்மிக் எனும் மராத்திய வார இதழை நடத்திய பால்தாக்கரே, குஜராத்தியர்கள், பீகாரிகள் மற்றும் தென்னிந்தியர்களால் மராத்திய மக்களின் வாழ்வும் வளமும் பறிக்கப்படுவதாக இனவெறியூட்டும் பிரச்சாரத்தை நடத்தி, 1966-இல் சிவசேனா கட்சியைத் தொடங்கினார்.
மராத்திய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக் கொண்ட இக்கட்சி, ‘வந்தேறி’களான குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி 1969-இல் மும்பையில் குடியேறிய  கர்நாடகத்தவர் மீது கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட தாக்கரேவின் குண்டர்கள் 59 பேரைக் கொன்று 274 பேரைப் படுகாயப்படுத்தினர்.
மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பை நகரில் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைக் கண்டு அரசும் பெருமுதலாளிகளும் கதிகலங்கிய காலம் அது. 1967 செப்டம்பர் 10 அன்று மார்மிக் இதழில் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதுதான் தனது லட்சியம் என்று தாக்கரே வெளிப்படையாக அறிவித்தார். மூன்று மாதங்கள் கழித்து, 1967 டிசம்பரில், சிவசேனா குண்டர்கள் பரேல் பகுதியில் தால்வி கட்டிடத்தில் இருந்த இருந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கித்  தீயிட்டுக் கொளுத்தினர். இடது, வலது கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த முன்னணியாளர்களும் தொழிற்சங்க செயல்வீரர்களும் சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
தொழிலாளர்களின் போராட்டம் நடக்குமிடத்துக்கு போலீசு வாகனங்களோடு கூடவே சிவசேனா குண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திறங்கிப் போராட்டக்காரர்கள் மீது பாந்து தாக்குதல் தொடுப்பார்கள்.  படுகாயமடைந்த தொழிலாளர்கள் போலீசால் கைது செயப்பட்டு சிறையிடப்படுவார்கள். இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பாரதீய காம்கார் சேனா என்ற சிவசேனாவின் தொழிற்சங்கம் ஆலைகளில் மட்டுமின்றி வங்கி, அரசுத்துறை மற்றும் சேவைத் துறை நிறுவனங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போட்டி சங்கமாக வளரத் தொடங்கியது. இதனாலேயே தரகுப் பெருமுதலாளியான ராகுல் பஜாஜ், தனது ஆலையின் பிரச்சினைகளை தாக்கரே தீர்த்து வைத்தார்” என்று பெருமையுடன் கூறினார்.
1970-களில் தாக்கரேவின் இந்துவெறியானது பிவாண்டி, ஜலகோன், மகத் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலாகப் பரவியது. இந்திய நாட்டில் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் புற்று நோயைப் போன்றவர்கள்; அவர்களை அழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது” என்று வெறியூட்டிய தாக்கரே, முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப் படையைத் திரட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க,  தாழ்த்தப்பட்டோர் மீது திட்டமிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களை சிவசேனா குண்டர்கள் கட்டவிழ்த்து விட்டனர். ஜனவரி 1974-இல் தலித் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாகவத் ஜாதவ் தாக்கரே கும்பலால் படுகொலை செயப்பட்டார். 1984-இல் விதர்பா பிராந்தியத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் மீது சிவசேனாவின் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு பயிர்கள் நாசமாக்கப்பட்டன.
மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதை எதிர்த்து 1990-களில் சிவசேனா குண்டர்கள் இப்பிராந்தியத்தில் பயங்கரவாத வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். இருப்பினும், சிவசேனா குண்டர்கள் நடத்திய வன்கொடுமை வெறியாட்டங்கள் தொடர்பான 1,100 வழக்குகளை  1990-களின் இறுதியில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தள்ளுபடி செய்தது. அதன் பின்னர், ஜூலை11,1997-இல் ராமாபா அம்பேத்கர் நகரில் சிவசேனா குண்டர்கள் நடத்திய தாக்குதல் நடத்திய பின், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டு, 30 பேர் படுகாயமடைந்தனர். ஆனாலும் சிவசேனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளஞ்சோடிகளைத் தாக்கிய சிவசேனா, தன்னை கலாச்சாரப் போலீசாக நியமித்துக் கொண்டு ஆட்டம் போட்டது. தேசபக்த சவடால் அடித்துக் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கு எதிர்ப்பு காட்டுவது என்ற பெயரில் மிரட்டலையும் அச்சுறுத்தலையும் ஏவியது. பாலிவுட் திரைப்படங்கள் தாக்கரே தயவுக்குப் பின்னரே வெளிவர முடிந்தது. சச்சின் தெண்டுல்கர், சானியா மிர்சா முதலான விளையாட்டு வீரர்களும், அமிதாப்பச்சன், ஷாருக்கான் முதலான சினிமா நடிகர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாயினர். சிவசேனாவை விமர்சித்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் மீது தாக்கரே குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்.
மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன் மராத்தியர்களுக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்ட சிவசேனா, மும்பை நகராட்சியைக் கைப்பற்றிய பின்னர், அரசு ஒப்பந்தங்களை மராத்தியர்களுக்குத் தராமல் பிற மாநிலப் பெரு முதலாளிகளுக்குத்தான் கொடுத்தது.  மும்பையில் ஜவுளி ஆலைகள் நெருக்கடியில் சிக்கியிருந்த காலத்தில், வேலைநிறுத்தம் செய்ததால் அதைச் சாக்கிட்டு ஆலை மூடல்கள் நடந்தன. அப்போது ஏறத்தாழ 2 லட்சத்து 75,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவர்களில் 90 சதவீதத்தினர் மராத்தியர்கள்தான். ஆனாலும் சிவசேனா அவர்களுக்காக எதுவும் செயவில்லை. ஜனவரி 1982 -இல் மும்பையில் நடந்த மாபெரும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது சிவசேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தினர். தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்த பின்னர்,  மூடப்பட்ட பஞ்சாலைகள் சிவசேனாவின் ஆதரவுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப் போயின.
ஜூலை 1996-இல் மும்பையின் மாதுங்கா பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்ய மறுத்த ரமேஷ் கினி என்பவர் சிவசேனா குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமிகாந்த் ஷா, தாக்கரேயின் தம்பி மகனும் தற்போதைய நவநிர்மாண் சமிதியின் தலைவருமான ராஜ்தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளியாவார். தனது கணவரின் கொலைக்குக் காரணம் ராஜ்தாக்கரேதான் என்று தைரியமாக குற்றம் சாட்டி அவரது மனைவி ஷீலா நீதிக்காகப் போராடினார். அப்போது சிவசேனா ஆட்சியிலிருந்ததால் புலன் விசாரணையை மாநில அரசு முடக்கியது. பின்னர் மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் மையப் புலனாவுத்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனாலும், மும்பை போலீசு ஒத்துழைக்க மறுத்து தடயங்களை அழித்தது. சிலி நாட்டில் ராணுவ சர்வாதிகாரி பினோசெட் உருவாக்கிய குண்டர் படையைப் போலவே சிவசேனா குண்டர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாகக் கொட்டமடித்தனர்.
அமெரிக்காவின் என்ரான் மின் நிறுவனத்திக்கு எதிராகச் சவடால் அடித்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒப்பந்தத்தை ரத்து செய்து சூரத்தனம் காட்டிய தாக்கரே,  பின்னர் அதே என்ரான் நிறுவனத்தின் கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டார். மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பிற மாநிலத்திலிருந்து குடியேறியவர்களால்தான் பாதிக்கப்படுகிறது என்று இனவெறியூட்டி தாக்குதலை நடத்திய தாக்கரே, அமெரிக்காவின் என்ரானால் மகாராஷ்டிரா சூறையாடப்பட்டதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுதான் தாக்கரே முன்வைத்த மண்ணின் மைந்தர்கள் எனும் இனவெறி பாசிச அரசியலின் யோக்கியதை.
காங்கிரசின் ஆதரவு இல்லாமல் சிவசேனா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது. வசந்தராவ் நாயக், வசந்த்தாதா பட்டீல் ஆகிய காங்கிரசு முதல்வர்கள் சிவசேனாவின் வெறியாட்டங்களுக்குத் துணைநின்றனர். சிவசேனாவை ஒரு கருவியாகக் கொண்டு மும்பையில் தொழிற்சங்க இயக்கம் வலுவடைவதைத் தடுத்தனர். பிவாண்டி கலவரம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி மதன் கமிசன் சிவசேனாவையும் இதர காவிக் கும்பல்களையும் குற்றம் சாட்டிய போதிலும், காங்கிரசு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக 1992-93இல் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர், மும்பையில்  இந்துவெறியர்களும் சிவசேனா குண்டர்களும் முஸ்லிம்கள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கும் நரவேட்டைக்கும் மூளையாகச் செயல்பட்டவர்தான் பால்தாக்கரே என்று சிறீகிருஷ்ணா கமிசன் குற்றம் சாட்டிய போதிலும், மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலை நான்தான் தொடங்கி வைத்தேன். நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் நின்றது” என்று பகிரங்க வாக்குமூலமாக சாம்னா இதழின் தலையங்கத்தில் தாக்கரே எழுதியிருந்த போதிலும், இந்திய அரசு இப்பயங்கரவாதியைத் தண்டிக்காமல் அதிகாரபூர்வ பயங்கரவாதியாக வைத்துப் பாதுகாத்தது. தாக்கரே மீதான இதர வழக்குகளும் அவரது சாம்னா நாளேட்டின் இனவெறிப் பிரச்சாரத்துக்கு எதிரான வழக்குகளும் இன்னமும் நடத்தப்படவேயில்லை. பிரதீபா பட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் அரசுத் தலைவர்களான விவகாரங்களில் சிவசேனாவுடனான காங்கிரசின் கள்ளக்கூட்டு  அப்பட்டமாக வெளிப்பட்டது.
போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இல்லாமல் பாசிசம் ஒருக்காலும் அதிகாரத்துக்கு வருவதில்லை. போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் சமரச – சந்தர்ப்பவாதப் போக்கைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், பாசிச சிவசேனா கும்பல் இந்த அளவுக்கு வளர்ந்து வெறியாட்டம் போட்டிருக்கவே முடியாது. பால்தாக்கரேவின் உடல் எரியூட்டப்பட்ட அதே சிவாஜி பூங்கா பகுதியில் 1970-இல் பால்தாக்கரேவையும் அவனது கூலிப்படையினரையும் மும்பை வீதிகளில் வெட்டிப் புதைப்போம்!” என்று சூளுரைத்து 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.  மத்திய மும்பை தொகுதியின் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வும் தொழிற்சங்கவாதியுமான  கிருஷ்ண தேசா, ஜூன் 6, 1970 அன்று சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்ட பின்னர் நடந்த அவரது இறுதி ஊர்வலம்தான் அது. சிவசேனாவுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராக இருந்தபோதிலும்,  அன்றைய போலிகம்யூனிசத் தலைமை அமைதி காத்தது. சிவசேனாவை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், அனைத்தையும் சட்டவாத ரீதியில் தீர்த்துக் கொள்ள முயற்சித்தது. உழைக்கும் மக்களிடம் இந்தியப் போலி ஜனநாயகத்தின் மீது மாயைகளை வளர்த்தது.
தேசாயின் துணைவியாரான சரோஜினி தேசா அதேதொகுதியில் வலது கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டபோது, இடைத்தேர்தலில் அவரைத் தோற்கடித்து, முதன் முறையாக கம்யூனிஸ்டு கோட்டையைத் தகர்த்து முன்னிலும் தீவிரமாக சிவசேனா கும்பல் தொழிற்சங்க இயக்கத்தினரைத் தாக்கத் தொடங்கியது. இவ்வளவுக்கும் பின்னரும், பாசிச இந்திரா ஆதரவு போலிகம்யூனிஸ்டு தலைவரான டாங்கே, ஒருமுறை தாக்கரேயுடன் சேர்ந்து மேடையேறி கைகுலுக்கினார். சோசலிஸ்டு வேடம் போட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ் தாக்கரே கும்பலின் குடும்ப நண்பராகிப் போனார்.
2001 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசின் பட்ஜெட்டை எதிர்த்தும், அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், தொழிலாளர் சட்டங்களைத் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்தம் செவதை எதிர்த்தும் இடது, வலது கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தன.  அரசியல் ஆதாயத்துக்காக சிவசேனாவும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்ததும், அதனைப் போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் வரவேற்று, தங்களது பொதுக்கூட்டங்களில் பாசிச சிவசேனா குண்டர்படைத் தளபதிகளை மேடையேற்றிக் கூடிக்குலாவின.
போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிஸ்டுகளின் சந்தர்ப்பவாதமும் காங்கிரசின் ஆதரவும் மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமே இந்துவெறி போதை தலைக்கேறி பாசிச பயங்கரவாத சிவசேனா கும்பலை ஆதரித்து நின்றது. இதனாலேயே இட்லரின் வாரிசாக சிவசேனா இத்தனை காலமும் கொட்டமடிக்க முடிந்துள்ளது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையின் மகிமை. தாக்கரே, மோடி, அத்வானி, இந்திரா, ராஜீவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா – என இத்தகைய பாசிஸ்டுகளும் இன்னும் பல புதிய பாசிஸ்டுகளும் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அரசியலமைப்பு முறைதான்.
எந்த அரசுப் பதவியிலும் இல்லாத, இந்துவெறி – இனவெறி பாசிச பயங்கரவாதியான பால்தாக்கரேவின் உடலுக்குத் தேசியக் கொடியைப் போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக  வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு, தேசிய ஒருமைப்பாட்டை உபதேசிக்கும் இந்திய அரசு தேசியக் கொடியைப் போர்த்தி மரியாதை செதது ஏன் என்பது புரியாத புதிரல்ல. ஏனென்றால் இந்திய அரசானது இந்துத்துவ மேலாதிக்க, பாசிச சர்வாதிகார அரசு.
தாக்கரேவின் பாசிச அரசியல் வாரிசாக அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரேவும் உள்ளனர் என்றாலும், நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இயக்கங்களிலும் அவரது மண்ணின் மைந்தர்கள் கொள்கையை ஆதரித்து அரசியல் நடத்தும் இனவெறியர்கள் இருக்கவே செகிறார்கள். வர்க்க அரசியலை மறுத்து, உழைக்கும் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து திசைதிருப்பி ஆளும் வர்க்கத்துக்கு வெவ்வேறு அளவுகளில் சேவை செயும் இயக்கங்களும் கட்சிகளும் இன்னமும் நீங்காத அபாயமாக நீடிக்கவே செகின்றன.
மண்ணின் மைந்தர் கொள்கையை வேரூன்றச் செய்து மகாராஷ்டிராவில் அசைக்க முடியாத பாரம்பரியத்தை  நிலைநாட்டியவர், மக்களின் செல்வாக்குமிக்க தலைவர் பால்தாக்கரே என்று இந்துவறி-இனவெறியர்களும் ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளும் அவரைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்தி வருந்துகிறார்கள். நாமும் வருந்தத்தான் வேண்டும் – ஒரு பாசிச பயங்கரவாத மாஃபியா கும்பலின்  தலைவன் தண்டிக்கப்படாமல் இயற்கையாக மரணமடைந்ததற்காக.  vinavu.com

கருத்துகள் இல்லை: