திங்கள், 21 நவம்பர், 2011

RA-One முழு வியாபாரமாகிவிட்ட திரைக்கலை

ரா ஒன்: ஷாருக்கான் ஒரு கலைஞனா, முதலாளியா?

தொழில் முறையில் பணிபுரியும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், எஞ்சினியர்கள், திரைப்படக் கலைஞர்கள் போன்றவர்கள தமது துறையில் முழுக் கவனத்தைச் செலுத்தி துறைசார் அறிவையும் திறமைகளையும் தொடர்ந்து  மேம்படுத்திக் கொண்டே இருந்தால்,  வாய்ப்புகள் கிடைத்து சமூககொண்டேத்தில் முன்னேறி பெரிய பதவிகளையும் செல்வாக்கையும் அடையலாம் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால், எல்லா இடத்திலும் free market என்று அதியமான்கள் கொண்டாடும் முதலாளித்துவத்தின் சந்தை ஆதிக்கம் நுழைந்து விட, ஒருவர் வளச்சி பெறுவதற்கு துறை சார்ந்த அறிவையும், திறமைகளையும் தாண்டி  தமது திறமைகளை சந்தைப்படுத்தும் வியாபார சாதுர்யமும் அலுவலக அரசியல் மூலம் நிறுவனத்துக்குள் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் சாமர்த்தியமும்தான் பெருமளவில் தேவைப்படுகின்றன.


அதாவது திறமைகள் கொண்ட ஒரு மருத்துவருக்கு மருத்துவமனை எனும் பெரும் முதலீடு பிடிக்கும் நிறுவனம் தேவைப்படுகிறது. அதன்றி அவரது திறமை இல்லை. அது போல திரைப்பட நடிகர்களுக்கும் திரையுலகம் என்ற மாபெரும் முதலீட்டு துறை இருந்தால் போதும், நொடியில் அவர்கள் நட்சத்திரமாகவோ இல்லை தயாரிப்பாளராகவோ உருவெடுக்க முடியும்.
திரைப்படத் துறை வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் திருப்பம் சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படம். இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்துக்கும் ‘தமிழர் பெருமை’யை தூக்கிப் பிடித்த ஏழாம் அறிவு படத்துக்கும் இடையிலான போட்டி பரபரப்பிற்கு நடுவில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் ரா ஒன் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வெளியானது.
திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு சூப்பர் ஸ்டார்கள் என்று குறிப்பிட்ட நடிகரைச் சுற்றிய பிம்பத்தை உருவாக்கும் தேவை 1960களுக்கு பின்பு திரை உலகத்திற்கு ஏற்பட்டது. திரைப்படத்திற்கு பெரிய அளவு நிதி ஏற்பாடு (பைனான்ஸ்) செய்வது, படம் வெளியாகும் நாள் அன்றே பல திரையரங்குகளில் வெளியிடச் செய்வது போன்ற வணிக நோக்கங்களுக்காக, நடிப்புத் திறமை வாய்ந்த, குறிப்பிடத்தக்க திரை ஆளுமை உடைய நடிகர்களை அவர்களது ஒத்துழைப்புடன் நட்சத்திரங்களாக வளர்த்தெடுப்பது திரைப்பட துறையின் செயல்பாட்டுக்கு தேவையானதாக ஆகியது.
தமிழ் திரையுலகில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என்று அத்தகைய ஸ்டார்கள் உருவாக்கப்பட்டார்கள். அவர்களும் தமது ரசிகர் மன்றங்கள், பொது நலச் செயல்பாடுகள், பத்திரிகை பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்று தமது பிம்பங்களை பராமரித்துக் கொள்வதில் ஒத்துழைத்தார்கள்.
இந்தி திரையுலகில் அமிதாப் பச்சன், ராஜ்கபூர், ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் என்று ஸ்டார்களில் சாரூக் கான் குறிப்பிடத் தகுந்தவர்.
இந்தி திரைப்படங்கள் பிற இந்திய மொழித் திரைப்படங்களூடன் ஒப்பிடும் போது உயர்தட்டு மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதாகவே இருக்கின்றன. உபி அல்லது பீகாரைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைப் பற்றிய படம் ஒன்றை பாலிவுட்டில் எடுப்பது அரிதானதாகவே இருக்கிறது. ஏக்தா கபூர் முன்னெடுத்து உருவாக்கிய மெகா சீரியல் டெம்ப்ளேட்டின்படி இன்று உருவாகும் தமிழ் நெடுந்தொடர்களின் முன்னோடி இந்தி திரைப்படங்கள்தான். உயர்குடி மக்களின் வாழ்க்கை, பளபளக்கும் பங்களா வீடுகள், அதில் வசிக்கும் மனிதர்களுக்கிடையேயான காதல், கல்யாணம், குடும்ப பிரச்சனைகள், அல்லது மேல் குடி மக்கள் செய்யும் கிரைம்கள் என்று மாய உலகிலேயே மிதந்து கொண்டிருக்கும் இந்தி திரையுலகின் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவாக்கப்பட்டவர் ஷாருக் கான்.
தில்லி ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு பயின்று தொலைக்காட்சி டிராமாக்களில் நடித்து படிப்படியாக திரைப்படத்துறையில் வளர்ந்தவர் ஷாரூக் கான். அமிதாப் பச்சன் தனது திரைப்படங்களில் வெளிப்படுத்திய கோபமான இளைஞன் பிம்பம் 1970-80களின் இந்திய மக்களின் ஆதங்கங்களை பிரதிநிதிப்படுத்தியது போல 1990களுக்குப் பிறகான முன்னேறிச் சொல்லும், செருக்கு மிகுந்த, ஒளிரும் இந்திய நடுத்தரவர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலம் ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ஆனார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களுக்கு மத்தியில் ஷாரூக் கான் பிரபலமான பிராண்டாக உருவெடுத்தார்.
அப்துல் கலாம் போன்று ‘இந்துத்வ தேசியவாத’ முஸ்லீம்களின் சின்னமாக பார்க்கப்படுபவர் ஷாரூக் கான். மை நேம் ஈஸ் கான் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லீம்கள் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அமெரிக்காவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று நல்வழி காட்டிய ஆதர்ச முஸ்லீம் அவர்.
கடந்த 10 ஆண்டுகளில், நுகர்வு கலாச்சாரத்தில் ஊறிப் போய் விட்ட இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு நுகர்வை தூண்டுவதற்கு என்று சிறப்பாக ஒரு ஹீரோ தேவைப்படவில்லை. அவர்களாகவே புதிது புதிதாக இன்பங்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஷாரூக் கான் போன்றவர்களின் தேவை குறைந்து போக ஆரம்பித்தது. அவர் தம்மை மறு வார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஷாரூக் கான் ஒரு வணிக பிராண்டாக தன்னை உருவாக்கிக் கொண்டதைப் பற்றி அவுட்லுக்கில் வெளியான கட்டுரை இப்படி சொல்கிறது:
“அவர் இருபது ஆண்டுகளாக உருவாக்கி பிரபலப்படுத்திய பிராண்ட் எஸ்ஆர்கே, வேறு எந்த பிராண்டுடனும் ஒப்பிடும் போது மிகச் சிறந்த பெயர் அடையாளத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது. அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இன்றைய நிலைமைகளுக்கேற்ப மறுவரையறை செய்துள்ளார்.  படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல், விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட தோன்றுகிறார். பல வகையான பொருட்களை சிபாரிசு செய்கிறார். திருமண விழாக்களில் பாட்டுப் பாடி ஆடுவதற்கும் ஒத்துக் கொள்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகவும் இருக்கிறார். எஸ்ஆர்கே ஒரு நடிகர் மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்-பிஸினஸ்மேன் ஆக விளங்குகிறார்.”
இந்த முயற்சிகளின் அடுத்தக் கட்டம் ரா ஒன் என்ற திரைப்படம்.
ரா ஒன் படத்தைத் தயாரித்தது ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம். அதே நிறுவனம் ரஜினி குழுமத்தின் அடுத்த படமான ராணா படத்துக்கும் தயாரிப்பாளர். ரஜினா காந்த் ரா ஒன்னில் தலை காட்ட மும்பை போனது எந்த பாசத்தால் என்று புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
ரா ஒன் படம் எடுக்க தயாரிப்பு செலவாக 125 கோடி முதல் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்று பலவிதமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. VFX studio என்ற நிறுவனம் மூலம் படத்துக்கான சிறப்பு காட்சிகள் (special effects) உருவாக்கப்பட்டன. படத்தின் செலவுகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி ரூபாய் முதல் 65 கோடி ரூபாய் வரை) இதற்காக செலவிடப்பட்டது. ரா ஒன் படத்தில் 3,500 காட்சிகள் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் 2,700 காட்சிகள்தான் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன என்று ஊடகங்கள் பீற்றுவதை வைத்து ரா ஒன் எனும் உலக மகா மொக்கையின் அபத்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
ரா ஒன் படம் எடுப்பதற்காக VFX Studio உருவானதா, VFX Studio தடம் பதிக்கும் பொருட்டு ரா ஒன் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு சரியான விடை தேடுவது எளிதான வேலை இல்லை. படத்தின் வெற்றியின் மூலம் இந்த நிறுவனம் இந்திய திரைப்பட உலகில் தனது வணிக செயல்பாடுகளை நிலைநாட்டிக் கொள்வது ரா ஒன் படத் தயாரிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று மட்டும் ஊகிக்கலாம்.
சோனி பிளே ஸ்டேசன் என்ற பன்னாட்டு வீடியோ கேமிங் நிறுவனம், இந்தப் படத் தயாரிப்புடன் இணைந்து RA ஒன் – த கேம் என்ற விளையாட்டுக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை உருவாக்குவதற்கு 1 மில்லியன் டாலர் (சுமார் 4.5 கோடி ரூபாய்) செலவானதாக சொல்லப்படுகிறது. ரா ஒன் என்ற பிராண்ட் பிளேஸ்டாசனுடன் கூட்டாக முதலீடு செய்யப்பட்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளியீடு மற்றும் தொடர்ந்த சோனி பிளே ஸ்டேசன் சந்தை விரிவாக்கத்தின் வெற்றி/தோல்விகள் ரா ஒன் பெறும் வரவேற்பை சார்ந்துள்ளன. சோனி குழுமத்தின் நிறுவனங்கள் ரா ஒன்னை தூக்கிப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதில் வியப்பில்லை.
திரைப்படங்களில் பொருத்தமான இடங்களில் வணிக நிறுவனங்களின் பிராண்டுகளை காட்டுவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது, திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமைகளை வாங்கிய நிறுவனத்தை திரைப்படத்தில் விளம்பரப்படுத்துவது என்பவை பணம் கொண்டு வரும் இன்னொரு வழி.
இன்று போய் நாளை வா திரைப்படத்தில் வீட்டுக்கு வரும் இந்தி வாத்தியாரை துரத்தி அனுப்ப நாய்க்கு கிராக்ஜாக் பிஸ்கட் கொடுத்து பழக்குவார் ஒருவர், அதே கிராக்ஜாக் பிஸ்கட் கொடுத்து வாத்தியார் முறியடிப்பார். இப்படி இந்திய திரைப்படங்களில் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த திரைப்படங்களில் பிராண்ட் பொசிஷனிங், இப்போது தவிர்க்க முடியாமல் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுடன் வணிக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் படத் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் அம்பா ஸ்கைவால்க் மால், காட்பரீஸ் சாக்கலேட், வோடபோன், HTC, ஏர்செல் முதலிய பல பிராண்டுகள் இடம் பெற்றன.
ரா ஒன் படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை ஸ்டார் தொலைக்காட்சி 35 கோடி ரூபாய்க்கு வாங்கியது. படம் வெற்றி பெற்றால், மெஹாஹிட் திரைப்படம் என்று தொலைக்காட்சியில் சில மாதங்களுக்குப் பிறகு திரையிட்டு விளம்பரங்களின் மூலம் கல்லா கட்ட முடியும். அதனால் படம் வெளியாகும் முன்பே அதைப்பற்றி saturation கவரேஜ் கொடுக்கும் பொறுப்பு ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இயல்பாகவே வந்து விட்டது. தமிழில் சன் குழுமம், கருணாநிதி குடும்பத்தினர் திரைப்படங்களுக்கு சன் தொலைக்காட்சிகளும், கலைஞர் தொலைக்காட்சிகளும் அளிக்கும் கவரேஜ் இதே நோக்கத்துடன் அளிக்கப்படுபவைதான்.
ரா ஒன் படத்தின் ஏரியா உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர் மதிப்பில் விற்கப்பட்டன. உதாரணமாக, நாக்பூர், ஜபல்பூர் பகுதி உரிமை 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது, இதற்கு முந்தைய உயர் மதிப்பு விற்பனையான பாடிகார்ட் படம் 2.7 கோடி ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டது என்பதைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட எல்லோரும் ரா ஒன், பாடி கார்டை விட இரண்டு மடங்கு பிரபலம் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லைதான்.
அப்படி படம் பிரபலம் அடைவதற்கும் பண வசூலுக்கும் படத்தின் தரத்தையும், பார்வையாளர்களின் வரவேற்பையும் மட்டும் நம்பி இருந்து விட முடியாது.
முன்பெல்லாம் திரைப்படங்கள் ஊருக்கு ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான படங்கள் 100 நாட்கள், 200 நாட்கள், வெள்ளி விழா என்று பல வாரங்கள் தொடர்ந்து ஓடி வசூலைக் குவித்தன. சாருக் கான் 1990களில் நடித்த தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே (267 கோடி ரூபாய்), குச் குச் ஹோதா ஹை (182 கோடி ரூபாய்) போன்ற திரைப்படங்கள் இது போன்று பல நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தவை.
ரா ஒன் படம் அந்த சாதனைகளை முறியடித்து வசூலை ஈட்டினால்தான் கட்டுப்படி ஆகும். இவ்வளவு செலவழித்து எடுக்கப்பட்ட ரா ஒன் போன்ற படங்களுக்கு அந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. படம் வெளியாவதற்கு முன்பு பெருமளவில் விளம்பரங்கள், பத்திரிகை கட்டுரைகள் மூலம் ரசிகர்களை தயார்படுத்தி, படத்தை ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிட்டு படம் பற்றிய விமர்சனம் பரவலாக போய்ச் சேரும் முன் எல்லோரையும் தியேட்டருக்குக் கொண்டு வந்து பணத்தை திரட்டி விட வேண்டும் என்ற வணிக உத்தி பயன்படுத்தப்படுகிறது.
பாலிவுட் படங்களில் இதுவரை வந்த எந்த படத்தையும் விட அதிகமாக இந்தியாவில் 3,000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 50 திரையரங்குகளிலும் ரா ஒன் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவிலும் ஓபனிங் கிடைக்க ரஜினிகாந்தை இரண்டு நிமிடங்கள் நடிக்க வைத்து ஒரு காட்சியை சேர்த்திருந்தார்கள். படம் நன்றாக இல்லை என்று யாராவது சொல்லி கேட்பதற்கு முன்பு நீங்கள் அந்த படத்தை பார்த்து விட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தயாரித்தவரும், வினியோக உரிமையை வாங்கியவர்களும் போட்ட காசை எடுக்க முடியும். படம் எப்படி இருந்தாலும் பார்த்தே தீர வேண்டும் என்பது ரசிகர்களின் பொறுப்பு.
தியேட்டரில் அனுமதிச் சீட்டுகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டால் பல ஆண்டுகள் ஓடினால்தான் போட்ட பணம் வசூல் ஆகும். அதனால் அதிகாரபூர்வமில்லாமல் தியேட்டர் நிர்வாகமே கறுப்புச் சந்தையில் டிக்கெட்டுகளை விற்பதும் இந்த முதல் இரண்டு வார பரபரப்பில் சகஜமாகிப் போய் விட்ட ஒன்று.
ரா ஒன் பிராண்ட் பொறித்த நுகர்வு பொருட்களை விற்பனை செய்ய ஒரு வணிக நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், பள்ளி பயன்பாட்டு பொருட்கள், உடைகள், தொப்பிகள் என்ற வரிசையில்  செல்பேசி மின்னூட்டிகள், கைப் படப்பெட்டிகள், நெட்புக் கணினிகள், டேப்லட் கணினிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களின் விற்பனையும் படத்தின் வெற்றி தோல்வியுடன் பிணைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தின் பாபா பட வெளியீடை ஒட்டி பாபா பிராண்ட் பொறித்த பொருட்களை அவரது மனைவி லதா ரஜினிகாந்த சந்தைப் படுத்த முயன்று, அந்தப் படம் ஊத்திக் கொண்டதோடு அது முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு விரிவான வணிக சுமைகளை சுமந்து வெளியாகும் முதல் படம் ரா ஒன் என்று சொல்லலாம். ஈராஸ் இன்டர்நேஷனலுக்கும், VFX Studioக்கும், சோனி பிளே ஸ்டேஷனுக்கும், ஸ்டார் தொலைக்காட்சிக்கும், ரா ஒன் பிராண்ட் பொருட்கள் விற்கும் வியாபாரத்துக்கும் தரகு வியாபாரியாக இருந்து ரசிகர்களை டெலிவர் செய்ய வேண்டியதுதான் ஷாரூக் கானின் முதன்மை பணி. நடிப்பும் கதையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளப்பட வேண்டியவைதான்.
சாருக்கான் எனும் தரகு முதலாளியின் இந்த படத்தில் ரசிகர்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? பணத்தை கொடுத்து விட்டு கைதட்ட வேண்டியது மட்டும்தான்.
___________________________________________________
- அப்துல்

கருத்துகள் இல்லை: