சனி, 4 டிசம்பர், 2010

மாறுவேடத்தில் மேர்வின் அடுத்த வாரம் முதல் நடமாடுவாராம்!!

மக்கள் முன் மாறுவேடம் அணிந்து சென்று குறைநிறைகளை அறிந்துகொள்ளும் தனது அதிரடி நடவடிக்கை அடுத்தவாரம் முதல் ஆரம்பமாகுமெனத் தெரிவித்த மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, எதிர்க்கட்சியினரின் வீடுகளில் கூடத்தான் மாறுவேடத்தில் இருப்பேன் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இந்தியாவில் அக்பர் மன்னன் மாறுவேடங்களில் நடமாடியே மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டான்.  பல்வேறு வேடங்களிலும் சுற்றித்திரிந்த அவர் மன்னன் மக்களுடன் மக்களாக உலாவியே பலகுறை நிறைகளை அறிந்து தனது கட்சியை நல்லாட்சியாக்கினான்.
புத்தர், இயேசு, முஹம்மது நபி, காந்தி, நேரு, லெனின் உள்ளிட்டோர் மக்கள் போற்றி வணங்கும் கடவுள்கள், தலைவர்கள் எல்லாம் மக்கள் தொடர்பை பேணியவர்கள். அதுபோலவே எனக்கும் அந்தப்பணி கிடைத்ததுள்ளது.அடுத்த வாரம் முதல் நான் மாறுவேடமணிந்து மக்கள் மத்தியில் நடமாடவுள்ளேன்.
வீடுகளுக்குள்ளிலிருந்து கணவன், மனைவி உரையாடலைக் கேட்பேன். காதலர்களின் பேச்சைக் கேட்பேன். எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்குள் கூட இருப்பேன். அப்படி இருந்தால் தான் மக்களின் குறைநிறைகளை என்னால் அறிந்துகொள்ளமுடியும். ஏனெனில் நான் 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு எனது அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
முன்னர் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதனால் தான் பலர் இன்று எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். நாம் சிறு சிறு குற்றங்கள் செய்ததால் அரசில் இருக்கின்றோம். இன்று எமக்கு வழங்கப்படும் அமைச்சுகள், வாகனங்களைப் பார்த்து எதிர்க்கட்சியினர் பொறாமைப்படுகின்றனர். அதனால் தான் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.ஜயலத் ஜயவர்தனவுக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் தான் சபையில் நான் இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர் கழுத்தில் என் கை இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: