சனி, 4 டிசம்பர், 2010

தனிச் சிங்களச் சட்டம் தமிழ் மக்களின் உரிமைகள் பறிப்பின் முதற்படி

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இந்து வித்யாநிதி பிரம்மஸ்ரீ சோ.குகானந்த சர்மா அளித்த சாட்சியம்
இலங்கை கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று இராச்சியங்களைக் கொண்டு நல்லாட்சியுடன் விளங்கியது. சுதந்திரம் ஏற்பட்ட பின்னர் சிங்கள மக்கள் தமிழையும் தமிழ் மக்கள் சிங்களத்தையும் கற்று வந்தனர். சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் எல்லோரும் ஒருமித்து வாழ்ந்து வந்தார்கள்.

1956ஜூன் 5 ஆம் திகதி தனிச் சிங்களச் சட்டம் தமிழ் மக்களுக்குச் சாவுமணியை அடித்தது. இச் சட்டம் வந்தபொழுது அதற்கு எதிராகக் கறுப்புக் கொடியை இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரியில் இருந்து ஏனைய மாணவர்களுடன் இலங்கைப் பாராளுமன்றம் வரை ஏந்திச்சென்றேன். அப்போது சவுத் வெஸ்ரேன் பஸ்ஸில் சென்ற சிங்கள மக்கள் பஸ்ஸில் இருந்து இறங்கி எமக்கு 10 ரூபா,50 ரூபா,100 ரூபா எனக் கைச் செலவுக்குத் தந்தனர்.

நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்ற எஸ்.எவ்.டி.சில்வாவின் சரித்திரப் புத்தகத்தில் "போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தபோது இலங்கை மூவேந்தர்களால் ஆளப்பட்டது' என சிங்களம் மட்டும் சட்டம் வந்த பின்னர் படித்தோம். அதற்கு முன்பு ஆங்கிலத்தில் கற்றோம். சிங்களம் மட்டும் சட்டம் வந்தது. ஆனால், ஆங்கில மொழியில் இலங்கை பூராகவும் கற்று வந்த சிங்கள, தமிழ், மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் தயாராக இருக்கவில்லை. காரணம் அவர்களும் ஆங்கில மொழியிலேயே கற்று வந்தவர்கள். மாணவர்களுக்கும் கிரகிக்கும் மனப்பாங்கு உடன் இருக்கவில்லை.

சிங்களம் மட்டும் சட்டத்தால் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் பேசும் மக்கள் பலவிதத்திலும் பாதிப்புக்குள்ளாயினர். உத்தியோகம்,பல்கலைக்கழக அனுமதி, நிர்வாக முறையில் அதிருப்தி எனப்பல இன்னல்கள், இடர்பாடுகள் இருந்தன.

1958 இல் வடக்குக், கிழக்கிற்கு நிர்வாக முறையிலான தமிழ் என வழங்கப்பட்டபோதும் அதிலே பலன் எதுவுமே இருக்கவில்லை.

1958 இல் இரண்டாவது இனக்கலவரம் தாண்டவமாடியது. தமிழ் மக்களின் இழப்புக்களோ அனந்தம். இதனைத் தொடர்ந்து பல இனக் கலவரங்களால் தமிழ் பேசும் மக்கள் செய்வது என்ன எனத் தெரியாது விழித்தனர். 1958 இல் பாணந்துறையில் இந்து மதக் குரு கொல்லப்பட்டார். 2007 இல் வவுனியாவில் இந்து மதகுரு சுடப்பட்டார். இவ்வாறு இந்து மதக் குருமாரும் தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்ட காலம் இருந்தது.

1977 இல் இலங்கைக் குடியரசில் முதலாவது அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது. அதிலே சேர் ஐவர் ஜெனிங்ஸால் ஆக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியலமைப்பில் இருந்த சிறுபான்மை இனத்தவரின் உரிமைகள் பற்றிய பிரிவு 29 உப பிரிவு 2 முற்றாகவே இல்லாமற் செய்யப்பட்டது. அதாவது சிறுபான்மையினருக்கு உரிமை இல்லை என்பதாகும்.

மேலும் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் மூலம் பல்கலைக்கழக அனுமதி என்பது மாணவ சமுதாயத்துக்கும் பெற்றோருக்கும் பேரிடியாக அமைந்தது.

இவை காரணமாகத் தமிழ் இளைஞர் விரக்தியுற்றனர். இதனால் 5 விதமான இளைஞர் இயக்கங்கள் உருவாகின. அதனால் ஏற்பட்ட விளைவே இனக்கிளர்ச்சி யுத்தம். இதிலே இருசாராருக்கும் இழப்புக்கள் அதிகம். ஆனால், தமிழ் மக்களுக்குக் குரல் கொடுக்க ஒருவருமே இல்லை.

நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் கொழும்பில் இருந்து கட்டளைகளைப் பிறப்பிப்பதே அன்றும் இன்றும் உள்ளது. உதாரணமாக இதனால் ஆனையிறவு சோதனைச் சாவடியில் நாட்கணக்காக சோதனைக்காக தெற்கில் இருந்து வடக்கிற்கும் வடக்கில் இருந்து தெற்கிற்கும் உணவுப் பண்டங்களை ஏற்றிவந்த லொறிகளும் அடங்கும். இதனால் விற்பனை திணைக்களத்திற்கும் தனியாருக்கும் கோடிக்கணக்கான நட்டம் ஒரு காலத்தில் இருந்தது. வாழைப்பழம், மாம்பழம், வெங்காயம், மீன், முட்டை வடக்கிலிருந்தும், மரக்கறிவகைகள் தெற்கிலிருந்தும் கொண்டு வரப்பட்டு ஈற்றில் பழுதடைந்து வீசப்பட்டது. இதற்கு சரியான உபதேசம் கொடுத்தமையால் லொறிகள் ஏற்றப்பட்ட மறுநாளே வடக்கும் தெற்கும் சென்றன. 485 ரூபாவுக்கு விற்கப்பட்ட மீன் 4 நாட்களில் 365 ரூபாவாக வந்தமையை ஒருவர் தெரிவித்ததை இங்கு கூறலாம்.

நிர்வாகம் சரியாகி இயங்கினால் விவசாயி, மக்கள் பயனுறுவர். நாட்டில் பொருளாதாரம் விருத்தியடையும். நாட்டின் அமைதியை சிங்களம் மட்டும் சட்டம் குலைத்தது. பின்னர் நிர்வாக நிலைப்பாடாக வடக்குக் கிழக்கிற்கு மாகாண நிர்வாகம் எனக் கொடுத்தனர். இது செயற்படவில்லை. வடக்குக் கிழக்கிற்கு எனக் கொண்டுவந்த மாகாண ஆட்சி இன்று இலங்கையில் ஏனையபகுதிகள் செழிப்பாக உள்ளன.

எனவே இப்பொழுது சமாதானம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அரசகருமமொழியியல் திணைக்களம் சிங்களம், தமிழ்மொழிகளுக்குரிய பாடத்திட்டங்களை வகுத்து நாடு பூராகவும் கற்பிக்கின்றது. அதேபோல தமிழ்மொழிக்குரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். மாணவ சமுதாயத்துக்கான கல்விக்குரிய வழிமுறைகளை மேலும் கொடுக்கவேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை நல்கவேண்டும். இவைகளை முன்வைத்து ஜனநாயகப் பாதைக்குரிய மாகாண சபை, கிராம சபைகளை சரியான முறையான தேர்தல் மூலம் அமைக்க வேண்டும். இவைகளால் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் இனம் மீண்டும் ஒன்றாக வாழும்.

கருத்துகள் இல்லை: