புதன், 30 மே, 2012

பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்

சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை பாஜக சார்பில் 'பாரத் பந்த்துக்கு' அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், இடதுசாரிகளும் ஆளும் கேரளாவிலும் பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நேற்று மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந் நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாளை (31ம் தேதி) நாடு முழுவதும் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அமைப்புகளும் இந்த பந்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

தமிழகத்தில் உள்பட நாடு முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றன. இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி. தொழிற்சங்கங்களும் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது:

இதனால் நாளை பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காது என்று தெரிகிறது. மேலும்
தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க பொது செயலாளர் மனோகரன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் 60,000 ஆட்டோ ஓட்டுனர்கள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைகள் திறந்திருக்கும்:

ஆனால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வேலை நிறுத்தத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பதாக மட்டும் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருக்கும் என்றே தெரிகிறது.

பஸ்கள் இயங்கும்:

அதே போல மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பஸ்களை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 20,000 பஸ்களும் தனியார் பஸ்களும் வழக்கம் போல் ஓடும். மேலும் ரயில்களும் நாளை வழக்கம்போல் ஓடும்.

பள்ளி- கல்லூரிகள், அரசு அலுவலங்கள்:

பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் இன்னும் கோடை விடுமுறையில் உள்ளன. சில கல்வி நிலையங்கள் தான் திறக்கப்பட்டுள்ளன. பந்த்தையொட்டி அவை நாளை மூடப்படும் என்று தெரிகிறது. அரசு அலுவலங்கள் வழக்கம் போல் இயங்கவுள்ளன.

அதே நேரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. நாளை பால் முகவர்கள் பொதுமக்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் தங்கள் கடைகளை மூடி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஆதரவு தாருங்கள்.. கேட்கிறது பாஜக:

இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வேலை நிறுத்தத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பந்த் நடைபெறும். இதற்கு அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும், வர்த்தகர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடாது:

புதுச்சேரியிலும் நாளை அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்குவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஆட்டோக்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயங்காது என்று தெரிகிறது. டெம்போக்களும் இயங்காது என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை: