சனி, 4 டிசம்பர், 2010

Sivajilingam:TNA அரசுடன் இணைந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை

காலம் போகும் போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசுடன் இணைந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் அரசுடன், ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸுனர் இணைந்து கொண்டனர். அதுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசுடன் இணைந்து கொள்வார்களா என நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாகவின் தரப்பிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என கூறியவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஆனால் இன்று அரசின் நடவடிக்கைகள் சிறந்தது எனக் கூறி அவர் அரசின் பக்கம் சென்று அமர்ந்துள்ளார்.
அவ்வாறு அரசின் பக்கம் சிறந்த நடவடிக்கைகள் இருப்பது தெரியுமானால் பாராளுமன்ற தேர்தலின் முன்பு அரசின் பக்கம் மாறியிருக்கலாம் தானே, ஏன் அவர் எதிர்கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்பு அரசின் பக்கம் மாறவேண்டும், இது வாக்களித்த மக்களை முட்டாள்களாய் ஆக்கும் விடயம்.
அதுபோன்றே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சரணாகதி அரசியல் நடவடிக்கைகளை ஈடுபட்டவருகின்றது போன்று தென்படுகிறது. உதாரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தின் போது பலத்த எதிர்பான விவாதங்களை முன் வைத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆனால் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதை பயன்படுத்திக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ், வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கையினை பார்க்கும் போது, சரணாகதி அரசியல் நடவடிக்கையினை போன்றே தென்படுகிறது. ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசின் பக்கம் சென்று அமர்ந்தால் ஆச்சரிப்படுவதற்கில்லை. என்றார்.

கருத்துகள் இல்லை: