வியாழன், 24 நவம்பர், 2011

BJP பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் ரூ.43,523 கோடி நஷ்டம்!

டெல்லி: உரிமக் கட்டண முறைக்கு பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை பாரதிய ஜனதா கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியதால் 1999-ல் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார்.
மக்களவையில் புதன்கிழமை இந்த பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்த மிலிந்த் தியோரா மேலும் கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டண முறைக்கு பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 1999-ல் அறிமுகப்படுத்தியது.
நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டண முறையையே கையாண்டிருந்தால் அரசுக்கு ரூ.58,354.62 கோடி வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், புதிய தொலைத்தொடர்புக் கொள்கையால் அரசுக்கு ரூ.14,830.70 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.43,523.92 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது," என்றார்.

இதுதொடர்பாக 2000-ம் ஆண்டில் வெளியான சிஏஜி அறிக்கையில், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாகச் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உரிமம் தொடர்பான ஒப்பந்தங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து மீறிவந்தபோதும், அந்த நிறுவனங்களுக்கு சலுகை மேல் சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: