புதன், 23 நவம்பர், 2011

விசாரணையை திஹார் சிறை கோர்ட்டுக்கு மாற்றும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

டெல்லி: 2ஜி வழக்கு விசாரணையை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டிலிருந்து திஹார் சிறை வளாகத்திற்கு மாற்றும் தனது உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றமே இன்று இடைக்காலத் தடை விதித்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதன் விசாரணையை நளை முதல் திஹார் சிறை வளாகத்திற்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நேற்று தெரிவித்த சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி வியாழக்கிழமை முதல் விசாரணை திஹார் சிறை வளாக கோர்ட்டில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதற்கு ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் ஏமாற்றம் தெரிவித்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவர் சார்பிலும், டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை மனுவாக தாக்கல்செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ கோர்ட்டிலிருந்து திஹார் சிறைக்கு விசாரணையை மாற்றும் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், விசாரணையை திஹார் சிறை மற்றும் சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்குப் பதில் வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து சிபிஐ சிறப்பு கோர்ட்டே முடிவு செய்யலாம் என்றும் அது உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: