புதன், 23 நவம்பர், 2011

சசி, இளவரசி, சுதாகரனிடம் 142 கேள்விகள் கேட்கிறது பெங்களூர் கோர்ட்-நவ. 29ல் விசாரணை

பெங்களூர் முதல்வர் ஜெயலலிதாவிடம் நடந்து வந்த விசாரணை முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த மூவரும் நவம்பர் 29ம் தேதி ஆஜராக பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜெயலலிதாவிடம் மட்டுமே விசாரணை முடிவடைந்துள்ளது. முக்கியக் குற்றவாளியாக ஜெயலலிதா சேர்க்கப்பட்டுள்ளதால் அவரிடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நான்கு நாள் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக மூவரும் வருகிற 29ம் தேதி ஆஜராக நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவிடம் விசாரணை முடிவடைந்து விட்டதால் பரப்பனஅக்ரஹாராவில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டும், தற்போது வழக்கமான பெங்களூர் சிவில் கோர்ட் வளாகத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 29ம் தேதி மூவரும் அங்கு ஆஜராக வேண்டும். அவர்களிடம் கேட்பதற்கு 142 கேள்விகளை தனி நீதிமன்றம் தயாரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: