வியாழன், 2 டிசம்பர், 2010

தமிழ் உலகத்தில் ஒரு உடனடி துரோகியாவது எப்படி?


 ஆக்கம்: ஏ.ஜதிந்திரா
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது தலைவராகிய மாத்தையா என்றழைக்கப் பட்ட திரு.மகேந்திரராஜா அவர்கள் எனது சொந்தக் கிராமம் ஆகிய தம்பலகாமத்துக்கு 1990ல் வருகை தந்த அந்த நாள் இன்னும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது. வீடு தோறும் மக்கள் அவருக்கு மதிப்பளித்து இந்து மத ஆச்சாரப்படி வரவேற்பளித்தார்கள். எனது முறைப்படி எங்கள் வீட்டுக்கு முன்பாக அவர் வந்தபோது நானும் அவர் நெற்றியில் திலகமிட்டு வரவேற்றேன். எனக்கு 14வயது உள்ள போது இது நடந்தது. அந்த நேரத்தில் தமிழ் தேசியம் பற்றியோ, விடுதலைப் போராட்டத்தைப் பற்றியோ நான் எதுவும் அறிந்திருக்கவில்லை, ஏன் அப்போது அவ்வாறான வார்த்தைகளை நான் கேட்டதேயில்லை.
பிற்போது மாத்தையா ஒரு துரோகி எனச் சொல்லப் பட்டபோது நான் ஆச்சரியப் பட்டேன். அது எப்படிச் சாத்தியமாகும் என என்னையே நான் கேட்டுக் கொண்டேன்? தமிழீழ விடுதலைப் புலிகளின் காட்டுக்குள் என்ன நடந்தது என்று இப்போது கூட எனக்குத் தெரியாது. ஆனால் பின்நாளில் நான் கேள்விப்பட்டேன் மாத்தையா இந்தியாவின் புலனாய்வுப் பகுதியின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவான “ரோ” வுடன் சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டதாகத்தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தாக.
உண்மையில் மாத்தையாவைப் பற்றியோ அவரது அரசியலைப் பற்றியோ இப்போது நான் பேச விரும்பவில்லை, ஆனால் எனது இளமைக் காலத்தில் நிலமைகள் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதை மட்டும் ஞாபகப் படுத்துகிறேன். அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “சுதந்திர வேட்கைகள்” எனும் நூலில் மாத்தையா என்ன செய்தார் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று அந்த விடயத்தைப் பற்றி விபரித்துள்ளார்.
நான் நினைக்கிறேன் துரோகி என்கிற வார்த்தை தமிழ் அரசியல் சூழலில் தமிழ் தேசியம் மற்றும் விடுதலை எனபனவற்றைப் பொறுத்த அளவில் மிகவும் பிரபலமானது.முன்னைய தமிழ் அரசியல் காலகட்டத்தில், பிரபலமான ஜனநாயகத் தமிழ் தலைவரான திரு.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவரது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் அரசியல் பயணத்தையும் பற்றி எதிராக விமர்சிக்கும் அரசியல் எதிராளிகளை துரோகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே அழைப்பார்.
பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அந்த துரோகி என்கிற சொல்லை சுவீகரித்துக் கொண்டனர், அவர்கள் மட்டுமல்ல  ஆயதம் தாங்கிய எல்லாக் குழுக்களுமே தங்கள் எதிர் குழுக்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வசீகரச் சொல்லாக அதைத் தத்தெடுத்துக் கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளாகிய ஒரே ஒரு இயக்கம் மட்டுமே தங்களது எதிரிகளாகப் பறைசாற்றப் பட்டவர்களை குறிப்பிட மிகத் தந்திரமாகவும் சளைக்காமலும் துரோகி என்கிற பதத்தைப் பயன் படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்களது ஆணையின்படி, அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்திறன் வாய்ந்தவர்கள் ஆகிய எல்லோருமே அவர்களை விமர்சித்தால் அல்லது எதிர்த்தால் அவர்கள் துரோகிகள் ஆவார்கள். இதனால் பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் நாட்டை விட்டு வெளியேறவோ, அல்லது பொது வாழ்வில் ஈடுபடுவதை நிறுத்தி மௌனம் காப்பவர்களாகவோ மாறினார்கள்.
இப்போதும் துரோகி என்கிற சொற்பதம் தமிழ் அரசியல் மேடைகளில் தமிழ் தேசியவாதிகள் என அழைக்கப் படுபவர்களால் மாற்றுக் கருத்துள்ளவர்களை ஓரங்கட்டபயன் படுத்தப்படும் கவர்ச்சிகரமான சொல்லாகப் பயன்பட்டு வருகிறது. தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கதை முடிவுற்றபின் இந்தச் சொல்லின் அடிப்படையில் பிளவுபட்டுப் போயுள்ளனர்.எனது பார்வையில் தற்போதைய சூழலில் துரோகி என்கிற வார்த்தை தமிழீழ விடுதலைப் புலிகளின ஆதரவாளர்களின் ஒரு அரசியல் முதலீடு. அறுபது வருட அரசியல் அனுபவங்களின் பி;ன்னர்கூட மாற்றுப் பார்வைகளுக்கான எந்த அரசியல் நேர்மையையோ அல்லது வேறெந்த மதிப்பான தன்மைகளையோ காணமுடியவில்லை. இப்போதுகூட கருத்துள்ள அரசியல் அணுகுமுறைகளையோ, இப்போதுள்ள நிலவரங்களின் அடிப்படையில் கருத்துள்ள பேச்சுவார்த்தைகள் அவசியம் எனச் சொல்பவர்களை இழிவு படுத்த துரோகி என்கிற சொல் பயன்படுகிறது.
இதில் மற்றொரு சுவையான விடயம் தமிழ் மார்க்கஸிய வாதிகளைப் பற்றியது. முன்பு நான் குறிப்பிட்டதெல்லாம் ஆயதக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட விடயம். இந்தக் குழுக்கள் கொஞ்சம் வித்தியாசமானவை, இவர்கள் துரோகி என்கிற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் அதற்குப் பதிலாக யாராவது அவர்களின் அரசியல் சிந்தனைகளை விமர்சித்தால் அவர்களை சீ.ஐ.ஏ அல்லது ரோ என்று சொல்வார்கள். எனது அறிவுக்கு எட்டிய வரை செல்வாக்குள்ள மார்க்ஸியவாதிகள் வடக்கு மற்றும் கிழக்கிலோ அல்லது புலம்பெயர் தமிழ் சமூகத்திலோ இல்லை என எண்ணுகிறேன்
புதிய – ஜனநாயகம் எனும்; கொழும்பில் வாழும் சில வயதானவர்களைக் கொண்டியங்கும் ஒரே ஒரு குழு மட்டும் சிலவற்றை செய்கிறது. இந்தக் குழு சொல்கிறது நாங்கள் எங்கள் ;மக்களைத் தயார்படுத்தி நேபாளத்தில் செய்தது போன்ற திரளான போராட்டங்களை நடத்த வேண்டும் எனச் சொல்கிறது. சில புலம் பெயர்ந்தவர்களும் அந்த  வயதானவர்களின் மாவோசிய ரகசிய தகவல்களை ஆதரிக்கிறார்கள். புதிய – ஜனநாயக கருத்து மாவோ சே துங் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது, ஆனால் அது மாவோ அமெரிக்காவின் நிக்ஸன் அரசுடன் நெருக்கமாவதற்கு முன்பிருந்தது. சீனாவும் இந்தக் கருத்துக்களை 1984லிருந்தே கைவிட்டு விட்டது. சீன அரசாங்கப் பத்திரிகையான மக்கள் தினசரி குறிப்பிடடிருப்பது, மார்க்கஸிசம் மிகச் சிறந்த ஒரு விடயம் ஆனால் நாங்கள் இதைத் தொடர்ந்தும் பயன் படுத்துவோமானால் நாங்கள் புதிய உலக நடைமுறைகளிலிருந்தும் தனிமைப் படுத்தப் பட்டவர்களாவோம் என்று.
ஆனால் சில முட்டாள்கள் இந்த பழமைவாத சிந்தனை முறைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். உண்மையில் இதுபோன்ற குழுக்கள் மக்களை விசேடமாக தமிழ் இளையோர் சமூகத்தை தவறாக வழிநடத்த முனைகிறார்கள். சமீபத்தில் நான் இந்தியாவைப் பற்றிய ஒரு கட்டுரையை புலம் பெயர்ந்தவர்களின் இணையத்தளங்களில் ஒன்றில் வெளியிட்ட போது, இதே போன்ற பயனற்ற சிலர் என்னைத் துரோகி என்று விமர்சித்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவை பொறுத்தமட்டில் மிகப் பெரிய தவறைச் செய்து விட்டார்கள் அதன் பயனாக இந்தியத்தாய் தனது இளைய தலைவரை இழந்து விட்டாள் என்று நான் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தேன். இப்போது துரோகி என்கிற பதத்தை அடிப்படையாக்கி சமீபத்தில் பல சுவராஸ்யமான விடயங்கள் அரங்கேறுகின்றன. புலம்பெயர் தமிழ் சமூகம் துரோகிகளுடன் முதலிரவை ஆரம்பித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பாராத வீழ்ச்சியினால் அவர்களிடத்து முதலீடு செய்யமுடியாமல் புலம்பெயர்ந்தவர்கள் நிலைகுலைந்து போயுள்ளார்கள். புலம்பெயர் தமிழ் சமூகம் முழுவதுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் எண்ணங்களுக்கு சார்பானவர்கள் இல்லை, ஆனால் சில கடும்போக்காளர்கள் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் அவர்கள் இந்தச் சொல்லை கருத்துள்ள அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுபவர்கள் மீது பயன்படுத்துகிறார்கள்.
இன்னொரு குழு நாடு கடந்த அரசாங்கம் என்ற பெயரோடு இயங்கி வருகிறது. சமீபத்தில் அவர்கள் அதற்கான பிரதமரையும் தெரிவு செயதார்கள். மற்றொரு தமிழீழ விடுதலைப் புலிகளின் குழவானது நெடியவனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான தமிழ்நெற் இணையத்தை நடத்துபவரான ஜெயச்சந்திரனாலும் நடத்தப் படுகிறது. நாடு கடந்த அரசாங்கத்தை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உருத்திரகுமாரனால் வழிநடத்தப்படுகிறது. மூன்றாவது ஒரு குழுவும் கேபி மூலமாக ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. சில புலம பெயர் செயற்பாட்டாளர்கள்  நிலமையின் தன்மையை உணர்ந்து கேபியின் வழியில் உதவி புரிய ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் கடும்போக்காளர்;களை எண்ணிப் பயப்படுகிறார்கள், என்பதை நானறிவேன்.
சமீபத்திய கேபியின் நேர்காணலை இணையத் தளத்தில் நானும் வாசித்தேன். கேபி சரியானதைச் செய்கிறார் அவர் நிலமைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார் என நான் நினைக்கிறேன். ஆனால் சில தமிழீழ விடுதலைப் புலிகளின கடும்போக்காளர்கள் கேபியை துரோகி என்கிறார்கள். துரோகிகளைத் தீர்மானிப்பது யாரென்று நான் எண்ணிப் பார்க்கிறேன? யாரால் அதைத் தீர்மானிக்கமுடியும்?
இந்த வார்த்தையைச் சந்திக்கும் போதெல்லாம இந்தக் கேள்வியை எனக்குள் நானே பலமுறை எழுப்பியிருக்கிறேன் இந்தச் சொல்லை மற்றவர்களுக்கு எதிராகப் பயன் படுத்தும் எல்லோருமே தங்கள் சொந்த அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டே இவ்வாறு செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.எனவே யாராவது அவர்களது அரசியல் பாதையில் குறுக்கிட்டால் அவர்களை அப்படி அழைக்கிறார்கள். இதுதான் தமிழரின் சுற்றாடலில் துரோகி என்கிற பதத்துககான அடிப்படைச் சரித்திரம்.
இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானது கருத்துள்ள அரசியல் அணுகுமுறையும் தற்போதுள்ள ஆட்சியினருடன் நல்லுறவைப் பேணுவதுமே. எப்போதும் பழம் பெருமைகளைப் பேசியே வாழமுடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் எப்போதும் எதிரிகளை உருவாக்கும் அடிப்படையிலானது அவர்களது பிறப்பு முதலே அவர்களாகவே அவர்களது எதிரிகளை உருவாக்கி வந்துள்ளார்கள். யாரையாவது எதிரிகளாக குற்றம் சுமத்தாவிட்டால் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. இப்போதும் ஐரோப்பிய நாடுகளில் உயிர் பிழைத்திருக்கும் சில கடும்போக்கு தமிழீழ விடுதலைப் புலியினர் இதையே செய்கின்றனர் ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்னலுறும் தமிழ்மக்களுக்காக அவர்கள் எதையும் செய்ய இயலாதவர்களாய் இ.ருக்கிறார்கள்.
உலகம் மாறிக் கொண்டே போகிறது, நாங்களும் அதற்கேற்ப மாறவேண்டிய தேவை உள்ளது, ஆனால்; சில புலம் பெயர்ந்தவர்கள் அதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. அதுதான் அவர்களது இப்போதைய பிரச்சினையும் கூட.
இங்கே இன்னொரு இரசகரமான கேள்வி இருக்கிறது, அதாவது யார் துரோகியாக மாறப்போவது? யார் துரோகிகளின் கூட்டத்தோடு சேரப்போவது?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள் மிகவும் சுலபமானது. பின்வரும் வசனங்களை ஒருமுறை சொல்லி அல்லது எழுதிப் பாருங்கள். “எங்களுக்கு கருத்துள்ள ஒரு அரசியல் அணுகுமுறை தேவையாகவுள்ளது. எங்களுக்கு நன்றாக வேலைசெய்யக் கூடிய ஒரு பொறிமுறை தேவையாகவுள்ளது அதற்காக நாங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் பேசவேண்டிய தேவை உள்ளது பாதிக்கப்பட்ட எங்கள் மக்களைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதுதான் இந்தக் கட்டத்தில் முன்னுரிமை வழங்கப் படவேண்டிய முதல் விடயம்.”
நீங்கள் சில நாட்களுக்கு  இதை சொல்லியோ எழுதியோ பாருங்கள், உடனடியாக தமிழ் உலகில் நீங்கள் ஒரு முதன்மையான துரோகியாக மாறிவிடுவீர்கள்.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: