வெள்ளி, 1 ஜூன், 2012

வரலாற்று ஆராய்ச்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் நோக்கம், ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலேயர், சென்னை பல்லாவரம் அருகே கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிவடைந்து, 150-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாட.
சென்னை பல்லாவரம் மலையடிவாரத்தில் தோண்டிய இடமெல்லாம் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. விதவிதமான கற்கோடரிகள். இவை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தவை அல்ல. லட்சக்கணக்காண ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 2 லட்சம் ஆண்டுகள் முதல் 25 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம். பழைய கற்காலம் (பாலியோலித்திக்) என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஹோமினின் இனங்கள் பூமியில் வாழ்ந்தன.

இன்று நாம் ஹோமோ சாப்பியன் என்று சொல்லும் மனித இனத்துக்கு முந்தைய ஹோமோ எரக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலன்ஸ், அதற்கும் முந்தைய ஆஸ்ட்ரலோபிதிசீன் போன்ற இனங்கள்கூடக் கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தின என்று சொல்கிறார்கள். இந்தக் கருவிகள் உலகின் பல பாகங்களில் கிடைக்கின்றன.

சமீபத்தில் நான் பிரிட்டிஷ் மியூசியம் சென்றிருந்தபோது உலகின் பல பாகங்களில் கிடைத்துள்ள கற்கருவிகளைப் பார்த்தேன். என்ன அற்புதமான கற்கோடரிகள்! இவை சில ஆயிரம் ஆண்டுகள் முதல் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை. விதவிதமான கற்கள். கருங்கல், ஜேட், ஃப்ளிண்ட் என வகைவகையான கற்கள். சிலவற்றைத் தட்டித் தட்டிச் செதுக்கினால் கருவி வரும், சிலவற்றை சாண்ட்பேப்பர் போல எதையோ கொண்டு இழைத்தால்தான் கோடரியைச் செய்யமுடியும்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பல்லாவரத்தில் கண்டெடுத்த கற்கருவிகளைக் கண்டு அதிசயித்து, இந்த இடத்தில் ஒரு தொழிற்சாலையே இருந்திருக்கவேண்டும் என்றார். Madras Stone Tools Factory என்றே இந்த இடத்தை அழைத்தார்.

இன்றைய தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்துள்ளது. இன்னும் தோண்டினால் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் கிடைக்கும். பெரிய கற்காலப் புதைகுழிகள் ஏகப்பட்ட இடங்களில் உள்ளது. பாறை ஓவியங்கள் இன்னும் பலப்பல இடங்களில்.

நேற்றைய கூட்டத்தில் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பற்றியும் மாந்தனின் பரவல் பற்றிய தன் சில கருத்துகளையும் ஒரிஸ்ஸா பாலு பேசினார். நல்ல பிரசண்டேஷன் என்றாலும் கொஞ்சம் நீண்டுவிட்டது. அதில் சொல்லப்பட்ட அனைத்தும் வந்தவர்களைச் சென்றடைந்ததா என்று தெரியவில்லை. பாலு ஒரு தொழில்முறை ஆராய்ச்சியாளர் அல்ல என்றாலும் தன் பேரார்வம் காரணமாகத் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்கும் சென்று சொந்த முயற்சியில் ஆராய்ச்சி செய்யும் ஆர்வலர். கடல் பற்றிய ஆராய்ச்சியே அவருடைய முதன்மைக் களன். இந்தியாவிலிருந்து, அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து உலகம் முழுமைக்கும் மக்கள் சென்றிருக்கக்கூடும் என்ற கருத்தை பாலு முன்வைக்கிறார். வட ஆப்பிரிக்காவிலிருந்துதான் மக்கள் பல இடங்களுக்கும் சென்றிருக்கக்கூடும், அதுவும் கால் நடையாக நடந்து என்ற கோட்பாட்டுக்கு எதிரான, மாற்றான ஒரு கோட்பாடு இது. கடல் ஆமைகள் செல்லும் பாதை, பாய்மரக் கப்பல்கள் செல்லும் பாதை ஆகியவற்றை முன்வைக்கும் பாலுவின் கோட்பாட்டுக்கு ஃபூட் கண்டுபிடித்த கற்கருவிகள் ஒரு நல்ல வலுவான சாட்சியம். பாலுவின் கோட்பாடு சுவாரசியமானது; மேற்கொண்டு ஆராயப்படவேண்டிய ஒன்று.

அதே நேரம் நேற்று இறுதியாகப் பேசிய ஒரு பேராசிரியர், கூட்ட நோக்கம் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக முற்றிலும் அரசியல் தளத்திலேயே பேசினார். தமிழர்களின் பெருமை வெளியே தெரியாமல் இருப்பதற்காகப் பலர் சேர்ந்து சதி செய்கின்றனர் என்பதில் ஆரம்பித்து, தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லாமல் இருப்பதுதான் பிரச்னை என்று விரிந்து, திராவிடம், ஆரியம், சமஸ்கிருதம், மாந்தவியல், மொழியியல், அரசியல் என்று மிகவும் விரிந்து பரந்ததாக இருந்த அவரது பேச்சில் ஸ்காலர்ஷிப் மட்டும்தான் குறைவாக இருந்தது.

தமிழ் என்ற மொழியின் அடையாளம் மிகவும் சமீபத்தியது. குரங்கு, குரங்கு-மனிதன், மனிதன் என்ற பரிணாம வளர்ச்சியில் மொழி மிகவும் தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயுதங்களை, கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது அதற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தமிழன் என்ற அடையாளத்தை 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன்மீது ஏற்றி, தமிழனே உலகின் ஆதிமனிதன் என்று சொல்லி என்ன பெருமையை நாம் அடையப் போகிறோம்?

தமிழ்நாட்டில் வரலாறு படிக்கும் ஆர்வம் குறைவாக உள்ளது. வரலாற்று ஆராய்ச்சிகளும் குறைவே. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மறுபக்கம், பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் உள்ளூரின் தொல்காலம் பற்றிச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீர நடுகல் சிலைகள் உள்ளன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. கற்கருவிகள் தோண்டத் தோண்டக் கிடைக்கின்றன. இதுபற்றி நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தருவது ஒன்றுமே இல்லை. அவற்றைச் சரி செய்ய நாம் பல முயற்சிகளை எடுக்கவேண்டும்.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பல விஷயங்களை யூகமாகத்தான் நாம் சொல்லமுடியும். உலக அரங்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அந்த யூகங்கள் இருக்கவேண்டும். அந்த அளவுக்குத் தரமான அகடெமிக் ஸ்காலர்ஷிப்பை நாம் உருவாக்கவேண்டும்.

அரசியல் பேச்சாளர்களை அல்ல.

கருத்துகள் இல்லை: