வியாழன், 31 மே, 2012

என் கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது: ராஜசேகர ரெட்டி மனைவி பரபரப்பு புகார்

ஐதராபாத்:""என் கணவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விஷயத்தில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், இந்த சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும்''என, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரசாரம்:ஆந்திராவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாரும், மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயலட்சுமி பேசினார்.

அவர் பேசியதாவது:என் கணவர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மூன்று மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த ஹெலிகாப்டர், எதற்காக அவரை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டது என, தெரியவில்லை. இதுபோன்று ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. இந்த சந்தேகங்களை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்.எங்கள் குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே, ஜெகன் மோகன் ரெட்டியை, காங்கிரசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயலட்சுமி பேசினார்.

ராஜினாமா:இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக, பொப்பிலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வெங்கட கிருஷ்ண ரங்காராவ், தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். காங்கிரசில் இருந்து வெளியேறி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் சேரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: