புதன், 30 மே, 2012

நிதி'யமைச்சர் பன்னீர்செல்வம் தேர்தல் கமிஷன் கழுகு பார்வையில்

புதுக்கோட்டை,: இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ள தமிழக நிதியமைச்சரின் காரை, நான்கைந்து ஜீப்புகளில், பறக்கும் படையினரும், வீடியோ கண்காணிப்பு குழுவினரும், பின்தொடர்ந்தபடி விரட்டிச் சென்று கண்காணித்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக, தமிழக அமைச்சர்கள் 32 பேர் உள்ளிட்ட, 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு, புதுக்கோட்டையில் தங்கி, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, தீவிர பிரசாரம் செய்து வருகிறது.தமிழக நிதியமைச்சரும், அ.தி.மு.க., பொருளாளருமான பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து, கட்சியினர் மூலம், அதை செயல்படுத்தி வருகின்றனர்.அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில், தமிழக அமைச்சரவையையே களமிறக்கியுள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மிறல், முறைகேடு, பணப் பட்டுவாடா ஆகியவை நடக்காமல் இருக்க, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விரட்டும் அதிகாரிகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் போது, ஒட்டுமொத்த அமைச்சரவையே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் தங்கி பிரசாரம் செய்து வரும் அமைச்சர்களையும் கண்காணிக்க, சிறப்பு கண்காணிப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சருக்கும், தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படையில், துணை தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரி, இரு போலீசார், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், ஆயுதப்படை போலீஸ், வீடியோகிராபர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.சிறப்புப் படைக்கு, தனித்தனி அரசு ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், அமைச்சர்களை பின்தொடர்ந்து சென்று, கண்காணிப்பு பணியிலும், அமைச்சர்களின் செயல்பாடுகளை வீடியோவில் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
இந்நிலையில், மூத்த அமைச்சரான பன்னீர்செல்வத்தின் காரை, தினமும் நான்கைந்து ஜீப்களில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் பின்தொடர்ந்து வருவது, அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராகவும், கட்சியின் பொருளாளராகவும் இருப்பதால், பறக்கும் படையினர், இப்படி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா? என்ற சந்தேகம், அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
காரணம் என்ன?
அமைச்சர் பன்னீர்செல்வத்தை மட்டும் குறிவைத்து, நான்கைந்து ஜீப்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது குறித்து, தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது, ""தேர்தல் பணியில் முக்கிய பங்களிப்பவர் அமைச்சர் பன்னீர்செல்வம்.ஆகையால், அவரை தீவிரமாக கண்காணிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பன்னீர்செல்வம் காரை கண்காணிக்க, ஒரு சிறப்புப் படை தான் நியமிக்கப்பட்டுள்ளது.ஆனால், அவருடைய காரில் எப்போதும் மூன்று மூத்த அமைச்சர்கள் செல்வதால், அந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்களும், பன்னீர்செல்வம் காரை பின்தொடர்கின்றன.இது, ஒருவரை கண்காணிக்க, பல குழுக்கள் என்ற தோற்றத்தையும், தேர்தல் விதிமுறை மீறி, அமைச்சர் காரை பின்தொடரும் அதிகாரிகள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது,'' என்று கூறினர்.தேர்தல் பணி எதுவாகினும், அதை முடிவு செய்யும் பொறுப்பில் இருப்பதால் தான், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் காரை, இவ்வளவு சிறப்புக் குழுக்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கின்றன என்ற பேச்சும், தொகுதி அ.தி.மு.க.,வினர் மத்தியில் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: