வியாழன், 2 டிசம்பர், 2010

23 மாணவர்களை துப்பாக்கி முனையில் வைத்திருந்த சிறுவன் தற்கொலை.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் 23 மாணவர்களையும், வகுப்பு ஆசிரியையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சிறுவன், போலீசாரை கண்டதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான்.

விஸ்கான்சின் மாகாணம் மேரினெட் நகரில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடியும் நேரத்தில், 15 வயது பையன் ஒரு வகுப்பறையில் நுழைந்தான். இரண்டு கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வகுப்பு ஆசிரியையும், 23 மாணவர்களையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், பள்ளியை சுற்றி வளைத்தனர். சம்பந்தப்பட்ட பையனிடம் பேசி சரணடையும்படி கூறினர். ஆனால், ஐந்து மணி நேரமாக அந்த பையன் வெளியே வரவில்லை. இதையடுத்து வகுப்பறையை போலீசார் சுற்றி வளைத்தனர். திடீரென வகுப்பறையில் குண்டு சத்தம் கேட்டதும், போலீசார் வகுப்பறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அதற்குள் அந்த பையன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். உடனடியாக மாணவர்களும், ஆசிரியையும் வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவனுடைய நிலை என்னவென்று தெரியவில்லை. மற்ற அனைவரும், காயம் ஏதும் இன்றி பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களையும், ஆசிரியையும் ஏன் பிணைக் கைதியாக பிடித்து வைத்து கொண்டு மிரட்டினான், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: