வெள்ளி, 3 டிசம்பர், 2010

அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? திருமாவளவன் ஆவேசம்!


ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்,
தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவையில் விவாதிக்கலாம் என்று கூறியபோதும் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி இருப்பது ஜனநாயக விரோத செயல். மத்திய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஜோரி ஆகியோர் என்ன நடவடிக்கையை பின்பற்றினார்களோ, அதையே ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர்.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு

வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறோம். கூட்டணியில் எந்த கட்சியை சேர்ப்பது என்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார். கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

விடுதலை சிறுத்தை கட்சியில் 42 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தமிழ் இறையாண்மை மாநாடு சென்னையில் டிசம்பர் 26ந் தேதி நடைபெறுகிறது. தமிழுக்கு என தனி தாயகம், தமிழ் இனம் தேசிய இனமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறும் என்றார்.

கருத்துகள் இல்லை: