ஞாயிறு, 27 மே, 2012

மதுரை தி.மு.க: அஞ்சாநெஞ்சரின் ஆறாத நெஞ்சம்!

Viruvirupu
மதுரை தி.மு.க. இன்னமும் சூடாகத்தான் உள்ளது. மதுரையில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் யாருடைய தலைகளையும் காணவில்லை. காரணம், வெரி சிம்பிள். நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியவர், நகரச் செயலாளர் தளபதி. அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது, அழகிரி தரப்பு.
இந்த தளபதி, முன்பு அழகிரியின் ஆள். அதுமட்டுமல்ல, தளபதியை நகரச் செயலாளர் ஆக்கியதே அழகிரிதான். ஆனால், இப்போது இருவரும் வெவ்வேறு துருவங்கள். காரணம், ஸ்டாலினின் மதுரை விசிட்.
மதுரையில் அண்மையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. அழகிரியின் அனுமதி இல்லாமல் ஸ்டாலின் மதுரைக்கு வந்தார் என்று கூறி, அதை அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து ‘சிறப்பித்தவர்’ தளபதி. இதுதான், பனிப் போருக்கு காரணம்.

ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழகிரியிடம் வற்புறுத்துகின்றனர், அவரது ஆதரவாளர்கள். தளபதியை நகர் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்பதே அவர்களது டிமான்ட்.
அழகிரி எடுத்துள்ள ஸ்டான்ட்டும் அதுதான். அழகிரி நடத்தும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அழகிரி வாய்மொழி உத்தரவு கொடுத்திருப்பதாகவும், மதுரை தி.மு.க.-வில் சொல்கிறார்கள்.
அதனால்தான், தளபதி நடத்திய நிர்வாகிககள் கூட்டத்தையும் அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மேயர்கள் அனைவருமே புறக்கணித்துள்ளனர்.
சரி. கூட்டம் ஸ்டாலின் நலனுக்காக நடந்த கூட்டமா? அதுதான் இல்லை என்பதே சோகம்.
“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்தநாளை, மதுரையில் அனைத்து வட்டங்களிலும் ஜூன் 3-ல் கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, மே 30 காலை 10 மணிக்கு மதுரை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்” என்பதே கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்.
அட, அப்படியானால் அஞ்சாநெஞ்சருக்கு பிடிக்காத ஆள் நடத்தினால், கருணாநிதியின் பிறந்தநாளையே புறக்கணிப்பார்கள் என்று சொல்லுங்கள். தமாஷான கட்சிங்க இது.

கருத்துகள் இல்லை: