புதன், 1 டிசம்பர், 2010

புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த பானு எனப்படும் செல்வராசா சீலன் கைது

இலங்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பு வலுவான நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் அடையாளம் கண்டறியப்படாத, உண்மைப் பெயர் வெளிப்படாத தலைவர் ஒருவரின் தலைமையில் அவர்கள் முழு வீ்ச்சில் இயங்கி வருவதாக தேசிய புலனாய்வுப் பொலிசார் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான பானு எனப்படும் செல்வராசா சீலன் எனப்படும் சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே பொலிசார் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலின் முன்னால் உள்ள கான் கடிகாரத் தூண் அருகில் கடந்த 29ம் திகதி பானு கைது செய்யப்பட்டிருந்தார்.தேசியப் புலனாய்வுப் பிரிவினர் பல மாதங்களாக அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து உறுதிப்படுத்திய பின்னரே பானு கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட பானு கொழும்பின் பொருளாதார மையங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் தொடர்பில் வேவு பார்ப்பதற்காகவே கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்ததை பொலிஸ் விசாரணைகளின் போது ஏற்றுக் கொண்டிருந்தார்.

அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைத் திரட்டும் பொருட்டு எதிர்வரும் ஏழாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: